அத்திரவரதரால் மழை வருமா? ஆவலுடன் காத்திருக்கும் காஞ்சி மக்கள் #Athivaradar
அத்திவரதர் தரிசனம் முடிந்து நிறைவு நாளன்று மழை வருமா என்று காஞ்சிபுரம் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை மட்டுமே கிடைக்கும் என்பதால் காஞ்சிபுரத்திற்கு படையெடுத்து வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 38 ஆம் நாளான நேற்று மட்டும் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 71 லட்சம் பக்தர்கள் அத்திவரதரின் தரிசனம் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். அத்திவரதர் மீண்டும் குளத்திற்குள் போகும் நாளில் மழை வர வாய்ப்பு இருப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர் ஜூலை 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 48 நாட்கள் முடிந்த பின்னர் அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு மீண்டும் ஆனந்த சரஸ் குளத்திற்குள் சென்று விடுவார்.
அத்திவரதர் 1854ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு காட்சி தந்து வருவதாகத்தான் வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. ஆனால் 1389ஆம் ஆண்டு முதலே அத்தி வரதர் காட்சி தந்து கொண்டிருப்பதாக காஞ்சி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்து காட்சி தந்திருக்கிறார். நூற்றாண்டுக்கு ஒருமுறை இரண்டு தடவை காட்சி தந்த அவர் 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தை விட்டு வெளியே எடுக்கப்பட்டாராம். பின்னர் 60 ஆண்டுகளாகி தற்போது 40 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
ஒவ்வொருமுறையும் அத்தி வரதர் தரிசனம் முடிந்து மீண்டும் குளத்திற்குள் செல்லும் போதெல்லாம் நல்ல மழை பெய்திருக்கிறதாம். 1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி முதல் ஆகஸ்டு 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், கடைசி நாள் இரவு அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்பட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நீரில்லாமல் இருந்த அந்தக் குளத்தின் முதல் படி மூழ்கும் அளவுக்கு, ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்ததாக காஞ்சியில் வசிக்கும் மூத்த குடிமக்கள் தெரிவிக்கின்றனர்,
இந்த ஆண்டும் 48 நாள் தரிசனத்துக்கு பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு அனந்த சரஸ் குளத்திற்குள் பரிகார பூஜைகளுடன் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டவுடன் மழை பெய்யும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த முறையும் கண்டிப்பாக மழை வரும். அடுத்த 5 வருடத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை எதுவும் இல்லாமல், நாடு செழிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
9 நாட்கள் விடுமுறை
காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளிகல்லூரிகளுக்கு வருகிற செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13 -16) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். நாளை தொடங்கி மொத்தம் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17ஆம் தேதியன்று அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். பரிகார பூஜைகள் முடிந்த உடன் ஆனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுவரை 70 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இனி 8 நாட்களில் வரும் பக்தர்களையும் சேர்த்து ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை அத்திவரதரை 1 கோடி பேர்வரை தரிசனம் செய்திருப்பார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.