ஜீன்களின் சிறப்பு சக்தி.. இந்தியர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உள்ளதா? உண்மை என்ன?
கொரோனா காரணமாக இந்தியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், இந்தியர்களுக்கு மரபணு ரீதியாக இதற்கான எதிர்ப்பு சக்தி உள்ளது என்று இணையத்தில் செய்திகள் உலவி வருகிறது.
டெல்லி: கொரோனா காரணமாக இந்தியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், இந்தியர்களுக்கு மரபணு ரீதியாக இதற்கான எதிர்ப்பு சக்தி உள்ளது என்று இணையத்தில் செய்திகள் உலவி வருகிறது. இது முழுக்க முழுக்க பொய் ஆகும்.
Recommended Video
கடந்த 3 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.இது வரை நாடு முழுக்க மொத்தம் 1,44,910 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க 5900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுக்க கொரோனா காரணமாக 199 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வதந்தி!
கொரோனாவிற்கு எதிராக இந்தியர்களுக்கு மரபணு ரீதியாக எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆங்கில இணையம் பக்கம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து பலரும் இதே செய்தியை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். அந்த செய்தியில் இந்தியர்களுக்கு உலகிலேயே மிக வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளது. நாம் மிக மோசமான வானிலை மற்றும் சுற்றுசூழலில் வளர்ந்த காரணத்தால், நமக்கு இயல்பாக வளர்ந்த நாடுகளில் இருக்கும் மக்களை விட அதிக எதிர்ப்பு சக்தி உள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது.
என்ன
இதற்கு ஆதாரமாக இணையவாசிகள் சில கட்டுரைகளை பகிர்ந்து வருகிறார்கள். இதற்காக இணையவாசிகள் நேச்சர் ஏசியா (Nature Asia) பக்கத்தில் வெளியான‘More immunity in Indian genes' என்ற கட்டுரையை ஆதாரமாக காட்டுகிறார்கள். 2008ல் வெளியான இந்த கட்டுரை ஒரு ஆய்வு கட்டுரை ஆகும். கலிபோர்னியா பல்கலைக்கழகம் , எய்ம்ஸ், அமெரிக்க தேசிய எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து இந்த ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
உண்மையில் கட்டுரையில் உள்ளது
ஆனால் இந்த கட்டுரையில் இந்தியர்களுக்கு கூடுதல் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று கூறப்படவில்லை. மேலும் கொரோனா வைரஸையோ அல்லது மற்ற வைரஸ்களையோ எதிர்கொள்ளும் சிறப்பு மரபணு இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரே விஷயம், இந்தியர்களுக்கு எதிர்ப்பு சக்தி சார்ந்த ஜீன்கள் அதிகமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த ஜீன்களும் கூட, இந்தியர்களின் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் என்று கூறவில்லை. எதிர்ப்பு சக்தி சார்ந்த ஜீன்கள் அதிகம் உள்ளது அவ்வளவுதான்.
இந்தியர்கள் இல்லை
இந்த ஜீன் சோதனை KIR2DL5 எனப்படும் ஜீன் அமைப்பில் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியர்கள் மட்டுமின்றி கிழக்கு ஆசிய மக்கள், ஆப்ரிக்கன் அமெரிக்கன் மக்கள், ஜப்பான் மக்கள், சில மத்திய கிழக்கு நாட்டு மக்களின் ஜீன்களிலும் காணப்படும் அமைப்பு ஆகும். அதனால் இந்தியர்களுக்கு மட்டும் இது பிரத்யேகமான குணம் இல்லை. அதாவது இந்தியர்களுக்கு மட்டும் எதிர்ப்பு சக்தி சார்ந்த ஜீன்கள் அதிகம் உள்ளது என்று கூற முடியாது.
அதிகரிக்காதா?
எதிர்ப்பு சக்தி சார்ந்த ஜீன்கள் அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா என்று கேட்கலாம். அதிகரிக்காது என்று இந்த கட்டுரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு சக்தி சார்ந்த ஜீன்கள் நமக்கு எந்த விதமான பெரிய நன்மையையோ அல்லது தீமையையோ ஏற்படுத்தாது. அதேபோல் இந்த சோதனை மிக குறைவான ஜீன் மாதிரிகளில்தான் செய்யப்பட்டுள்ளதால் இந்த அதிகப்படியான எதிர்ப்பு சக்தி ஜீன் எல்லா இந்தியருக்கும் இருக்கும் என்றும் கூற முடியாது.
என்ன முடிவு
இதன் மூலம் என்ன முடிவு செய்யப்படுகிறது என்றால், இணையத்தில் சிலர் கூறுவது போல இந்தியர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான எந்த விதமான சிறப்பு சக்திகளும் இல்லை. இந்தியர்கள், முக்கால்வாசி ஆசியர்கள் போல ஒரே ஜீன் அமைப்பு கொண்டவர்கள். அதேபோல் தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக வளர்வதே, நமக்கு அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இந்த கொரோனா ஆசிய நாடுகளைதான் அதிகம் பாதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.