துன்பம் தீர்க்கும் அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி - இன்று வணங்கினால் இத்தனை நன்மைகளா?
அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கலியுகத்தில் அவதரித்த அன்னை ஆதிபராசக்தியின் அம்சம். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.
சென்னை: அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கலியுகத்தில் அவதரித்த அன்னை ஆதிபராசக்தியின் அம்சம். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர். பார்வதி தேவியின் அம்சமான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை அவருடைய அவதார தினத்தில் வழிப்பட்டு அவள் அருளால் வளமான வாழ்க்கை பெற்று வாழ அனைவரும் பிரார்த்திப்போம்.
ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும், புகுந்த வீடும் சரிசமமான சிறப்பைப் பெறுகிறது. பிறந்த இடத்தின் பெருமையை பேணிக்காக்க வேண்டிய கடமையும், புகுந்த இடத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் இங்கு போற்றப்படுகின்றனர். அப்படி.. தான் பிறப்பெடுத்த பிறந்த இடத்தின் பெருமையைக் காப்பாற்றி, அதன் வழி வந்தவர்களின் குலதெய்வமாக வணங்கப்படுபவளே ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி என்னும் பெண்தெய்வம். இவளே 'வாசவி' என்ற திருநாமத்திலும் அழைக்கப்படுகிறாள்.

ஒரு சமயம் ஈசனும் அம்பாளும் கயிலாயத்தில் வீற்றிருந்தனர். கயிலையின் முதன்மை காவலாளியான நந்தியம் பெருமான், புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார். தான் சென்றால், இறைவனுக்கு காவல் வேண்டுமே என்பதற்காக, சமதி என்ற மகரிஷியிடம், தான் வரும் வரை கயிலையின் வாசலில் காவல் காக்கும்படியும், யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார்.
சமதி முனிவரும் கண்ணும் கருத்துமாக காவல் காத்து வந்தார். அப்போது கோபத்திற்கு பிரசித்தி பெற்ற துர்வாச முனிவர், அங்கு வந்தார். அவரை சமதி மகரிஷி உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவரை, பூமியில் மனிதனாக பிறக்கும்படி துர்வாசர் சாபமிட்டார். அதன்படி சமதி மகரிஷி, பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டியாக பிறந்தார்.

அதன்பின் வந்த நாள் ஒன்றில், ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன் காலிலும் விழாமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறு செய்யாத தன்னை சபித்ததால் பார்வதி மீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.
அவர்கள் இருவரும், துர்வாசரால் சாபம் பெற்று ஏற்கனவே பூமியில் அரசராக வாழ்ந்து வந்த குசும ஸ்ரேஷ்டி- குசுமாம்பிகை தம்பதிக்கு பிள்ளைகளாக பிறந்தனர். விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர்.
வாசவாம்பா மணப் பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன் பல இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி, இந்த நாட்டிற்கு வந்தான். அவன் வாசவாம்பாவைக் கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால் அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றும், இன்னும் சில நாட்களில் தகவல் சொல்வதாகவும் கூறினார்.

பின்னர் தன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி அரசன் விவாதித்தான். பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைஸ்சியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு அதிகரிக்க, சம்மதம் தெரிவித்த 612 கோத்திரத்தார் தங்கள் குடும்பங்களுடன் ஊரை விட்டு வெளியேறினர்.
இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, தன் திருமணம் தொடர்பாக வாதிட்டு, தன் இனத்தவர்கள் பிரிந்ததை நினைத்து வேதனை அடைந்தாள். தன்னால் தான் அனைவருக்கும் வேதனை என்று நினைத்தவள், தன் குலப்பெருமை காப்பதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள். அதற்கு பெரியவர்களின் சம்மதத்தையும் வாங்கினாள்.
அதன்படி அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவியின் அக்னிப் பிரவேசம் நிகழ்ந்தது. வாசவி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.
இன்றைக்கு மக்கள் மிகவும் எதிர்ப்பார்ப்பது நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கைநிறைய சம்பளம், கௌவரமான நல்ல குடும்பம், மழலைச் செல்வங்கள், காலத்திற்கு ஏற்றவாறு திருமணம், பெயர் புகழ் செல்வாக்கு மற்றும் அமைதியான வாழ்க்கை சூழ்நிலை போன்ற பல்வேறு விதமான வசதிகளை கொண்டு வாழ வேண்டுமென ஆசைப்படுகின்றனர். மேற்கண்ட அனைத்தும் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று வாசவி ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
கோபூஜை, கலச பூஜை, கணபதி பூஜையுடன் உலக மக்கள் ஆரோக்கியத்துடனும் சௌபாக்கியத்துடனும் வாழவும் வாழ்வில் பல்வேறு விதமான வளங்களை பெறவும் வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி ஹோமம் நடைபெற்று அதை தொடர்ந்து தன்வந்திரி பீடத்தில் அருள்பாவிக்கும் ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரிக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், பஞ்சாமிருதம், எலுமிச்சம்பழம் சாறு, திரவியபொடி, கரும்புசாறு போன்ற 9 வகையான அபிஷேக திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகமும் அதை தொடர்ந்து சிறப்பு ஆதாரனைகள் ஸ்ரீ வாசவி தேவி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்றது. பார்வதி தேவியின் அம்சமான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை அவருடைய அவதார தினத்தில் வழிப்பட்டு அவள் அருளால் வளமான வாழ்க்கை பெற்று வாழ அனைவரும் பிரார்த்திப்போம்.












Click it and Unblock the Notifications