காற்றாலைகளும், காணாமல் போன குருவிகளும்!
திருநெல்வேலி-கன்னியாகுமரி இடையே பயணித்தால் இருபுறமும் உயர்ந்து நிற்கும் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும்.
இந்த காற்றாலைகள் தான் தமிழகத்தின் மின்சார நிலைமை கொஞ்சமாவது சொல்லிக் கொள்ளும்படி இருக்க முக்கியக் காரணம்.
நாட்டிலேயே இவ்வளவு அதிகமான காற்றாலைகள் எந்தப் பகுதியிலும் இல்லை, காற்றாலைகள் மூலம் இவ்வளவு மின்சாரத்தை எந்த மாநிலமும் தயாரிப்பதும் இல்லை.
இந்தியாவில் மொத்தமாக உற்பத்தியாகும் காற்றாலை மின் உற்பத்தியில் பாதி அளவு இந்த இரு மாவட்டங்களில் தான் உற்பத்தியாகிறது. இந்த இரு மாவட்ட காற்றாலைகளின் நிறுவு திறன் 6,500 மெகாவாட் ஆகும். ஆனால், காற்றின் அளவைப் பொறுத்து உற்பத்தி ஏறி, இறங்கும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து வீசும் காற்றை பயன்படுத்தி இயக்கப்படும் இந்தக் காற்றாலைகளால் இதுவரை உள்ளூர் மக்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
காற்றாலைகளுக்காக இடம் தர விளை நிலங்கள் விற்கப்படுவதால் நிலத்தின் விலை உயர்ந்ததும், உள்ளூரில் மின்சாரத் தடை இல்லாததும் மட்டுமே இப் பகுதிக்கு ஏற்பட்ட லாபம். அதே போல காற்றாலைகளை நிறுவுதல், பராமரிப்பு என கிரேன் சர்வீஸ், எலெக்ட்ரீசியன்கள் என சில ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஆனால், ஒவ்வொரு காற்றாலையும் சுமார் ரூ. 2 கோடி செலவில் நிறுவப்பட்டு வரும் நிலையில், இங்கு செய்யப்பட்டுள்ள முதலீடு சில லட்சம் கோடிகளைத் தாண்டும். ஆனால், இந்த அளவுக்கு செய்யப்பட்ட பெரும் முதலீடு அந்த அளவுக்கு வேலைவாய்ப்புகளையோ அல்லது இந்தப் பகுதியில் வளர்ச்சியையோ கொண்டு வந்துவிட்டதா என்றால் அது தான் இல்லை.
நிலங்களை விற்றவர்கள் லாபம் அடைந்ததோடு, சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்ததோடு அது நின்றுவிட்டது. இந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கோ எந்தப் பயனும் இல்லை.
இந் நிலையில் தான், காற்றாலைகளுக்கு வரி விதிக்க அந்தப் பகுதிகளின் பஞ்சாயத்துகளும் உள்ளாட்சி அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. இதுவரை இந்தக் காற்றாலைகள் வரி ஏதும் செலுத்தாமல் இருந்து வந்தன.
அத்தோடு ஒவ்வொரு காற்றாலைக்கும் மத்திய அரசு மானியம் தந்ததால் அதை நிறுவியவர்களுக்கு லாபமும், சில வரிச் சலுகைகளும் கிடைத்து வந்தன.
இப்போது காற்றாலைகள் லோக்கல் பஞ்சாயத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்றதும் அதற்கு காற்றாலை உரிமையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதை எதிர்த்து காற்றாலை மின் உற்பத்தி சங்கங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளதோடு முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மனு கொடுத்துள்ளன.
இந்த வரி காரணமாக ஒரு மெகாவாட் மின்சாரத்தின் விலை ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் உயரும் என்று காற்றாலை மின் உற்பத்தி சங்கம் கூறுகிறது. வழக்கமாக ஒரு காற்றாலையை நிறுவும் நிறுவனம், அதில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை மத்திய மின் கிரிட்டில் ஏற்றிவிடும். அதே நேரத்தில் தனக்குத் தேவையான மின்சாரத்தை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பெற்றுக் கொள்ளும். நிறுவனம் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு குறைவாக இருந்தால் அரசு அவர்களுக்கு கட்டணம் தரும். அதே நேரத்தில் தங்களது காற்றாலை தயாரித்த மின்சாரத்தை விட அதிகமான மின்சாரத்தை அந்த நிறுவனம் பயன்படுத்தினால், அதற்குரிய கட்டணத்தை அவர்கள் அரசுக்கு செலுத்துவர். இது தான் பொதுவான நடைமுறை.
இந் நிலையில், தான் புதிதாக வரி போட்டால் ஒரு மெகாவாட் மின்சாரத்தின் விலை ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் உயரும் என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், காற்றாலைகள் வந்தததால் தங்களது ஊரில் விவசாயமே நின்றிவிட்டதாகவும் இங்கு காற்றாலைகளைத் தவிர வேறு தொழிலே இல்லை என்றும் கூறுகின்றன ஆரல்வாய்மொழி, ராதாபுரம் பஞ்சாயத்துகள்.
மரங்களை அழித்து, பறவைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தங்களது விவசாய வருவாயையும் அழித்த காற்றாலைகள் தான் வரி செலுத்தி தங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பது இந்த பஞ்சாயத்துகளின் கோரிக்கை.