திருப்பதி பிரம்மோற்சவம்: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு
திருமலை திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.
திருப்பதி: ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 7ஆம்தேதியன்று நவராத்தில் பிரம்மோற்சவம் தொடங்கியது.
காலை மாலை என இருவேளையும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
ஏழு கொண்டல வாடா கோவிந்தா... கோவிந்தா... ஸ்ரீனிவாச கோவிந்தா வெங்கட ரமணா கோவிந்தா என்ற முழக்கம் எதிரொலிக்க திருமலையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். லட்சக்கணக்காக பக்தர்கள் திருப்பதி, திருமலைக்கு வந்து மூலவர் ஏழுமலையானையும் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வருவதையும் தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு பக்தர் கூட மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய முடியவில்லை காரணம் கொரோனா பற்றிய அச்சத்தினால் வீதி உலா ரத்து செய்யப்பட்டது.
பிரம்மோற்சவ விழா
புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை காண்பது பெரும் புண்ணியம் என்று நினைக்கும் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அனைத்தையும் முடக்கி போட்டு விட்டது. பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வரவில்லை மாறாக ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற்றது. திருப்பதிக்கு வந்த பக்தர்கள் மூலவரை மட்டுமே தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
அலங்கார ஊர்வலம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 7ஆம் ஆம் தேதி தொடங்கியது. தினசரியும் காலை, மாலை நேரங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தங்க தேரோட்டம் ரத்து
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் கருடவாகன சேவையும் எளிமையாகவே நடைபெற்றது. தொடர்ந்து அனுமந்த வாகனம், குதிரை வாகனம் என வாகனங்களில் எழுந்தருளினார் மலையப்பசுவாமி. தங்கத்தேரோட்டம், ரத உற்சவம் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
Recommended Video
மலையப்பசுவாமி தரிசனம்
தங்க ரத உற்சவத்திற்கு பதிலாக நேற்று சர்வ பூபால வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை கஜ வாகனத்தில் அருள்பாலித்தார். 7வது நாளான காலை சூரிய பிரபை வாகன சேவை நடந்தது. இரவு சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.
தீர்த்தவாரி
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் தொட்டி தண்ணீரில் மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்தனர்.
திருமஞ்சனம்
முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் ஆகியோரை கொண்டு வந்து, தொட்டிக்கு அருகில் எழுந்தருள செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், பால், தயிர், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
கொடியிறக்கம்
ஆண்டுதோறும் தீர்த்தவாரி ஸ்ரீவாரி புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கும். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பரவலால் கோவில் உள்ளே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறிய தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றுள்ளது.
கொரோனாவால் எளிமை
திருப்பதியில் பல ஆண்டுகாலமாக பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாகவே நடைபெற்று வந்துள்ளது.மன்னர் ஆட்சி, நவாப், ஆங்கிலேயர்கள் ஆட்சி, சுதந்திரத்திற்குப் பின் என எப்போதுமே வழக்கமான பிரம்மாண்டத்துடன் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்களாகவே பக்தர்கள் பங்கேற்பின்ற பிரம்மோற்சவ விழா எளிமையாக நடைபெற்றது.
பல கோடி வசூல்
விழா தொடங்கி 6 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 64 ஆயிரத்து 551 பக்தர்கள் முடி காணிக்கைசெலுத்தினர். ரூ 11.88 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஏழாம் நாளன்று ஒரே நாளில் உண்டியலில் 1.92 கோடி வசூலானது.