திருவண்ணாமலை தீப திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். மாலையில் 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை முதலே பரணி தீபம் காண பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு கோயிலில் அகண்ட தீபமும், 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

பரணி தீப டிக்கெட்
பரணி தீப தரிசனத்திற்கு ரூ.500 கட்டண சீட்டுகள் 500ம் மற்றும் மகா தீபதரிசனத்திற்கு ரூ.600 கட்டண சீட்டுக்கள் 100 பேருக்கும், ரூ.500 கட்டண சீட்டுக்கள் 1000 பேருக்கும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வெளியிடப்பட்டது. கட்டண சீட்டுக்களை www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து பக்தர்கள் பெற்றுக்கொண்டனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகாலை 2 மணி முதல் 3 வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மகா தீப தரிசனம்
ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோவில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய் காணிக்கை
மகா தீபத்திற்கு நெய்யினை காணிக்கையாக செலுத்துபவர்களுக்கு மற்றும் நெய்குடத்திற்கான காணிக்கை கட்டணத்தை செலுத்துபவர்களுக்கென,
கிழக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை. திருமஞ்சன கோபுரம் நுழைவுவாயில். பேகோபுரம் அருகில் மலையேறும் பாதையின் முகப்பு ஆகிய இடங்களில் கோவில் சார்பாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, காணிக்கை நெய்யினை பெற்றுக்கொள்ளவும், கட்டணச்சீட்டு விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு தீவனம்
அக்னி தீர்த்தம் முன்புறம் மற்றும் பேயகோபுரம் ஆகிய இடங்களில் பிரத்யேகமாக கோவில் சார்பாக கோசாலை அமைக்கப்பட்டு, சேவார்த்திகள் கோவில் கால்நடைகளுக்கு தீவணங்கள் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications