அழகர் மலையில் இருந்து வரப்போகும் கள்ளழகர்... வரவேற்க தயாராகும் மதுரைவாசிகள் - என்னென்ன ஏற்பாடுகள்
அழகர் கோவில் கள்ளழகர் சித்திரைத்திருவிழா வரும் 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மதுரை: வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வரப்போகிறார் கள்ளழகர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வைகையில் இறங்க வரும் கள்ளழகரை வரவேற்க மதுரைவாசிகள் தயாராகி வருகின்றனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிப்பதற்காக வருகை தரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல்16ஆம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.
சித்திரை திருவிழாவினை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் நேற்று கொட்டகை மூகூர்த்தமானது பல்வேறு பூஜைகளுடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் அனுமதியுடன் கொட்டகை முகூர்த்தம் வெகுவிமர்சையாக நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எந்த நாளில் என்ன விஷேசம்
சித்திரை திருவிழா குறித்து பேசிய கோவில் துணை ஆணையர் அனிதா, திருவிழா 14 ம் தேதி தொடங்கி 21ம் தேதி திருமஞ்சனத்தோடு திருவிழா நிறைவு பெறுகிறது 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரானா பெருந்தொற்று நடைபெறுவதால் மக்கள் ஆர்வத்தோடு உள்ளதாக கூறினார். ஏப்ரல் 14 அழகர் மலையில் இருந்து ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி மதுரைக்கு பல்லாக்கில் புறப்படுகிறார். அதிர்வேட்டு முழங்க அழகர் கிளம்புவார். ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை நடைபெறும். மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்கொண்டு அழைப்பார்கள்.

வைகையில் இறங்கும் அழகர்
16ஆம் தேதி சனிக்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17ஆம் தேதி வண்டியூர் தேனுர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார்.

தசாவதார காட்சி
அன்றைய தினம் இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் காட்சி தருகிறார். 18 ஆம் தேதி திங்கட்கிழமை மோகனாவதாரத்திலும் இரவு கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லாக்கில் அழகர் கோவிலுக்கு திரும்புகிறார். 19ஆம் தேதி அழகர் மலைக்கு செல்கிறார் கள்ளழகர்.

அழகர் இருப்பிடம் அறிய ஜிபிஎஸ்
செய்தியாளர்களிடம் பேசிய அனிதா, வரும் 14 ஆம் தேதி மாலை புறப்பாடாகி ஒவ்வொரு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார். கள்ளழகர் புறப்பாட்டின் போது 456 மண்டகப்படிகள் உள்ளன. 7-8 மண்டகப்படிகள் புதிதாக கேட்கப்பட்டுள்ளனஅது பரீசீலனை செய்யப்படும், கள்ளழகர் புறப்பாடு எதிர்சேவையின் போது GPS முறையில் புதிய லிங்க் ஒன்று தொடங்கப்பட்டு அழகர் எங்கு உள்ளார், எந்த மண்டகப்படியில் உள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

மதுரை காவலன் மொபைல் ஆப்
இதேபோன்று மதுரை காவலன் என்ற மொபைல் ஆப் வழியாகவும், கோவில் இணையதளம் மற்றும் தனி லிங்க் மூலமாகவும் அறிந்துகொள்ள ஏற்பாடு உள்ளது. கள்ளழகர் வருகை தரும் மண்டகப்படிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மண்டகப்படி பின்புறம் சேதமடைந்துள்ளதால் அங்கு மக்கள் கூடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் பீய்ச்சி அடிப்பது
கள்ளழகர் புறப்பாடு மற்றும் எதிர்சேவையின் போது பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் சாமிக்கு தண்ணீர் பீய்ச்சுவதை பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் மூலமாக தயாரிக்கப்படும் பாரம்பஉரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் எனவும், நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால் அழுத்தம் அதிகமாகி சாமி சிலை சேதாரம் அடைவதால் பக்தர்கள் அதனை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் துணை ஆணையர் அனிதா வேண்டுகோள் விடுத்தார். மேலும் நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து காவல்துறை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications