ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி - ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சொர்க்கவாசலில் செல்ல அனுமதி
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பன்று ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் வழியாக செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைணவ திருத்தலங்கள் 108 முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் எனவும் ஆழ்வார்கள் பதின்மர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாக சிறப்புடன் விளங்குகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பகல்பத்து நிகழ்ச்சியில், நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். அதன்படி விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று காலை நம்பெருமாள் முத்துக்குறி எனப்படும் முத்து சாய்வுக்கொண்டை, முத்தங்கி, முத்து அபயஹஸ்தம் உள்ளிட்ட முத்து ஆபரணங்கள் சூடி, மூலஸ்தானத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.
நம்பெருமாளுக்கு பாசுரம்
நம்பெருமாள் திருமங்கையாழ்வாரின் திருவாய் திருமொழி பாசுரங்களை கேட்டருளி, அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். அரையர்கள் சேவையினை அடுத்து, இரவு மூலஸ்தானத்தை சென்றடைவார்.
நம்பெருமாள் தரிசனம்
மூலவரின் முத்தங்கி சேவையினை வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் கண்டு மகிழ்ந்த பக்தர்களுக்கு, நம்பெருமாள் உற்சவரும் முத்தங்கி மற்றும் முத்து சாய்வுக் கொண்டையணிந்து சேவை சாதித்ததை ஆயிரக்கணக்காண பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
டிச. 25 அதிகாலையில் அனுமதியில்லை
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பன்று ஆன்-லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை காலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி
வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் முக்கிய திருநாளான 25ஆம் தேதி பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் செல்வதற்கும், மூலவர் முத்தங்கி சேவை சேவிக்க இலவச தரிசன வழி மற்றும் ரூ.250-கட்டண சீட்டு வழியில் செல்வதற்கு ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை
இத்திருநாட்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறையினர் ஆகியோரின் ஆலோசனையின்படி, நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விரைவு தரிசனம்
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் ஜனவரி 4ஆம் தேதி முடிய பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், விரைவாக தரிசனம் செய்திட ஏதுவாக மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் ஆகியவற்றிற்கு கோயில் இணைதளமான www.srirangam.org-ல் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு வழி தரிசனம் ஆகியவற்றிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகைதர பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேரலையில் ஒளிபரப்பு
இவ்வசதியினை பயன்படுத்தி முன்பதிவு செய்த நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பாக வருகைதர வேண்டும். வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகளை srirangam temple என்ற You Tube Channel-லிலும் உள்ளூர் தொலைக்காட்சியிலும் காணலாம்.மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் நிர்வாகம் தரப்பிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கிடையே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, போலீஸ் துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி, வேதரத்தினம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.