நரசிம்மர் ஜெயந்தி 2021: நோய், கடன், எதிரி தொல்லை தீர்க்கும் நரசிம்மர் ஆலயங்கள் - மனதார தரிசிக்கலாம்
பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்னைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சென்னை: இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதை உணர்த்தும் அவதாரம் நரசிம்மரின் அவதாரம். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் மறையும் நொடியில் மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். இந்த ஆண்டு நரசிம்மர் ஜெயந்தி இன்று மாலை முதல் செவ்வாய்கிழமை வரை நரசிம்மர் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.
பாலியல் புகாரில் சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி... ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி ட்விட்டரில் விளக்கம்
மச்சம், கூர்மம், வராகம் என அவதாரம் செய்த மகாவிஷ்ணு சிங்க முகத்தோடும் மனித தலையோடும் தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக அவதரித்தார்.
நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் மாலை 6:30 மணி வரையாகும். நரசிம்மர் ஜெயந்தி நாளில் விரதமிருந்து மாலை நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் நோய்கள் நீங்கும், கடன், எதிரிகள் பிரச்சினை தீரும்.
மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து ஹிரண்யனை வதம் செய்த பிறகு, பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார்.
நரசிம்மர் ஆலயங்கள்
ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி நன்னாளில், நரசிம்மர் அருள் புரியும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளு ம் நடைபெறுகின்றன. திங்கட்கிழமையான இன்றைய தினம் மாலை முதல் செவ்வாய்கிழமையான நாளை வரை நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் தமிழகத்தில் உள்ள முக்கிய நரசிம்மர் ஆலயங்களைப் பார்க்கலாம்.
நரசிம்மர் வடிவங்கள்
திருமாலின் அவதாரங்களிலேயே மிகவும் உக்கிரமான அவதாரமாக கருதப்படுவது நரசிம்மர் அவதாரம். நரசிம்மரை, பலரும் பல வடிவங்களில் வழிபாடு செய்து வருகின்றனர். அவற்றில் 9 முக்கிய வடிவங்களை, நவ நரசிம்மர் என்று அழைக்கின்றனர். உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், வீர நரசிம்மர், யோக நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், கோப நரசிம்மர், குரோத நரசிம்மர், விலம்ப நரசிம்மர் என காட்சி தருகிறார் நவ நரசிம்மர்.
நரசிம்மர் ஆலயங்கள்
பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி, பரிக்கல், அந்திலி, சோளிங்கர், சிங்கப்பெருமாள்கோவில், நாமக்கல், சிந்தலவாடி ஆகியவை அஷ்ட நரசிம்மர் தலங்கள். இதில் முதன்மையானதும், அஷ்ட நரசிம்மர் தலங்களில் நடுநாயகமாகமானதுமாக உள்ளது பூவரசங்குப்பம். இதன் கிழக்கில் சிங்கிரிக்குடியும், மேற்கில் பரிக்கல் மற்றும் அந்திலியும், வடக்கில் சோளிங்கர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவிலும், தெற்கில் நாமக்கல் மற்றும் சிந்தலவாடியும் உள்ளன.
எந்த வரிசையில் தரிசிக்கலாம்
பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்னைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. காலையில் பரிக்கல், நண்பகலில் பூவரசங்குப்பம், மாலையில் சிங்கிரிக்குடி என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்.
கீழப்பாவூர் நரசிம்மர்
தட்சிண அகோபிலம் என அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரத்தில், நரசிம்மர் திரிபங்க நிலையில், ஹிரண்ய சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்தில், 16 திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரம் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, தலையில் கிரீடத்துடன் காட்சிதரும் நரசிம்மரை நாரதர், பிரகலாதன், அவனுடைய தாய், தாத்தா காசியப்ப மகரிஷி ஆகியோர் சரணடைந்து வணங்கி நிற்க, அவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் நரசிம்மர். உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.
தன்வந்திரி லட்சுமி நரசிம்மர்
துஷ்ட சக்திகளின் பாதிப்புகள், மாந்திரீக கோளாறுகள்,ஏவல்கள் பில்லி போன்றவற்றின் தீய சக்திகளின் அதிர்வு முற்றிலும் நீங்கவும் தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் விலகவும், எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத கடன் பிரச்சனையும் பண பிரச்னையும் விரைவில் தீருவதற்காக வருகிற 25.05.2021 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு மாபெரும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் மற்றும் கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு நவ கலச திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து லக்ஷ்மி நரசிம்மருக்குரிய பானகம் நெய்வேத்யம், துளசி மாலை,தாமரை மலர்கள், எலுமிச்சை பழம், கொண்டு பூஜையும், 1008 நெய் தீபம் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.