வைத்தீஸ்வரன் கோயிலில் 5 கிலோ தங்கத்தில் புதிய கொடிமரம் - பக்தர்கள் இன்றி நடந்த கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கத்தால் செய்யப்பட்ட புதிய கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் திருப்புள்ளிருக்குவேளூர் என்று பாடப்பெற்ற தலம் தற்பொழுது வைதீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் மருத்துவராய் வைத்தியநாத சுவாமியாக இருந்து அருள்பாலிக்கும் தலம். முருகப் பெருமான், செல்வ முத்துக் குமாரசுவாமி என்னும் நாமத்துடன் அருள்பாலிக்கும் தலம், நவ கிரகங்களில் செவ்வாய் பகவான் தலமாகவும் போற்றப்படுகிறது.
பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான், தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், உள்ளது. இந்த ஆலயத்தின் வில்வத்தடி மண்ணை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் வைத்து வழிபடலாம்.
இத்தல இறைவனை வணங்குவோர் அங்காரக தோஷம் நீங்கப்பெறுவர். இத்தலத் தீர்த்தமான சித்தாமிர்தகுளம் நோய் நீக்கும் ஆற்றல் கொண்டது. நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும்.
இந்த ஆலயத்தில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்போது தங்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது. கோவிலுக்கு 5 கிலோ தங்க கட்டிகள் காணிக்கையாக வரப்பெற்றதையடுத்து இதனை தகடுகளாக மாற்றும் வகையிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக 2 கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.