குழந்தைகளால் மட்டுமே...
குழந்தைகளின் உலகம் விசாலமானது
மேகம் கடந்து வானம் பார்க்க முடிகிறது
நிலாவில் நடக்க முடிகிறது
குழந்தைகளால் மட்டுமே
கடவுள்களோடும் தேவதைகளோடும்
விளையாட முடிகிறது
நட்சத்திரத்தை விளக்கமாறால் கூட்டி
குப்பையென குவித்து நிலாக்களை
நீள்சதுரமாய் உண்டுபன்ன முடிகிறது
வானமெங்கும் நிலாக்கள்...
குழந்தைகளோடு கரடிகளும்
முயல்களும் இன்னும் சில
மிருகங்களாலும் பேச முடிகிறது
பொம்மைகளாயினும்...
குழந்தைகளால் தவறுகளையும்
மிருகத்தனமான கோபங்களையும்
மறக்கவும் மன்னிக்கவும் முடிகிறது
அழுதவுடன் சிரிக்கவும்
சிரிப்போடு அழவும் அவர்களால் மட்டுமே முடிகிறது...
குழந்தைகள் கூறும் கதைகளில்
அவர்களும் ஒரு பாத்திரமாகிறார்கள்
பெரும்பாலும் அவர்கள் கதைகள்
ஆச்சர்யங்களோடே முடிகிறது
ஆச்சர்யங்களை அடுத்த நாளுக்காக
ஒளித்துவைதுக் கொள்ள
முடிவதில்லை அவர்களால்...
சின்னசின்ன வீடுகளை
கதவில்லாமல் வரைந்து
சில பறவைகளும் பல
மிருகங்களும் வரைந்து
வாழ்ந்தும் முடிக்கிறார்கள்
நாளை வேறு வீடு
கூடவே வேண்டும் மரங்களும்
பல நிறங்களில் பூக்களும்...
நிலாவை வரை என்கிறேன்
அப்பா பகல் என்கிறாள்
சரி வெயிலின் நிறம் வரை என்கிறேன்
வானவில்லை வரைந்து சிரிக்கிறாள்
நான் ஆமோதித்து அதிசயிக்கிறேன்...
சிறு கை அளாவிய கூழ் ருசிக்கும்போதெல்லாம்
திருவள்ளுவரை நினைத்து பிரமிக்கிறேன்...