விநாயகர் சதுர்த்தி 2021: ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும் - கொடியேற்றம் கோலாகலம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில்விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி பெருவிழா காரைக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விநாயக சதுர்த்தி திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு சிறிய கேடயத்தில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமான் சர்வ அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினார்.
ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்பே பல ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கிவிடும்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார்.

கற்பக விநாயகர் கோவில்
ஆவணி மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலாகலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு 3 லிங்கங்கள் திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 பெண் தெய்வங்கள் சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும்.

கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்
இங்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களின்றி கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. காலையில் கொடிமரத்திற்கு தர்பை புல், மாவிலை, பூமாலைகள் மற்றும் பட்டு வஸ்திரம் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன் பின்னர் அங்குச தேவருக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அபிஷேக ஆராதனை
தொடர்ந்து மூலவர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்துக்கு மூஷிக வாகனம் படம் வரையப்பட்ட வஸ்திரத்தினால் ஆன கொடி மேள தாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. உற்சவ விநாயக பெருமானுக்கும் , சண்டீகேஸ்வரருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ச்சியாக கொடிமரத்திற்கு அலங்கார தீபம், நாக தீபம், கும்ப தீபம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டது.

பத்து நாட்கள் திருவிழா
வருகிற 10ஆம் தேதி வரை நடைபெறும் சதுர்த்தி திருவிழாவில் தினசரியும் காலையில் வெள்ளி கேடகத்திலும் இரவு சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம். இந்த நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜமுக சம்ஹாரம்
விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பிள்ளையார்பட்டி வரவேண்டும்
கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவருக்கு நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு மேல் தளத்தில் 12 ராசிகளும் வரையப்பட்டுள்ளன. நவ கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த ராசிகளின் படங்களுக்கு நேராக நின்று விநாயகரை வணங்க தோஷங்கள் நீங்கும். நவ கிரகங்களும் விநாயகரை வழிபட்டதாக ஐதீகம் உள்ளது எனவேதான் ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வரவேண்டும் என்று அழைக்கின்றனர். வாய்ப்புள்ளவர்கள் பிள்ளையார் பட்டி சென்று வரலாம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications