சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் துளசி,அருகம்புல்,வேப்பிலை,மஞ்சள்,வில்வம்,விபூதி - கொரோனா அழிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் துளசி,அருகம்புல்,வேப்பிலை,மஞ்சள்,வில்வம்,விபூதி வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர்: பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் வைத்து பூஜிக்கப்படுகிறது. கொரோனா பரவி வரும் இந்த கால கட்டத்தில் நோய் நீக்கும் பொருட்களான துளசி,அருகம்புல்,வேப்பிலை,மஞ்சள்,வில்வம்,விபூதி வைத்து பூஜை செய்யப்படுவதால் கொடிய நோய்கள் முருகன் அருளால் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் குறிப்பிடும் பொருள், இந்தப் பெட்டியில் வைத்து பூஜிப்பது, வழக்கமாக உள்ளது.
ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஒரு தாக்கம் அல்லது நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாக அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பக்தர் கனவில் பொருள்
கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் மக்களின் நடமாட்டம் குறைந்தபாடில்லை. கிராமங்களில் மக்கள் கொரோனா அச்சம் காரணமாக வேப்பிலை தோரணம் கட்டி வைத்துள்ளனர். தெருக்களில் வாசல்களில் மஞ்சள் நீர் தெளித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப்பெட்டியில் துளசி,அருகம்புல்,வேப்பிலை,மஞ்சள்,வில்வம்,விபூதி வைத்து பூஜை செய்ய பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவு வந்துள்ளது.

சுப்ரமணியசுவாமி
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

பூஜை செய்யப்படும் பொருட்கள்
உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் வேறு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருள் வைக்கப்பட்டிருக்கும்.

சமுதாயத்தில் தாக்கம்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அது நேர்மறையாகவும் இருக்கும் எதிர்மறையாகவும் இருக்கும்.

போர் சூழல்
முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்டபோது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்டபோது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பன் மடங்கு உயர்ந்தது.

தண்ணீர் பூஜை
தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி ஏற்பட்டு வெள்ளத்தால் ஏராளமானோர் மடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் ஏதாவது ஒருவகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

சிறை சென்ற விஐபி
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. அதே ஆண்டில் பிப்ரவரி மாதம் சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு சென்றார்கள்.

குங்குமம்
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பும், செம்பும் வைத்து பூஜை செய்யப்பட்டது. செப்டம்பர் மாதம் செம்மண் வைத்து பூஜை செய்ய உத்தரவிடப்பட்டது. வெள்ளி வேல்வைத்து பூஜை செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் குங்குமம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா சென்னிமலை பகுதியைச்சேர்ந்த நாகேஸ்வரி,31 என்ற பக்தரின் கனவில் உத்தரவான வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

தெய்வங்களின் ஆசி
உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு தெய்வங்களை குறிக்கும் விதமாக உள்ளது. அதாவது வில்வம் சிவனையும், வேப்பிலை மாரியம்மனையும், துளசி பெருமாளையும், அருகம்புல் விநாயகரையும், விபூதி முருகனையும் குறிக்கிறது. இதை தவிர மஞ்சள் தூள் கிருமி நாசினியாகவும், மங்கலகரமானது என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

முடிவுக்கு வரும் கொரோனாவின் தாக்கம்
கண்ணுக்குத் தெரியாத நோய் கிருமியுடன் உலக மக்கள் போராடி வருகின்றனர். கொரோனா அரக்கனை அழிக்க தெய்வங்களின் சக்தி ஒன்று சேர்ந்து உலகத்தை காப்பார்கள் என்றும், கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். இதனுடைய தாக்கம் வரும் காலங்களில் தெரியும் எனவும் சிவன்மலை ஆண்டவர் கோவில் குருக்கள் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications