விளம்பி வருடம் 2018-19 எப்படியிருக்கும் - பஞ்சாங்கம் சொல்வதென்ன?
விளம்பி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. சித்திரை முதல் பங்குனி வரை 2018-19ஆம் ஆண்டு 12 மாதங்களுக்கு பொது பலன்களைப் பார்க்கலாம்.
சென்னை: விளம்பி தமிழ் புத்தாண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப் போகிறது. சித்திரை மாதம் 1ஆம் தேதியன்று சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு விளம்பி வருடம் பிறக்கிறது. நவகிரகங்களின் பெயர்ச்சியின் அடிப்படையில் சித்திரை முதல் பங்குனி வரை பொதுப்பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2017ஆம் ஆண்டு சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் பருவமழை நன்றாகவே பெய்தது. திடீரென்று உருவான ஓகி புயல், குமரி மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. நெல்லை, குமரி மாவட்ட அணைகள் நிரம்பின. இன்னும் ஒரு ஆண்டுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் நிரம்பியுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு கோடை மழையும் தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 200 மில்லிமீட்டர் பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்தது.
அதிக மழை பெய்யும்
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில், 2018ஆம் ஆண்டு 9 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 5 பலகீனம் அடையும், 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும். தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழியும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஆடி முதல் கார்த்திகை மாதம் வரை நல்ல மழை பெய்யும்.
வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படும். தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அணைகள் நிரம்பி வழியும்.
விலை வீழ்ச்சி
தென்மேற்கு பருமழை காலமான ஆடி, ஆவணி மாதத்தில் பகல், இரவில் எல்லா இடங்களிலும் மழைபொழியும் தமிழகத்தில் மலை பிரதேசங்களில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதே நேரத்தில் விளம்பி வருடத்தில் காய்கறிகள் விலை வீழ்ச்சியடையும், மா, பலா, தென்னை அதிக அளவில் விளையும், தேங்காய் விலை வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செலவுகள் அதிகரிக்கும்
புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். லக்னாதிபதி சுக்ரன் விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் செலவுகள் அதிகரிக்கும். 2 ஆம் அதிபதி புதன் 11ஆம் இடத்தில் சந்திரனுடன் இணைந்து மீனத்தில் அமர்ந்துள்ளதால் புயல்கள் உருவாகும்.
நோய்கள் அதிகரிப்பு
ராகு செவ்வாய் பார்வை பெறுவதால் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பெருவெள்ளம், ஏரி உடைப்பு ஏற்படும். சூரியன் 12ல் மறைந்துள்ளதால் மக்களுக்கு உஷ்ணத்தினால் நோய் ஏற்படும். இந்த ஆண்டு அதிக அளவில் பெண் குழந்தைகள் பிறப்பார்கள். பெண்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ரியல்எஸ்டேட் துறை
எட்டாம் இடத்தில் செவ்வாய், சனி இருப்பதால் செவ்வாய், சனி தசை நடப்பவர்கள் வீடுகளில் ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம் நடத்தவும். முருகப்பெருமானை வணங்கவும். ரியல் எஸ்டேட் துறை இந்த ஆண்டும் பாதிப்படையும். லாப ஸ்தானத்தில் உள்ள புதன், சந்திரனால் பால் விலை உயரும், 12ஆம் இடத்தில் சூரியன், சுக்கிரனால் மக்கள் ஆடம்பர பொருட்களை அதிகம் வாங்குவார்கள்.
பங்கு வர்த்தகம்
இந்த ஆண்டு பங்கு வர்த்தகம் சீராக இருக்கும். தங்கம், வெள்ளி விலைகள் புரட்டாசி மாதத்திற்கு மேல் அதிகரிக்கும். நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும் என்று திருக்கணித சர்வமுகூர்த்த பஞ்சாங்கம் கணித்துள்ளது.