"என்ன சார் சொல்றீங்க?"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (4)
- சுதா அறிவழகன்
"What.. Police station?..என்ன சார் சொல்றீங்க"
"யார் நீங்க.. போலீஸான்னு போலீஸ் கிட்டேயே கேக்கறீங்க"
"சார் என் பெயர் சுனில்.. இந்த போன்ல இருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு போன் வந்தது. ஒரு பெண் பேசினார்.. அதான் குழம்பிட்டேன்"
"நீங்க சொல்றது எல்லாம் சரி.. இப்ப அவங்க ஒரு ஆக்சிடன்ட்ல சிக்கி ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.. நீங்க அவங்களுக்கு உறவா"
"இல்லை சார்.. உறவெல்லாம் இல்லை.. ஜஸ்ட் பழக்கம்தான்.. எந்த ஹாஸ்பிட்டல் சார்.. நான் உடனே வர்றேன்..."
"சண்முகம் ஹாஸ்பிட்டல், ஸ்பர் டங் ரோடு.. வாங்க"
ஆஹா.. பொண்ணு சேத்துப்பட்டு தானா... ஓகே ஓகே.. அயய்யோ அவளுக்கு என்னாயிருக்குமோ.. விருட்டென்று ஓடிய நினைவுகளை புறம் தள்ளி விட்டு புயலென டிரஸ் மாற்றிக் கொண்டு சேத்துப்பட்டுக்குப் பறந்தான் சுனில்.
-
"மேம்.. இங்க ஒரு ஆக்சிடென்ட் கேஸ்.. ஒரு பொண்ணு.. எந்த வார்டு"
"எந்தப் பொண்ணு.. பேரு என்ன சார்"
"பேரு தெரியலங்க.. போலீஸ் கேஸ்.."
"ஓ.. அவங்களா.. நேரா போனா லிப்ட் வரும்.. அதுல ஏறி 3வது மாடிக்குப் போங்க.. போலீஸ் இருப்பாங்க.. அந்த வார்டுதான்"
2 நிமிடத்தில் 3வது மாடி...
போலீஸாரிடம் சென்றான் சுனில்.. "ஸார்..நான் தான் அப்போது போன் செய்தது.."
"நீங்கதானா.. போய்ப் பாருங்க"
மெல்ல நுழைந்து பார்வையைத் திருப்பினான்..
புடவையில் அந்த புயல் படுக்கையில் படுத்திருந்தது.. கண்கள் மூடியிருக்க .. நெற்றியில் சிராய்ப்பு. கையில் லேசான அடி.. மின்விசிறியில் புடவைத் தலைப்பு படபடத்தபடி.. நெற்றி முடி மெல்ல அசைந்தபடி... சுனிலுக்குள் ஜில்லென ஒரு சந்தோஷம்.. பக்கத்தில் இருந்த சேரில் போய் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
பெண்களுக்குதான் ஆயிரம் கண்களாச்சே.. பட்டென கண் விழித்தது அந்த தேவதை..
"நீங்களா" எதிர்பாராத அந்த வருகையை உணர்ந்து உணர்வுகள் கொப்பளிக்க படபடத்தபடி, கை தானாக புடவையை சரி செய்ய.. எழ எத்தனித்தாள்.
" இருங்க இருங்க.. அலட்டிக்காதீங்க.. என்னாச்சு.. திடீர்னு"
"போன் பேசிட்டே ரோடை கிராஸ் பண்ணிட்டேன்.. ஒருத்தன் வந்து இடிச்சுட்டான்.. பைக்ல.. லேசான அடிதான்.. எனக்கும் பைக்குக்கும் நல்ல ராசிதான்"
சுனிலின் தோளைத் தொட்ட ஒரு போலீஸ்காரர்.. சார் நீங்க இருப்பீங்களா.. கொஞ்ச நேரம் இருங்க நாங்க போய் டீ சாப்பிட்டுட்டு வர்றோம்.. போய்ராதீங்க.. என்றபடி கிளம்பினார்.
நானாவது போவதாவது.. விட்டா இங்கேயே இருப்பேன் சார்...மனசுக்குள் குதூகலித்தபடி "நீங்க போய்ட்டு மெதுவா வாங்க சார்.. நீங்க வந்த பிறகு நான் போய்க்கிறேன்" என்று முகத்தில் தெறித்த சந்தோஷத்தை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு அனுப்பி வைத்தான் சுனில்.
"ஆமா.. நான் இங்க இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்" .. இது அவள்.
"எப்படியோ தெரியும்.. உங்களுக்கு என்னோட நம்பர் தெரிந்தது போல" .. இது அவன்.
இனி அவர்கள்...
"சரி.. போன்ல என்ன சொன்னீங்க என் கிட்ட"
"என்ன சொன்னேன்"
"யோசிச்சுப் பாருங்க"
"ஸாரிங்க.. ஆக்சிடன்ட்ல எனக்கு மெமரி லாஸ் ஆயிருச்சு.. நீங்களே சொல்லிடுங்க ப்ளீஸ்"
"ஹலோ என்ன நக்கலா"
"ஹய்யோ.. நிஜமாதாங்க.. நீங்க யாருன்னு கூட எனக்குத் தெரியாது.. நிஜம்மாத்தான்"
"இந்த கலாய்க்கு குறைச்சலே இல்லை.. போன்ல சொன்னீங்களே அது உண்மையா"
"எது"
"அதுதாங்க.. எங்கம்மா உங்களுக்கு அத்தைன்னு"
"அப்படியா சொன்னேன்...சரியா ஞாபகம் இல்லையே"
"ஆமாங்க.. அப்படித்தான் சொன்னீங்க"
"அப்படியா.. சரி அந்த டியூப்லைட்டை ஆப் பண்ணுங்களேன்.. தேவையில்லாம எரிஞ்சிட்டிருக்கு"
"எதுங்க.. இருங்க" டக்கென்று எழுந்துசுவிட்ச்சைத் தேடினான் சுனில்.. சட்டென்று பொட்டில் ஏதோ அறைய விருட்டென்று திரும்பிப் பார்த்தான் அவளை.. அவளோ கடகடவென்று சிரித்த சிரிப்பில்.. அது விட்டத்தைத் தொட்டு.. சுனிலின் விலா எலும்பை சுண்டி இழுக்க.. அவனுக்குள் ஆயிரம் இளையராஜாக்கள்.. தெய்வீக ராகம் இசைக்க.. சுனிலின் முகத்தில் ஜிலீர் சந்தோஷம்.
"ப்ரீத்தி.. யார் இது.. "
திடீரென ஒலித்த குரல் கேட்டு டக்கென சிரிப்பை நிறுத்திய ப்ரீத்தி.. வாசலைப் பார்த்து திடுக்கிட்டாள்.
(தொடரும்)