ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவம் - நெல்லளவு கண்டருளும் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். அதேபோல, இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் ஞாயிறன்று தொடங்கியது
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான 7ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளி அருள்பாலிக்கிறார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உங்களவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில்.
5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள் என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. இந்திய கோயில்களிலேயே மிக உயரமானதாக இருக்கும் இக்கோவிலின் கோபுரம் 1987 ஆம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது.
இங்கு கம்பராமாயண மண்டபம் இருக்கிறது. இங்கு தான் கவிச்சக்ரவத்தி கம்பன் தன் கம்பராமாயணத்தை அரங்கேற்றம் செய்து அந்த நரசிம்ம மூர்த்தியாலேயே பாராட்டப்பெற்றார். இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது.
இந்த கோவிலின் இறைவனான ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் தான் ஸ்ரீவில்லிபபுத்தூரில் பிறந்து கோதை என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியாப் அரங்கனுள் ஐக்கியமானாள். ஸ்ரீரங்கநாதரின் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக்கோவிலுக்கு வந்து ரங்கனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கனிடம் ஐக்கியமானாள். இதன் காரணமாகவே துலுக்க நாச்சியார் என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதமும் விழாக்கள் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் ஞாயிறன்று தொடங்கியது. இந்த விழா வருகிற 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார். அதன்பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். தினமும் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணிவரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
விழாவின் நிறைவு நாளான 9ஆம் நாள் நவம்பர் 1ஆம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார்.
அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.
வானமாமலை பெருமாள் கோவில் ஊஞ்சல் உற்சவம்
வானமாமலை பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் இது 48வது திவ்ய தேசம் ஆகும். இக்கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் பெயர் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர். உற்சவர் தெய்வநாயகப் பெருமாள். இத்தலத்திற்கு திருச்சிரீவரமங்கை, திருவரமங்கை, திருச்சிரீவரமங்கள நகர், தோத்தாத்திரி சேத்திரம், வானமாமலை என பல பெயர்கள் உள்ளன.
இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணெய்யை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும். இங்கு ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.