ஸ்ரீராமநவமி - சூரியவம்சத்தில் பிறந்த ராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா
விஷ்ணு புராணத்தின்படி இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி ஆவார். அவருடைய மகள் அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார். சூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன்.
சென்னை: ரகுவம்சத்தின் மூலம் ராமபிரானுக்கு முன் காலத்திலேயே வசிஷ்ட முனிவர், கௌஷக முனிவர் போன்றவர்கள் இருந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ராமர் அவதாரம் நிகழ்ந்த ஸ்ரீராம நவமி நாளில் ராமரின் முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினரே ரகுவம்சத்தின் கதாநாயகர்கள். சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியது என்றும் ராமபிரானுடைய மூதையோர் யார், அவர்கள் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள், ரகுவம்சத்தில் பிறந்தவர்களின் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்ன என்பதை விளக்குபவையே ரகுவம்சக் காவியம் ஆகும்.
விஷ்ணு புராணத்தின்படி இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி ஆவார். அவருடைய மகள் அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார். சூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன். அவர் தழைத்த வம்சம் சூரியவம்சம் என அழைக்கப்பட்டது.
சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதன், வசிஷ்ட முனிவர், சத்தியத்தை காத்த ஹரிச்சந்திரன், முல்லைக்கு தேர் கொடுத்த சிபி மன்னன் மற்றும் சாகரா போன்றவர்கள் ஆவர். சூரியனின் மகன் மனுவிற்கு அறுபது மகன்கள் பிறந்து இருந்தாலும் அவர்களுக்குள்ளேயே எழுந்த பகையினால் அவர்களில் ஐம்பது மகன்கள் மாண்டார்கள். மீதி வாழ்ந்திருந்த பத்து மகன்களில் ஒருவரே இஷ்வாகு என்பவர்.
சூரிய வம்சத்தின் முதல் மன்னனாக பூமியிலே த்ரேதா யுகத்தில் சூரியனின் பேரரான இஷ்வாகு எனப்பட்டவர் ஆட்சியில் அமர்ந்தார். அது முதல் இஷ்வாகுவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களை இஷ்வாகு பரம்பரை என்று அழைத்தார்கள். அவர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இஷ்வாகுவை தொடர்ந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த பரம்பரையை அவர் பெயரிலேயே அமைந்த இஷ்வாகு ராஜவம்சம் என்றே அழைத்தார்கள்.
சராயு நதிக்கரையை ஒட்டி இருந்த கோசல நாட்டை ஸ்தாபனம் செய்து அயோத்தியாவை அதன் தலைநகராகக் கொண்டு ஆண்டார் சூரிய வம்சத்தின் முதல் மன்னனான இஷ்வாகு. ராமபிரான் தோன்றுவதற்கு முன்னர் ஆட்சி செய்த இஷ்வாகு வம்சத்தை சார்ந்த மன்னர்கள் 118 பேர் ஆவர். அந்த 118 மன்னர்களுக்கு இடையில் ராமனுக்கு முன்னர் ஆண்டு வந்திருந்த, இஷ்வாகு வம்சத்தின் 58 ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட திலீபன் என்ற மன்னனின் காலத்துக்குப் பின்னரே இஷ்வாகு என்ற வம்ச ஆட்சி மறைந்து அந்த இஷ்வாகு வம்சத்தின் ஒரு பிரிவாக ரகுவம்சம் என்ற புது வம்சம் துவங்கியது.
ராமரின் முன்னோர்கள்:
1. பிரம்மாவின் மகன் - மரீசீ
2. மரீசீயின் மகன் - கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் - விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன் - மனு
5. மனுவின் மகன் - இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் - விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன் - புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் - அணரன்யா
9. அணரன்யாவின் மகன் - ப்ருது
10. ப்ருதுவின் மகன் - விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் - ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் - யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் - ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் - வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் - குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் - ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன் - ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் - நிகும்ப்
20. நிகும்பின் மகன் - சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் - க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் - ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் - யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் - மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் - அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் - ஹரிதா
27. ஹரிதாவின் மகன் - த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் - ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன் - அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் - ஹர்யஷ்வா-2
32. ஹர்யஷ்வாவின் மகன் - வஸுமான்
33. வஸுமாவின் மகன் - த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் - த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் - திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் - ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரனின் மகன் - ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் - ஹரித்
39. ஹரித்தின் மகன் - சன்சு
40. சன்சுவின் மகன் - விஜய்
41. விஜயின் மகன் - ருருக்
42. ருருக்கின் மகன் - வ்ருகா
43. வ்ருகாவின் மகன் - பாஹு
44. பாஹுவின் மகன் - சாஹாரா
45. சாஹாராவின் மகன் - அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் - அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் - திலீபன்
48. திலீபனின் மகன் - பகீரதன்
49. பகீரதனின் மகன் - ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் - நபக்
51. நபக்கின் மகன் - அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் - சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் - ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் - சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன் - ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் - மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன் - சர்வகாமா-2
59. சர்வகாமாவின் மகன் - அனன்ரண்யா-3
60. அனன்ரண்யாவின் மகன் - நிக்னா
61. நிக்னாவின் மகன் - ரகு
62. ரகுவின் மகன் - துலிது
63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு-2
65. ரகுவின் மகன் - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன்
67. தசரதனின் மகன் - ஸ்ரீராமன்
அயோத்தி மன்னர் தசரதனுக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். புத்திரபேறுக்கான யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரதனின் முதல் மனைவி கோசலை வயிற்றிலிருந்து மகாவிஷ்ணு ஸ்ரீராமராகப் அவதரித்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமித்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இரட்டையர் பிறந்தனர்.