ஸ்ரீகாளஹஸ்தி ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா.. 24ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மகாசிவராத்திரி விழா ஸ்ரீகாளஹஸ்தி ஆலயத்தில் 24ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மஹா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 24ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 14 நாட்கள் நடக்கும் இவ்விழாவை, கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி நடத்தவும், மாநில அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. வரும் 28ஆம் தேதியன்று மாநில அறநிலையத்துறையின் சார்பில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு வஸ்திரம் சமர்பிக்கப்படுகின்றன.
ஆந்திர மாநிலம், சித்தூர மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற சிவாலயமான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில். ராகு கேது பரிகாரத்தலம் என்பதோடு, சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நான்காவது தலமான வாயு ஸ்தலமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து ராகு கேது பரிகார பூஜை செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் நாள்தோறும் திருவிழா போல் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் நாடு முழுவதும் அதிரடியாகக் குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், வரும் 24ஆம் தேதியன்று ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மஹா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.

மகாசிவராத்திரி விழா
பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கும் மஹா சிவராத்திரி திருவிழா வரும் மார்ச் 9ஆம் தேதி வரை 14 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவை கொரோனா கட்டுப்பாட்டுகள் எதுவும் இன்றி வழக்கம் போல் விமரிசையாக நடத்துவதற்கு ஆந்திர மாநில அறநிலையத்துறை அனுமதியளித்துள்ளது.

மாட வீதியில் வீதி உலா
கொரோனா நோய்த்தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில மாடவீதிகளில் சாமி உற்சவர் திருவீதியுலா வைபவம் நடைபெறுமா? என்று கோயில் அதிகாரிகளும் பக்தர்களும் கடந்த சில நாட்களாகவே ஆவலுடனும் ஏக்கத்துடனும் காத்திருந்தனர். இந்நிலையில், கொரோனா நொய்த் தொற்றின் தாக்கம் குறைந்து விட்ட காரணத்தால், உற்சவ மூர்த்திகளின் நான்கு மாட வீதிகளிலும் திருவீதியுலா வைபவம் நடத்த அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளதால், பக்தர்களும் கோயில் அதிகாரிகளும் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்
இதனையடுத்து, மஹா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களுக்கும் வர்ணம் பூசப்பட்டுள்ளன. தேர்த் திருவிழாவை ஒட்டி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீஞானபிரசுனாம்பிகை அம்மன் தேர்களில் பழுது நீக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பட்டு வஸ்திரம்
மஹா சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்ற வகையில் கோயிலுக்குள் கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மஹா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வரும் 28ஆம் தேதியன்று ஆந்திர மாநில அரசின் சார்பில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்படுகின்றன. மேலும், இவ்விழாவை ஒட்டி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் அருகிலுள்ள கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications