நிலவுக்கு நெருப்பென்று பெயர் (1)
- சுதா அறிவழகன்
"Preethi Where are You?.. I am on the way.. will reach you by 15 mins"
"சரி சீக்கிரம் வந்து தொலை.. காலெல்லாம் வலிக்குது.. come fast man"
"ஓகேடா ஹனி.. கொஞ்சம் லேட்.. ஸாரி டியர்"
இப்படித்தான் ஏதாவது பேசி மனசை கலைச்சுப் போட்ருவான் இந்த சுட்டிப் பய.. ஆமா இந்த சுனில் பையனை எப்பப் பார்த்தேன்..?
மறக்க முடியாத நாள் அது.. நாள்னு கூட சொல்ல முடியாது.. மறக்க முடியாத நிமிஷம்.. தக்காளி வாங்குவதற்காக கடைக்குப் போய்ட்டிருந்தேன். வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு 20 அடி தூரம் நடக்கணும் கடைக்கு. ரோட்டை வேற கிராஸ் செய்யனும்.
கடைக்குப் போய் தக்காளி வாங்கிட்டு ரோட்டைக் கடக்க எத்தனிக்கிறேன்.. சர்ருன்னு வந்து பிரேக் போட்டுச்சு ஒரு பைக்.. ஜஸ்ட் மிஸ்.. இல்லாட்டி மோதிருப்பான்.. ஆனால் பைக்கில் நான் கையில் பிடிச்சிருந்த பை இடிச்சு தக்காளி அப்படியே ரோட்டில் கொட்டி மொத்தமும் நசுங்கிப் போச்சு. வந்துச்சு பாருங்க கோபம்.
"டேய் எருமை மாடு.. அறிவு இல்லை.. Stupid nonsense.. எதுக்கு இவ்வளவு வேகம் உனக்கு.. தக்காளி என்ன விலை தெரியுமா.. இறங்குடா கீழே"
பைக்கில் வந்தவன் இப்படி ஒரு ஆவேசக் கூச்சலை எதிர்பார்க்கலை. ஆனால் கடுப்பாகிட்டான்.. டக்குன்னு அப்படியே நடு ரோட்டில் பைக்கை நிறுத்திட்டு படு ஸ்டைலா காலை முன்னாடி தூக்கிப் போட்டு வேகமாக இறங்கினான். இறங்கின வேகத்தில் ஹெல்மெட்டை கழட்டி வண்டியில் வைத்து விட்டு அதே வேகத்தில் என்னை நோக்கித் திரும்பினான்.
ஆஹா.. என்னா கண்ணுடா அது.. என்னா ஒரு ஷார்ப் பார்வை.. ஓ காட்... ப்ரீத்தி இப்ப "சண்டை"தான் முக்கியம்.. சைட் அடிக்காதே என டக்குன்னு மனசுக்குள் ஒரு சுத்தியல் அடிக்க.. "ஏங்க.. பார்க்க இவ்வளோ டீசன்ட்டா இருக்கீங்களே. பைக் மெதுவா ஓட்டிட்டு வரக் கூடாதா" என்று சுதி குறைந்த குரலில் நான் பேச அவன் டாப் கியருக்கு போய்ட்டான்.
"ஏம்மா.. இவ்வளோ கேவலமா பேசறீங்களே.. பார்த்தா படிச்ச பொண்ணா தெரியறீங்க.. கொஞ்சம் கூட டீசன்சி தெரியாதா.. நீங்க இப்படி சட்டுன்னு ரோட்டை கிராஸ் பண்ணலாமா.. மோதியிருந்தா என்னாகியிருக்கும்.. மோதாம பிரேக் போட்டதுக்கு பாராட்டாட்டி கூட பரவாயில்லை.. எருமை மாடுன்னு திட்றீங்க.. உங்க வீட்டுல நிறைய எருமை வளர்க்கறீங்களா".. அவன் திட்டவா செய்றான்.. கத்தி பேசினாலும் இவ்வளவு சாஃப்ட்டா இருக்கே வாய்ஸ்.. எஸ்பிபி, ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் எல்லாம் கலந்த கலவை போல இருக்கே... சிங்கரா இருப்பானோ.. அய்யோ ப்ரீத்தி ப்ரீத்தி.. இது சண்டை சீன்.. கன்ட்ரோல் கன்ட்ரோல்னு மனசு சொல்லி உலுக்க...
"மோதாம நிறுத்தியதுக்கு தேங்க்ஸ்ங்க.. இப்ப தக்காளி போச்சே.. அதுக்கு என்ன செய்றது.. எங்க அம்மா கிட்ட நீங்களா திட்டு வாங்குவீங்க.. நான்தானே வாங்கணும்"
"இருங்க.. தக்காளிதானே.. நானே வாங்கித் தர்றேன் வெயிட்" என்று கூறி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் கடைக்கு போய் அங்கிருந்த அண்ணாச்சியிடம் " ப்ரோ... 2 கிலோ தக்காளி.. டக்குன்னு எடுத்துக் கொடுங்க" என்று கூறி விட்டு மின்னலென பின்னால் திரும்பிப் பார்த்தான்.. டேய் எருமை மாடு அப்படிப் பார்க்காதடா.. கண்ணுல என்னடா வச்சிருக்க.. இப்படிப் பாயுது.. "சார் எதுக்கு சார் பரவாயில்லை விடுங்க" என்று சுரத்தே இல்லாமல் சொல்லியபடி நான் நிற்க..
"அதெல்லாம் வேண்டாங்க.. வாங்கிக் கொடுத்துட்டே போறேன்.. இல்லாட்டி போன பிறகு வேற ஏதாவது கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவீங்க... நான் எங்கம்மாவுக்கு ஒரே பையன்.. தேவையா இதெல்லாம் எனக்கு" என்று முனுமுனுத்தபடி தக்காளி அடங்கிய பையை அண்ணாச்சியிடம் வாங்கி அதை ப்ரீத்தியிடம் நீட்டினான்.
" எதுக்குங்க இவ்வளவு தக்காளி.. நான் அரை கிலோதான் வாங்கினேன்"
"என்னது அரை கிலோ தக்காளியா.. அதுக்காங்க இவ்வளவு கத்துனீங்க.. சரி பரவாயில்லை என் பெயரைச் சொல்லி நாலு நாள் சமைச்சுக்கோங்க"
" பேரைச் சொல்லலியே இன்னும்" உதடு பிரியாமல் வாய் முனுமுனுக்க..
"என்ன கேட்டீங்க"
"அது.. உங்க பேரைச் சொல்லி ஏங்க நாங்க சாப்பிடணும்"
"பரவாயில்லைங்க.. சாப்பிடும்போது சுனில் சுனில்னு சொல்லிட்டே சாப்பிடுங்க.. ஒன்னும் ஆகாது"
ஓ.. சுனிலா.. நல்லாருக்குடா எருமை.. அப்படியே அந்த செல்போன் நம்பர்.. மனசு பாதி சொல்லி.. "தேங்க்ஸ்ங்க.. கண்டிப்பா சொல்றேன்.. நம்பர் என்னங்க.. " என்று மீதத்தை நான் முடிக்க...
"என்ன நம்பர்"
"இல்லை வண்டி நம்பர் கேட்டேன்.. நாளைக்கு ஏதாவது ஆச்சுன்னா கிளெய்ம் பண்ணனுமே"
"ஹலோ நசுங்கிப் போனது உங்க தக்காளி மட்டும்தான்.. அதையும் கூட நான் வட்டியும் முதலுமா திருப்பிக் கொடுத்துட்டேன்.. நீங்க நல்லாதான் இருக்கீங்க.. அதை முதல்ல தெளிவா புரிஞ்சுக்கோங்க.. தக்காளி நசுங்கினதுக்கெல்லாம் கேஸ் போட முடியாது"
"தெரியும் தெரியும்.. நீங்க கிளம்புங்க.. காத்து வரட்டும்"
"ஆளை விடும்மா சாமி".. விர்ரென பைக்கை எடுத்து காற்றாக பறந்தான் சுனில்.
ம்ம்.. நல்லா ஸ்மார்ட்டாதான் இருக்கான். பட் கடைசி வரை டியூப்லைட்டுக்கு நான் கேட்ட நம்பர் என்னன்னு புரியவே இல்லையே.. இவனை எப்படி நாம ஃபிரண்டாக்கி, படிப்படியா.. அய்யோ என்னாச்சு எனக்கு..
"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை"
எங்கோ ஒலித்த செல்போன் ரிங்டோன் ப்ரீத்திக்குள் ரசவாதத்தை உண்டு பண்ண.. டக்கென உடலை உதறியபடி யாரும் பார்க்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தபடி வேகமாக வீடு நோக்கி விரைந்தாள்.
(தொடரும்)