திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. மின்விளக்கு, மலர் அலங்காரத்தில் கோவில் ஜொலிக்கிறது. நேற்று மாலை 5.10 மணிமுதல் 5.30 மணிக்கு இடையே ஆகம முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
அடுத்தடுத்து பண்டிகை.. இந்த 3 மாதங்கள் மிக கவனமாக இருக்கணும்.. மத்திய அரசு வார்னிங்!
சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் ஆதிசேஷன் மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று 7 தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். இன்று காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.
பிரம்மோற்சவம் புராண கதை
திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். இதையொட்டி வைகாநஸ ஆகம விதிமுறைகளின்படி, பிரம்மோற்சவ தினங்களில் வேங்கடேசப் பெருமாளுக்குத் தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்படும். நான்கு மாடவீதிகளிலும் சுவாமி வீதி உலா வருவார்.
புரட்டாசி பிரம்மோற்சவம்
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், போக சீனிவாசமூர்த்தி என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.
சேஷ வாகன சேவை
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. முதல்நாளில் மலையப்பசுவாமி 7 தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். சேஷ வாகனம், 'தாஸானு தாஸ' பக்திக்கு எடுத்துக்காட்டு. இதில் சுவாமி எழுந்தருளி உலா வரும்போது தரிசனம் செய்தால், நம் மனதில் இருக்கும் மிருகத்தன்மை நீங்கி சாத்விகமான குணங்கள் ஏற்பட்டும். மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கை அமையும். சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். இதில் சுவாமி உலா வரும்போது, தரிசனம் செய்பவர்களுக்குக் குண்டலினி யோக பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று மாலையில் அன்னவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
கருடசேவை
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 11ஆம் தேதி கருடவாகன சேவை நடைபெற உள்ளது. பிரம்மோற்வ விழாவின் 5ஆம் நாளில் பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் எம்பெருமான் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக நாளாகும். கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. நாகதோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஆன்லைன் புக்கிங்
பிரம்மோற்சவ விழாவை காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கபடுவார்கள். புரட்டாசி மாதம் என்பதால் தமிழக பக்தர்கள் விரதம் இருந்து கோவிந்த மாலை அணிந்து பாத யாத்திரை வருவது வழக்கம். ஆனால் மாலை அணிந்திருந்தாலும் டிக்கெட் இருந்தால் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மலைப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி
அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்காக தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உண்டியல் காணிக்கை
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 21 ஆயிரத்து 784 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 681 பேர், அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 71 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்னதானம்
காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திருமலையில் உள்ள தரிகொண்ட வேங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தித்தில் அன்னதானம் வழங்கப்படும். பக்தர்களுக்காக திருப்பதி - திருமலை இடையே 200 அரசு பஸ்கள் மூலம் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.