உணவு வீணாகிறதா? - ஸ்ரீ அன்னபூரணியை வணங்குங்கள்!!
ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறையும்
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: உணவுப்பொருட்களை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சுப்ரமணிய பாரதியார் கூறியுள்ளார். ஆனால் நாடு முழுவதும் ஏராளமானோர் உணவுப் பொருட்கள் வீணாக்குகின்றனர்.
உலகில் மனிதர்களுக்காகத் தயாரிக்கப் பட்ட உணவில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (1.3 பில்லியன் டன் ) இழப்பாகவோ கழிவாகவோ செல்கிறது என புள்ளிவிவரம் கூறுகிறது.
உற்பத்தியாகிற அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் பாதிக்கும் மேலாக உணவு தயாரித்த பிறகு உண்ணாமலே கழிவாக செல்கிறது.
விவசாயத்திற்குத் தான் அதிக அளவிற்கு தண்ணீர் தேவைப்படுகிறதாம். இந்த உணவுப் பொருட்கள் வேஸ்ட் என்பதோடு நில்லாது, இதற்கு பாதிக்கும் அதிக அளவிலான தண்ணீர் தேவையும் இழப்பாகி விடுகிறது.
உணவுப் பொருட்களை வீணாக்குவதால் வெறும் பணச் செலவு மட்டுமல்ல. மீத்தேன் அதிக அளவில் சுற்றுப் புறத்தை கெடுக்கிறது.
வளரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உணவுப் பொருட்களை முறையாகப் பதப்படுத்த இயலாமலும், போக்குவரத்து மூலமும்தான் அதிக அளவில் உணவு இழப்பாகிறதாம்.
வளர்ந்த நாடுகளில் இதற்கு பிரச்சினை இல்லை. உணவாகத் தயாரித்த பின்னரே அதிக அளவில் இழப்பாகிறது.
ஜோதிட ரீதியாக உணவுப்பொருட்களை வீணடிப்பவர்கள் யார்?
ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். சுவையான உணவு வகைகளின் காரகர் சுக்கிரன் ஆவார். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைவதும் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. சந்திர பகவான் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12 தொடர்புகள் பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்று அல்லது நீசமடைந்து நிற்க ஜாதகர் பால், தயிர், அரிசி சோறு போன்ற பொருட்களை தினமும் வீணாக்குவார்.
2. ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவு பொருட்கள், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை வீணாக்கிடுவார்.
3. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான சாப்பாடு வகைகளை கூட வீணாக்கிடுவார்.
4. ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார்.
5. ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டில் நிற்க இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றை வீணடிப்பார்.
6. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் உணவகங்களில் உண்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார்.
7. ஒருவர் ஜாதகத்தில் சனி இரண்டாம் பாவத்தில் நிற்க வீட்டில் இருக்கும் போது குறைவாகவும் வெளியில் செல்லும் போது அதிகமாகவும் உண்பார். கிழங்கு வகைகள் மற்றும் எண்ணையில் செய்த பலகாரங்களை அளவுக்கதிகமாக செய்து வீணடிப்பார்.
8. ஒருவர் ஜாதகத்தில் ராகு இரண்டாமிடத்தில் நிற்க மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்டு பாரம்பரிய உணவுகளை வீணடிப்பார்.
9. ஒருவர் ஜாதகத்தில் இரண்டில் கேது நிற்க இவருக்காக உணவு செய்து வருந்துவதுதான் மிச்சம். உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடைசியில் ஏதோ ஒரு பழைய உணவை உண்டுவிடுவார்.
10. துலா லக்னமாக இருந்து தர்மகர்மாதிபதியான சந்திரன் இரண்டாம் பாவத்தில் நீசம் பெற்றால் விருந்து என்ற பெயரில் உணவு பொருட்களை வீணடிப்பார்
11. எந்த ராசி நேயர்களாக இருந்தாலும் சந்திராஷ்டம தினங்களில் சாப்பிடாமல் வீணடிப்பார்
12. கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்திலும் உணவை குறிக்கும் சந்திரனின் ஆட்சிவீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நிற்க அஞ்சாமல் உணவுப்பொருட்களை வீணடிப்பார்.
உணவுப்பொருள் வீணாவதை தடுக்கும் பரிகாரங்கள்:
1. உணவுப்பொருட்களை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.
2. சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணவது குறையும்.
3. அவரவர்கள் கிராம தேவதைக்கு பொங்கல் வைத்து வழிபட உணவு வீணாவது குறையும்.
4. அந்தந்த வருட தான்யாதிபதியை பஞ்சாங்கபடி வணங்கிவர உணவு பஞ்சம் நீங்குவதோடு உணவு வீணாவதும் குறையும்.
5. உலகத்துக்கே படியளந்துவிட்டு படியை தலையில் வைத்து படுத்திருக்கும் சுக்கிர ஸ்தல மூர்த்தி ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.