பித்ருக்களைப் போற்றும் மஹாளய பட்சம் இன்று
மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை முதல் அமாவாசை முடிய பதினைந்து நாட்கள் பித்ரு பூஜை (முன்னோர்களை வணங்குதல்-தர்ப்பணம்) செய்ய வேண்டிய நாட்களாகும். மேற்கண்ட பதினைந்து நாட்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம்செய்வது சிறப்பு..
மஹாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாட்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பு, இந்நாட்களில் தர்ப்பணம் விட முடியாதவர்கள் மற்ற ஏதாவது ஒரு நாளில் மஹாளய பட்சத்திற்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காக காத்திருப்பார்கள் என்பது ஐதீகம். மஹாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும்.
மஹாளய பட்சத்தின் விசேஷ நாட்கள்.
ஆவணி 28 - 13-09-2014 - சனி கிழமை - மஹா பரணி
ஆவணி 31 - 16-09-2014 - செவ்வாய் கிழமை - மத்யாஷ்டமி
புரட்டாசி 01- 17-09-2014 - புதன் கிழமை - மஹா வியதீபாதம்
இவை அனைவருக்கும் பொதுவானது
புரட்டாசி 01- 17-09-2014 - புதன் கிழமை - அவிதவா நவமி - மனைவியை இழந்தவர்களுக்கு
புரட்டாசி 04 - 20-09-2014 - சனி கிழமை - சந்நியஸ்தமாளயம் - சந்நியாசிகளுக்கு
புரட்டாசி 05 - 21-09-2014 - ஞாயிறு கிழமை - கஜச்சக்ஷமயயாளயம் - கணவரை இழந்தவர்களுக்கு
புரட்டாசி 06 - 22-09-2014 - திங்கள் கிழமை - சஸ்த்ரஹதமாளயம் - துர்மரணம் நேரிட்டவர்களுக்கு
பித்ரு தர்ப்பணம்
பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம்.
பூலோகம் வரும் முன்னோர்கள்
மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்க்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம்.
முன்னோர்களின் வருகை
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.
இல்லத்தை சுத்தமாக்குவோம்
இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.