சபரிமலை கோவில் தங்க கூரையில் நீர் கசிவு..உத்தரவு கொடுத்த ஐயப்பன்..சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பு
சபரிமலை: ஐயப்பன் கோவிலில் சன்னிதானத்தின் தங்க மேற்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதை சரி செய்வதற்கான பணிகளை 22ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மேல்கூரை தங்கத்தால் பூசப்பட்ட தகடுகள் எடுக்கும் பணி தொடங்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருஓணம் பண்டிகைக்கு முன்னதாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஜய் மல்லையாவால் தங்க கூரை போடப்பட்டது. 31 கிலோ தங்கம் 1900 கிலோ காப்பகம் கலந்து இந்த தங்க கூரை அமைக்கப்பட்டது 24 வருடங்களுக்குப் பிறகு அந்த தங்க கூரையில் கசிவு ஏற்படுகின்றது.
அதை சரி செய்யும் வகையில் ஸ்ரீ கண்டனரு மகேஷ் மோகனரு தந்திரி பிரசன்னம் பார்த்து கூரையை சரி செய்ய ஐயப்பனிடம் அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து கோவிலின் தங்க மேற்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதை கண்டுபிடிப்பதற்கான சோதனை நடைபெற்றது.
பிரபல வாஸ்து நிபுணரும், தேவசம் போர்டின் மூத்த ஸ்தபதியுமான ராஜு தலைமையில் சிற்பிகள் கூரையில் ஏறி சோதித்தனர். இதில் தங்க தகடுகளை இணைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள செம்பு ஆணிகளின் இடைவெளி வழியாக நீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு தகடுக்கும் இடையே நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. வரும் 22 ம் தேதி முதல் சீரமைப்புப் பணிகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை பூஜைகளுக்கு நடை திறப்பதற்கு முன்னதாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.
இதனிடையே நிறை புத்தரிசி பூஜைக்காக ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றி வைத்தார். 4ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்த பின், அபிஷேகம் முடிந்து நிறை புத்தரிசி பூஜைக்கான சடங்குகள் நடைபெற்றன.
இதற்காக செட்டிகுளங்கரா கோயில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக நெல் பயிரிடப்பட்டிருந்தது. இந்த நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலமாகும். அறுவடை செய்த நெற்கதிர்கள் திருவாங்கூர் அறநிலையத்துறை (தேவசம் போர்டு) தலைவர் அனந்தகோபன், சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் வழங்கி இந்த நெற்கதிர்கள் சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டன.
அதிகாலை 5:45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு நெற்கதிர்களுக்கு பூஜை நடத்தினார். கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜை செய்த நெற்கதிர்களை, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தன் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தார். இதனையடுத்து பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இவை முடிந்து நேற்றிரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
கேரளாவில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தார். சபரிமலையில் பலத்த மழை பெய்த நிலையிலும், முக்கிய சாலைகள் அடைக்கப்பட்ட போதிலும் மாற்று வழியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
வரும் 17ஆம் தேதி ஆவணி மாத பிறப்பு சிங்க மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.