தை பொங்கல் 2021: அறுவடை திருநாளில் சூரியன், இந்திரன், உபேந்திரனுக்கு நன்றி சொல்வோம்
அறுவடை திருநாளாக கொண்டாடப்படும் தை திருநாளில் நாம் சூரியன், இந்திரன், உபேந்திரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மதுரை: உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் , நன்றி தெரிவிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ஒன்றாக அமர்ந்து உண்டு ஒற்றுமையாக கொண்டாடுவதே பண்டிகையின் சிறப்பாகும்.
இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடினாலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் களைகட்டும். வீடுகளை சுத்தம் செய்து வெள்ளையடித்து அலங்காரம் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி,கணுப்பிள்ளை, வேப்பிலை, கம்பு, ஆவாரம்பூ போன்றவைகளை சேர்த்து காப்பு கட்டுவார்கள்.
உத்தராயண புண்ணிய காலம்
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் தை பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இயற்கைக்கு நன்றி
ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்கும் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இயற்கைக்குப் படையல்
வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கும்,இந்திரன், சூரியன், உபேந்திரனுக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள்.
தை பொங்கல் நல்ல நேரம்
இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ஆம் தேதி வியாழன்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 8.00 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும்.
கால்நடைகளுக்கு நன்றி
ஜனவரி15ஆம் தேதி வெள்ளிக்கிழமை கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் அலங்கரித்து பொங்கல் வைக்கலாம். மாட்டுப்பொங்கல் நாளில் காலை 8 மணி முதல் 09 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 05 மணி முதல் 6 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்.