Fact check : குவைத் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் நாசி அல் சார்கி... இன்று காலை காலமானார்! உண்மையா?
சென்னை : குவைத்தின் மிகப்பெரிய பணக்காரர் நாசி அல் சார்கி காலமானார். அவரது சொத்துக்களை பாருங்கள் என்ற பெயரில் தங்கக் கார் விமானம் மற்றும் விலை மதிக்க முடியாத சொத்துக்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பதிவு ஒன்று கடந்த சில நாட்களாக உலாவி வருகிறது. இது உண்மையா? உண்மையான பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
அனைவருக்கும் இன்டர்நெட், அனைவரின் கையிலும் செல்போன் என ஆகிவிட்ட இந்த காலத்தில் மொபைல் ஜர்னலிசம் என்ற பதம் அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது, அதாவது தாங்கள் விரும்பும் அனைத்து கருத்துக்களையும் உடனடியாக அனைவராலும் பரப்ப முடியும்.
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருந்து தங்கள் கருத்துக்களை உலகெங்கும் கொண்டு செல்ல வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் இருக்கின்றன. இதனால் இளைஞர்கள் ஏன் ஊடகவியலாளர்கள் கூட தங்கள் நிறுவனத்தின் மூலம் தாங்கள் சொல்ல முடியாதவை தங்கள் பேஸ்புக் பக்கம் மூலமோ ட்விட்டர் மூலமோ வெளிப்படுத்த முடியும்.

போலி செய்திகள்
அதே நேரத்தில் இணையதளங்களில் போலி செய்திகளின் ஆக்கிரமிப்பும் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கிறது. பள்ளி வேன் விபத்தில் சிக்கிவிட்டது, இரத்தம் அவசரம், இன்று இரவு செல்போன்கள் வேலை செய்யாது உள்ளிட்ட பல வகையறா மெசேஜ்கள் வாட்ஸ் அப் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை உலாவி வருகிறது. சில நேரங்களில் உண்மையான செய்திகள் கூட போலி செய்திகளால் அடிபட்டுப் போவதுண்டு.

ஃபேக்ட் செக்
உதாரணத்திற்கு ஒருவரது அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவை என ஒருவர் வாட்ஸ் அப்பில் பதிவிடும்போது அது பல ஆண்டுகள் உலாவுகிறது. இதன் காரணமாக அவசர தேவைக்கு கூட வாட்ஸ் அப்பில் அதே வகையான மெசேஜ்களை அனுப்ப சிலர் தயங்குகின்றனர். இதன் காரணமாக போலி செய்திகளின் நடமாட்டத்தை குறைக்கும் பொறுத்து ஒன் இந்தியா தமிழில் ஃபேக்ட் செக் வகையிலான அலசல்கள் மேற்கொள்ளப்பட்டு அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் ஒரு செய்தி உலாவி வருகிறது.

குவைத் பணக்காரர்
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா... குவைத்தில் பணக்காரர் நாசி அல் கார்கி காலமானார். அவரது புதையல் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் பாருங்கள். அவருடன் ஒரு துரும்பையும் எடுத்துச் செல்ல முடியாது. இது நம் அனைவருக்கும் ஒரு கடுமையான நினைவூட்டல்" என்ற செய்தி தான் அது. இந்த செய்தியுடன் பகிரப்படும் புகைப்படத்தில் சவப்பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவரது சடலத்தில் மிக அதிகமான தங்க நகைகள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தங்கத்திலான ஜெட் விமானம், கார், தங்க கட்டிகள், வைரம் வைடூரியம் உள்ளிட்ட நகைகளுடன் இந்த புகைப்படமானது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மையா?
பலரும் இதனை உண்மை என நம்பி மேலும் பல வாட்ஸ் அப் குரூப்புகளிலும் தங்களது முகநூல் பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இன்று நேற்றுள்ள 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் உண்மை தன்மை குறித்து விசாரித்த போது அது போலியானது என தெரிய வந்திருக்கிறது. சவப்பெட்டியில் இருப்பவர் குவைத்தை சேர்ந்தவர் அல்ல. கரீபியனில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ என்ற நாட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர். இவரின் பெயர் நாசி அல் சார்கி என்பதும் தவறானது. ஷெரோன் சுகேடோ என்பது தான் அவரின் பெயர். 2018ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டபோது அவரின் வயது 33. இவர் ஒரு கடத்தல்காரரும் கூட

பின்னணி என்ன?
தங்கம் மற்றும் வைரத்தால் ஆன ஜெட் விமானம், கார், கப்பல் ஆகிய புகைப்படங்கள் ஷெரோன் சுகேடோவுக்கு சொந்தமானது இல்லை. வெவ்வேறு ஆண்டுகளில் பல இணைய தளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் இவை. நாசி அல் சார்கி ("Nassi Al Kharki") என்ற பெயருடைய ஒருவர் குவைத்தில் பெரும் பணக்காரராக இல்லை. குவைத்தின் பெரும் பணக்காரர் Nasser Al-Kharafi. 1994ஆம் ஆண்டு பிறந்த நாசர் அல்-கராஃபி 2011ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதன் மூலம் இந்த தகவலானது முழுக்க முழுக்க போலியானது ஆகும்.

Fact Check
வெளியான செய்தி
குவைத்தில் பணக்காரர் நாசி அல் கார்கி காலமானார். அவரது புதையல் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் பாருங்கள். அவருடன் ஒரு துரும்பையும் எடுத்துச் செல்ல முடியாது
முடிவு
சவப்பெட்டியில் இருப்பவர் குவைத்தை சேர்ந்தவர் அல்ல. கரீபியனில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ என்ற நாட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர். ஒரு கடத்தல்காரரும் கூட












Click it and Unblock the Notifications