வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது- 18ல் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசிவிழா ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு வரும் 18ம் தேதி அதிகாலை நடக்கிறது.
திருச்சி: 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பெருமைக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து விழா டிசம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது. 18ஆம் தேதியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
அமாவாசை முடிந்து வளர்பிறையில் பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்கிறார் மகாவிஷ்ணு. அத்தகைய சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு முக்கிய நிகழ்ச்சியாகும். இதனைக்காண லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவார்கள்.
டிச.7ல் திருநெடுத்தாண்டகம்
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது. இரவு 7 மணிக்கு கோவில் மூலஸ்தானத்தில் ரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகம் பகுதி பாடப்பட்டது. அரையர்கள் அபிநயம் வியாக்யானத்துடன் பாடல்களை பாட நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பகல்பத்து உற்சவம்
டிசம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. பகல் பத்து இரண்டாம் நாளில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் புறப்படுவார். 8ம் தேதி தொடங்கி வரும் 17ம் தேதி வரை பகல்பத்து எனப்படும் திருமொழித்திருநாள் நடக்கிறது. 2ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் பல்வகை உயர்ந்த திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நம்பெருமாள் முன் ஆழ்வார்களின் திருமொழிப்பாசுரங்களை அபிநயத்தோடு பாடிக்காட்டுவார்கள்.
அலங்காரமாய் நம்பெருமாள்
பகல் பத்து உற்சவத்தின் 10வது நாளான டிசம்பர் 17ஆம்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஏகாதசியன்று பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்ற ஆசைகளை துறக்க வேண்டும். பெண்ணாசையை துறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்துவதே மோகினி அலங்கார தத்துவம்.
பரமபதவாசல் திறப்பு
டிசம்பர் 18ஆம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார். அன்று முதல் ராப்பத்து நாட்கள் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 28ஆம்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும். வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்கேற்ப மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கிறது.