தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூசம் நாளில் சீர் வரிசை கொடுத்த அண்ணன் ஸ்ரீ ரங்கநாதர்
தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதா் சாமி கோயிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீா் வரிசைப் பொருள்கள் பரிசளிக்கப்பட்டன.
திருச்சி: தைப்பூச திருநாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து பட்டுப்புடவை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கோவில் வளாகத்திற்குள் நடைபெற்றது.
தை மாதத்தில் சகோதரிகளுக்கு சகோதரர்கள் சீர் கொண்டு வந்து கொடுப்பார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கை முறையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் தைப்பூசம் நாளில் கோலாகலமாக நடைபெறும். கொள்ளிடம் கரையும் கோவில் வளாகமும் விடிய விடிய திருவிழா கோலமாக காட்சியளிக்கும்.
ஸ்ரீரங்கம் பூபதி திருநாள் தை தேரோட்டம் : தேரில் காட்சி அளித்த நம்பெருமாளை ஆன்லைனில் தரிசனம்
தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் வடக்கு வாசலுக்கு வரும் சமயபுரம் மாரியம்மன் தீா்த்தவாரி கண்டருளி எழுந்தருளுவாா். அப்போது அண்ணன் அரங்கநாதா் பட்டுப்புடவை, வளையல், பழங்கள், மஞ்சள் கயிறு, மாலைகள் உள்ளிட்ட மங்களப்பொருள்களை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று சமயபுரம் மாரியம்மனுக்கு கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரைக்கு சமயபுரம் மாரியம்மன் வரவில்லை. மேலும் கோயில் நடைகள் சாத்தப்பட்டிருப்பதால் தைப்பூசத்தன்று வழங்கும் சீா்வரிசைகளை நேற்று மாலை ஸ்ரீரங்க விலாச மண்டபத்தில் வைத்து யானை ஆண்டாள், மேளதாளத்துடன் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, உதவி ஆணையா் கந்தசாமி, கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் கோயில் பணியாளா்கள் ரங்கா ரங்கா கோபுரம் வரை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
பின்னா் சமயபுரம் கோயிலுக்குச் சீா்வரிசைகளைக் கொண்டு சென்று, கோயில் இணை ஆணையா் செல்வராஜிடம் முறைப்படி அளித்தனா். அண்ணன் ஸ்ரீரங்கநாதர் கொடுத்த சீர்வரிசைப் பொருட்கள் முறைப்படி தங்கை சமயபுரம் மாரியம்மன் முன் படைக்கப்பட்டது.