இலங்கை பிரச்சனை- இந்தியா என்ன செய்யனும்? பிரதமர் மோடிக்கு ஈழத் தலைவர்கள் எழுதிய கடிதம் முழு விவரம்!
டெல்லி: இலங்கையில் ஈழத் தமிழருக்கான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கு இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு மிக விரிவான கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அக்கடிதம் முழு விவரம்:
மாண்புமிகு பிரதமர் அவர்கட்கு,
இந்திய இலங்கை உடன்படிக்கையும் தமிழ் பேசும் மக்களின் ஆட்சி அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் அபிலாசைகளும். இலங்கை 1948 ல் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த காலம் முதல் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களிடம் தமிழ்பேசும் மக்கள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைக் கோரி வந்துள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டபூர்வமான தமது அபிலாசைகளின் அடிப்படையில் ஒரு தீர்வை வேண்டி நின்றனர். உள்நாட்டிலும், சர்வதேச சமூகத்தின் உதவியுடனும் தீர்வு ஒன்றைக் காணுவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு இன்றுவரை தீர்வு காணப்படாமலே இருந்துவருகிறது.
தமிழ் பேசும் மக்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான தமது சட்டபூர்வமான அபிலாசைகளைத் திருப்திப்படுத்தும் விதமாக, நீதியான, நிரந்தரமான ஓர் தீர்வைக் காணுவதற்கு தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி கடந்த 40 ஆண்டுகளாக இந்த முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வந்திருப்பதற்கு நாம் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வடக்கு கிழக்கில் எப்போதும் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களிடம் மீண்டும் மீண்டும் நாம் பெற்றுள்ள ஆணையின்படி, எமது வரலாற்று ரீதியான பாரம்பரிய வாழ்விடத்தில் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை எட்டுவதற்கு நாம் தொடர்ந்தும் பற்றுதி கொண்டுள்ளோம். அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான எங்கள் முன்மொழிவாக இதை நாம் தொடர்ச்சியாக முன்வைத்துள்ளோம்.
1983 இல் இந்திய அரசாங்கம் தனது நல்ல அலுவலககங்களை வழங்கியது. அதனை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக 29, ஜீலை, 1987 இல் இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தானது. அதன் பின்னர் இலங்கையில் அரசியல் அமைப்பில் 13 ஆவது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்குமென்று எதிர்பார்ப்புடன் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால் 13 ஆவது சட்டத்திருத்தம் ஓர் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. அதனால் அதிகாரப் பகிர்வுக்குப் பதில் அதிகாரப் பரவலாகலே ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில்தான், அதன் பின்னர் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் 13 ஆம் சட்டத்திருத்தத்தை தாண்டி ஓர் கூட்டாட்சி (சமஷ்டி) அமைப்பை நோக்கியதாக நகர்ந்தது. மேற்கொள்ளப்பட்ட பல முன்மொழிவுகளும், திடசங்கற்பங்களும் இங்கு சொல்லப்படவேண்டிய விடயங்களாகும்.
முதலில் 1993 இல், ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவின் ஆட்சிக்காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக் குழு இந்திய அரசமைப்பு முறையில் அதிகாரப்பகிர்வை ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைத்தது. அத் தெரிவுக்குழு பொதுப்பட்டியலை இல்லாதொழிக்கலாம் என்றோ அல்லது, அதில் உள்ள பல விடயங்கள் மாகாண அதிகாரப்பட்டியலுக்கு மாற்றப்படலாம் என்று பிரஸ்தாபித்தது. வடக்கு, கிழக்க மாகாணங்களை இணைக்கும் ஓர் அதிஉயர்சபையை அமைக்கலாம் என்றும் அக்குழு மேலும் முன் மொழிந்துது.
இரண்டாவதாக, 1995 இலும், 1997 இலும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் கீழ் அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான முன்மொழிவும், 2000ஆம் ஆண்டின் அரசியலமைப்பு மசோதா - அனைத்தும் விரிவான அதிகாரப் பகிர்வுடன், ஒற்றையாட்சி அமைப்பை ஒழித்துவிடலாம் என்றும் முன்மொழிந்தன.
மூன்றாவதாக டிசெம்பர் 2002 இல் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமிடையில் ஒஸ்கோ நகரில் நடந்த பேச்சுவார்த்தை. அந்தப் பேச்சு வார்த்தையின் போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள், தமிழ்பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்களில் அக - சுயநிர்ணய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சி (சமஷ்டி) அரசமை பு தொடர்பில் அமையும் தீர்வொன்றைப் பற்றி ஆராயலாம் என்று இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இலங்கை அரசின் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் நடைபெற்றதொரு செய்தியாளர் மாநாட்டில் பின்வருமாறு கூறினார்.
"தமிழீழவிடுதலைபுலிகள் அமைப்பின் தலைமையின் முன்மொழிவுக்குப் பதில் தரும் விதமாக, தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடப் பிரதேசங்களில் அக-சுயநிர்ணய தத்துவத்தின் அடிப்படையில் கூட்டாட்சி (சமஷ்டி) அடிப்படையிலான தீர்வை காண்பது பற்றி ஆராய்வது என்று இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளன. சகல சமூகங்களுக்கும் ஏற்புடையதாக அமையவேண்டும் என்பதை இருதரப்பும் அங்கீகரித்தன. அந்த அடிப்படையில், மேலும் விடயங்களைக் கலந்துரையாடலாம் என்று இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன."
நான்காவதாக, 2006ஆம் ஆண்டில், ஜனாதிபதி மகிந்தராஐபக்ஷ புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அனைத்தக்கட்சிகளின் பிரதிநிதித்துவக் குழுவொன்றையும், முன்மொழிவுகளை வகுப்பதற்கென்று நியமித்தார். அந்தக்கூட்டத்தில் தொடக்க நிகழ்வில் அக்குழுக்களின் பணி பற்றி பின்வரும் வார்த்தைகளில் சுருக்கமாக உரைத்தார்.
" பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கை முதல் எடுக்கப்பட்ட கடந்த கால முயற்கள் பற்றி நாம் ஆராய்தல் வேண்டும். மக்கள் தாம் வாழும் பிரதேசங்களில் தமது அரசியல் பொருளாதார சூழ்நிலையின் தலைவிதியையும், கட்டுப்பாட்டையும் தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். கணிசமான காலமாக, மத்தியில் தீர்மானம் எடுக்கப்படும் போது வளங்கள் விகிதாசாரத்திற்கு முரணான வகையில் ஒதுக்கப்படுகின்றன. என்பது ஓர் பிரச்சினையாக இருந்துவருகிறது. மேலும், அதிகாரப் பகிர்வு என்பது, தனித்துவ அடையாளம், பாதுகாப்பு என்பவற்றுடன், மத்தியில் அளவுக்கதிகமாக தங்கியிராமல் சமூக - பொருளாதார முன்னேற்றம் தொடர்பான பிரச்சினைகள் கையாளப்படவேண்டும் என்பது தெளிவான விடயமாகும். இந்த விடயம் தொடர்பில் பிரதேச சிறுபான்மையினரின் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். யதார்த்தமான, இலங்கை அரசியல் அமைப்புக்கான கட்டமைப்பை நாம் உருவாக்கும் போது இது தொடர்பாக, எமது நெருங்கிய அயல்நாடான இந்தியா உட்பட உலகெங்கும் காணப்படும் உதாரணங்களை நாம் ஆராய முடியும்.
தற்போதுள்ள முரண்பாட்டிள் (போர்) பின்னணியில், எந்தவொரு தீர்வானாலும், நாட்டின் இறைமையை பலியாக்காமல், அதி சாத்தியமான அதி உச்ச அதிகாரப்பகிர்வுக்கு நீண்டு செல்வதாக அமைய வேண்டும்."
இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்த தலைமைகளான ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், ஐக்கிய அமெரிக்கா மற்றும் நோர்வே என்பன பிரிவினையை ஏக்கவில்லை. ஆயினும் தீர்வு எதுவாக வேண்டும் என்று தமது கருத்தை தெரிவித்தன என்று ஜனாதிபதி ராஜபக்ஷ சரியாக சுட்டிக்காட்டியிருந்தார். "முஸ்லீம்கள் உட்பட அனைத்து இலங்கையரினதும் உரிமைகளையும் மேம்படுத்தக்கூடியதான ஒரு புதிய ஆட்சி முறைமையை கொண்டுவருவதற்கான அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதற்கு (இலங்கை) தயாராக உள்ளதைக் காட்டுவதாக தீர்வு அமைய வேண்டுமென்றனர். அவ்வாறான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஆதரிக்கும், அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் சர்வதேச ஆதரவு குறையும், இன்னும் போதிய அளவில் கவனிக்கப்படாத நியாயப்படுத்தக்கூடிய கணிசமான மனக்குறைகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் உள்ளன."
அதேவேளை, ஒருங்கிணைந்த தலைமையின் உறுப்பினர்களின் ஒன்றான ஐக்கிய அமெரிக்கா இலங்கை தொடர்பில் சில குறிப்பிடத்தகுந்த அறிவிப்பை விடுத்தது. தென் ஆசிய மற்றும் விவாகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்கா உதவி இராஜாங்க அமைச்சர் ஏ.பௌசர் 01 ஜீன் 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்த போது தெரிவிக்கையில் "தமது சட்டபூர்வமான மனக்குறைகள் கவனத்தில் கொள்ளப்படுவதையும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக எதிர்கால இலங்கையில் ஓர் சாதகமான நோக்கையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென நாம் எண்ணுகிறோம். ஜனாதிபதி ராஜபக்ஷ "உச்ச அதிகாரப் பகிர்வு பற்றி பேசியிருக்கிறார். முந்திய பேச்சு வார்த்தைகளின் போது கூட்டாட்சி அமைப்பிற்குள் அக - சுயநிர்ணயம்" தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டிருந்தது. எவ்விதமாக இக்கருத்து வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், இலங்கை என்ற ஒரு நாட்டிற்குள் தமது வாழ்வும் விதியும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் எனும் இக்கருத்து வடக்கு கிழக்கில் உள்ள பலருக்கு நம்பிக்கையளிப்பதாக அமையலாம்."
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவ குழுவின் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள பல் இன நிபுணர் குழாம் தமது பிரதான அறிக்கையில், ஓகஸ்ட் 2000 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு வரைபில் உள்ளது போன்ற விரிவான அதிகாரப் பகிர்வுக்கான ஒழுங்கமைப்பை முன்மொழிந்தனர். அதேவேளையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு அறிக்கை, பதின்மூன்றாம் அரசியலமைப்பத் திருத்தத்திற்கான முக்கியமான திருத்தங்களைப் பற்றி பிரஸ்தாபித்திருந்தது.(பொதுப்பட்டியலை நீக்கிவிடுவது உட்பட்ட) இறுதியில் ஆயுதப்போராட்டம் 2009 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தி அதனை வலுப்படுத்துவது என்றவாறு சில வாக்குறுதிகளை வழங்கியது. 2009, மே 26 இல் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.சபைப் பொதுச்;செயலாளர் பான்-கி-மு னுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கையை ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்தார். "13ஆம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான தனது வலுவான உறுதிப்பாட்டை ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.
அத்துடன் தமிழ்கட்சிக் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் ஓர் விரிவான பேச்சுவார்த்தையை, தோன்றியுள்ள புதிய சூழ்நிலையில் நடாத்தி தனது செயற்பாட்டை மேலும் மேம்படுத்தி இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய அமைதியையும் நல்லினக்கத்தையும் ஏற்படுத்தப்போவதாக தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்." 27 மே 2009, அடுத்த நாளே ஜ.நா மனித உரிமைகள் சபை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டபோது அதில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மேற்படி பற்றுறுதி பின்வரும் வார்த்தைகளில் ஒன்றிணைக்கப்பட்டது. "இராணுவத்தீர்வொன்றுதான் இறுதித் தீர்வு என்று தான் கருதவில்லை என்று இலங்கை ஜனாதிபதி அண்மையில் அறிவித்துள்ள வாக்குறுதியையும், பதின்மூன்றர் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்துவதன்மூலம் இலங்கையில் ஓர் நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவருவதற்கான ஒரு அரசியல் தீர்வுக்கான தன் பற்றுறுதியை நாமும் வரவேற்கிறோம்."
2010 ஜீன் மாதத்தில் முந்நாள் இந்தியப்பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்தார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். அவர் தன் அறிக்கையில் தெரிவித்ததாவது........
"பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை மேம்படுத்தி அதனடிப்படையில் ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுள்ள பொதியை வழங்கினால் நீடித்த ஒரு அரசியல் தீர்வுக்கு அவசியமான நிலையை உருவாக்கமுடியும். ஜனநாயகம் பன்முகத்தன்மை, சமவாய்பு, மனிதவுரிமைக்கான மதிப்பு என்பவற்றுக்கு ஏற்புடையதான சமாதானம் நீதி மற்றும் கௌரவம் என்பன பொருந்திய ஓர் சூழலில் இலங்கையின் அனைத்து சமுதாய மக்களும் வாழக்கூடியதான ஒரு சூழலை ஏற்படுத்துவதை நோக்கியதான ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி தான் கொண்டுள்ள துணிச்சலை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தீர்வை நோக்கியதாக அதிகாரம் வழங்குவதன் மூலமாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லினக்கம் என்பவற்றைப் பலப்படுத்தக்கூடியதாக அரசியலமைப்பில் அமைக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட குறிப்பிடக்கூடிய ஏற்பாடுகளைத் தொடர்ச்சியாக அமுல்படுத்துவதற்கு தான் எடுத்துள்ள தீர்கமான முடிவை ஜனாதிபதி வெளியிட்டார். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளுடனும் விரிவானதோர் பேச்சுவார்த்தையை நடத்தும் தன் என்னத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் முயற்சிக்கு இந்தியாவின் ஆக்க பூர்வமான ஆதரவை இந்தியப் பிரதமர் வெளியிட்டார்."
மே 2011 இல் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதுடெல்லி சென்றபோது மேற்கூறிய பற்றுறுதி மீண்டும் தெரிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சருடனான செய்தியாளருக்கான கூட்டறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.
"இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் விரைவான. உருப்படியான முன்னேற்றத்தை உறுதிசெய்வதற்கு அவரது அரசாங்கம் கொண்டுள்ள பற்றுறுதியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார். 13ஆம் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் ஓர் அதிகாரப்பகிர்வு பொதி நல்லிணக்கத்திற்கு அவசியமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு தன் பங்கை வழங்கும். "
இதே பற்றுறுதி, ஜனவரி 2012இல் மீண்டும் கொழும்பில் மீள வலியுறுத்தப்பட்டது. இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கௌரவ எஸ்.எம்.கிருஷ்ணா, ஜனாதிபதி ராஜபக்ஷவைச் சந்தித்த பின்னர் அமைச்சர் ஜீ.எல் பிரிஷீடன் கலந்துகொண்ட செய்தியாளர் மாநாட்டில் விடுத்த கூட்டறிக்கையில் பின்வருமாறு கூறினார்.
"அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்றை எட்டுவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தத்தையும் அதற்கு மேலும் சென்று அதன் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை நோக்கிய தம் நகர்வுக்கான உறுதிப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் எமக்கு கூறியள்ளத. பேச்சுவார்த்தை நடைமுறைகளில் விரைவான, ஆக்கபூர்வமான அனுகுமுறையை நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்."
பின்னர், 2015- மார்ச் 13ஆம் திகதியன்று மாண்புமிகு பிரதமராகிய தாங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பெரிதும் குறிப்பிடத்தகுந்ததாகும். அதில்..
"இந்தியாவில் உள்ள மாநிலங்களைப் பலப்படுத்துவதே என் முன்னுரிமைக்கான விடயமாக உள்ளது. ஒத்திசைவான கூட்டாட்சியில் (சமஷ்டியில்) நான் அசையாத நம்பிக்கை உள்ளவன். எனவே நாம் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களையும், அதிகாரவார்த்தையும் பகிர்ந்தளிக்கிறோம். ஆத்துடன் அவர்களை தேசியமட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளில் முறையான பங்காளனாக்கிக் கொள்கிறோம். "
29 நவம்பர் 2019 இல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசமுறைப் பயனமாக இந்தியா சென்ற வேளையில், மான்புமிகு பிரதமர் நரேந்திரமோடி பின்வருமாறு கூறினார்.
"இலங்கையில் நல்லிணக்கம் பற்றி நாம் எமது கருத்தக்களை திறந்தமனதடன் பரிமாரிக்கொண்டோம். இன ஒற்றுமை தொடர்பில் அனைவரையும் உள்ளடக்கியதான அரசியல் பார்வை பற்றி என்னிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார். சுமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் என்பவை தொடர்பில் தமிழர்களில் அபிலாசைகளை நிறைவேற்றும் விதமாக, இலங்கை அரசாங்கம் தனது நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இதில் 13ஆவது சட்டத்திருத்தத்தை அமுல்படுத்துவதும் உள்ளடங்கும் வடக்க, கிழக்கு உட்பட்ட, இலங்கைமுழுவதுமான அபிவிருத்தியில் இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக எதிர்காலத்தில் விளங்கும்."
மேற்கூறிய அனைத்து விடயங்களிலும் அருந்து, இலங்கை அரசாங்கம் பற்பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமென்று வாக்குறுதியளித்துள்ளது என்பது தெளிவாகிறது. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை எட்டுவதற்க 13ஆவது சட்டத்திருத்தத்திற்கும் அப்பால் அதன்மீது கட்டியெழுப்பப்படும் என்ற குறிப்பிடத்தகுந்த பொறுப்பை மேற்கொள்வது என்ற விடயமும் இந்த வாக்கறுதியில் அடங்குகிறது.
ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் ஒரு முறையான, முழுமைபெற்ற அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்று தமிழ்பேசும் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட, அவ்வாறான வாக்குறுதிகள்; பெரும்பாலும் இந்தியாவுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. (மிகவும் பொருத்தமான முறையில்), ஏனெனில், 'இந்தியா - இலங்கை உடன்படிக்கை" என்ற இங்கையும் - இந்தியாவும் கைச்சாத்திட்ட அந்த சர்வதேச இருதரப்பு உடன்படிக்கையில் தான் மேற்கூறிய கொள்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயினும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அதிகரிப்பகிர்வு, தமிழ்மொழிக்கான சமவுரிமை போன்ற விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை அமுல்படுத்தத் தவறியதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்தும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களையும், அதன் கீழ் வரும் நிறுவனங்களையும் ஒரு தலைப்பட்சமாக மீளப்பெற்றுக்கொண்டுள்ளன. மேலும், தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை, வடக்கு கிழக்கின் மக்கள் குடிப்பரம்பலை தீவிரமான முறையில் மாற்றியமைக்கும் எண்ணத்துடன் பல்வேறு மறைமுக காரணங்களைக் காட்டி அரசாங்கத்தினால் தொடர்ச்சியாகப் பறிக்கப்பட்டுவருகின்றன. இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும், இல்லையெனில் இந்திய - இலங்கை உடன்படிக்கையில் உள்ள ஏற்பாடுகள் பூச்சியமாக்கப்பட்டுவிடும். இவை தொடர்பில் மாண்புமிகு பிரதமராகிய தங்களுடைய கவனத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் மலையகத் தமிழர்க தீவிர கவலைக்குரிய விடயங்களடக்கிய பட்டியலொன்றை நாம் இங்கு இணைத்துள்ளோம்.
இந்த நிலைமையில், இலங்கை அரசாங்கத்தை தனது பின்வரும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி வலியுறுத்த வேண்டும் என மாண்பு மிகு தங்களிடம் கோருகிறோம்.
1. பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துதல்.
2.. 1987 முதல் அரசாங்கத்தின் சகல தரப்புகளாலும் தெளிவாக மேற்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்துதல்.
அத்துடன் தமிழ் பேசும் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையை பயன்படுத்தும் வகையில் தம் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் கண்ணியத்துடனும், சுய கௌரவத்துடனும், அமைதியாகவும் பாதுகாப்பாகவும், ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத நாட்டிற்குள் ஏற்படுத்தப்படும் அமைப்பில் வாழ்வதற்கு வழி செய்யவேண்டும்.
தங்கள் உண்மையுள்ள
இரா.சம்பந்தன் - தலைவர் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மாவை சேனாதிராஜா தலைவர் - இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி (த.தே.கூ)
நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் - தலைவர் - தமிழ் மக்கள் கூட்டணி (த.ம.தே.கூ)
அ.அடைக்கலநாதன்- தலைவர்- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (த.தே.கூ)
தர்மலிங்கம் சித்தர்த்தன் - தலைவர்- ஜனநாயக மக்கள் விடுதலை முன்னண p(த.தே.கூ)
க.பிரேமச்சந்திரன்- தலைவர்- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (த.ம.தே.கூ)
ந. சிறீகாந்தா-தலைவர்- தமிழ் தேசியக் கட்சி (த.ம.தே.கூ)
இலங்கை தமிழ்பேசும் மக்களின் அவசர தீவிர கரிசனைக்குரிய விடயங்கள்
1. 13 ஆவது சட்டத்திருத்தமும் மாகாண சபைகளும்
இந்திய - இலங்கை உடன்பாட்டின் விளைவாக 13 ஆம் சட்டத்திருத்தத்தின் கீழ் உடன்பாடு காணப்பட்ட சட்டம் ஒழுங்கு, நிதி, காணி, கல்வி, விவசாயம்சார் சேவைகள் என்பவற்றுடன் தொடர்புடையதான, இதுவரை அசல் மூல ஏற்பாடுகளில் இருந்து பலவீனப்படுத்தப்பட்ட சகல ஏற்பாடுகளையும் மீண்டும் கொண்டுவருதல் வேண்டும். ஜனாதிபதி மட்டத்தில் இலங்கையினால் பொறுப்பேற்கப்பட்ட விடயங்களும் இதில் அடங்கும்.
தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த உறுதிமொழிக்கு இணங்க, மாகாண சபைத் தேர்தலை நடத்த ஏதுவாக தேர்தல் ஆணையகத்திற்கு வழிவகுத்தல் வேண்டும்.
2.மொழி உரிமை - 16 ஆவது சட்டத்திருத்தம்
அரசியலமைப்பில் 16 ஆவது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட உடன் 17 டிசம்பர் 1988 இல் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போது இருந்த ஏற்பாடுகள் அனைத்தும் சொல்லிலும் செயலிலும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
தேசிய மொழிகள் தொடர்பிலும் நிர்வாகத்தில், சட்டவாக்கத்தில், நீதித்துறையில், பாடசாலைகளில் பயிற்று மொழியாகவும் அரசியலமைப்பின் அத்தியாயம் iஎ ல் உள்ள 18 முதல் 25யு வரையான பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதன் பிரகாரம் அவை சொல்லிலும், வடிவிலும், அதன் அர்த்தப்படியும் முழுமையாக அமுல்படுத்தப்பட்ட வேண்டும்.
3.மக்கள் தொகைப் பரம்பல், நிலப்பறிப்பு மற்றும் தேர்தல் தொகுதி எல்லைகள் மாற்றம்
1957 இன் பண்டா - செல்வா உடன்பாடு
1965 இன் டட்லி - செல்வா உடன்பாடு
1987 இன் இந்திய - இலங்கை உடன்படிக்கை என்பவற்றில் உள்ள ஏற்பாடுகளுக்கு முரனாக செயல்பட்டு வடக்கு கிழக்கின் மக்கள் தொகைப் பரம்பல் வடிவத்தை எடுக்கப்படும் சகல முயற்சிகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
வரலாற்று ரீதியான வாழ்விடங்களான வடக்கும் கிழக்குப் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதனை உறுதிப்படுத்துகின்ற ஆதாரங்களைத் திரிவுபடுத்துவது மற்றும் அழித்தொழிப்பது போன்று அகழ்வாராய்ச்சித் திணைக்களத்தினாலும், மகாவலி அதிகாரசபையினாலும், வனத்திணைக்களத்தினாலும், வனவிலங்கு திணைக்களத்தினாலும், சுற்றுலாத்துறைச் சபையினாலும், மற்றும் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சினாலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், முயற்சிகள் என்பவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட எல்லைப் பிரதேச கிராமங்கள் சிங்களப் பிரதேசங்களுடன் இணைக்கப்படுவதன் மூலம் அல்லது சிங்களப்பிரதேசங்களின் கிராமங்கள் தமிழ் பிரதேசங்களுடன் இணைக்கப்படுவதன் வாயிhக வடக்கும் கிழக்கும் மாற்றியமைக்கப்படுதல் மூலம் தமிழர்களைத் தமது பகுதிகளிலேயே சிறுபான்மையினதாக மாற்றி இன விகிதாசாரம் மாற்றப்படுகிறது. இதனால் உள்;ராட்சி மாற்றங்களில் மாகாண சபைகளில், பராளுமன்றத்தில் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளுவது தடுக்கப்படுகின்றது. இவ்வாறான நடைமுறைகள் தொடராமல் நிறுத்தப்படவேண்டும்.
பௌத்தமத காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் தொன்மை விளங்குகிறது என்பதை அகழ்வாராய்ச்சித் திணைக்களம் அங்கீகரிக்க வேண்டும். தமிழர்களே (பௌத்த மத தமிழர்களே) பௌத்தத்தை இலங்கைக்குள் அனுமதித்து வறவேற்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அத்துடன் வரலாற்றைக் கொச்சைப்படுத்துவதையும் கைவிட்டு, அந்த உண்மைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும்.
4.பிரசாவுரிமையும் சமத்துவமும் (நாட்டின் குடியிரிமையும் சமத்துவமும்)
முழுமையான குடியுரிமை என்ற அர்த்தத்தின் அடிப்படையில் சமவுரிமை, வீட்டுரிமை, வாழ்வாதார உரிமை, கல்வி, சுகாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் என்பனவற்றை உறுதிப்படுத்தி வாக்குறுதி அளிக்கும் உடன்பாடுகளான 1954 இன் நேரு - கொத்தலாவல உடன்பாடு, 1964 இன் சிறிமா - சாஸ்திரி உடன்பாடு, 1974 இன் சிறிமா - இந்திரா உடன்பாடு ஆகிய சகல இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்பாடுகளும் பாரபட்சமான முறையில் மீறப்படுவதுடன், உதாசீனம் செய்யப்படுகின்றன. இவ்வாறான சம உரிமை மீறல், பராபட்சம் என்பன உடனடியாக நிறுத்தப்பட்டு முழுமையான குடியுரிமையை நோக்கி நகரவேண்டும்.
5.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள சிறைக் கைதிகள்
தமிழ் மக்களுக்குப் முஸ்லீம் மக்களுக்கும் எதிராகவே பிரதானமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக மீளப்பெறப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையிலிடப்பட்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.
6.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் நியாயமாகவும் முழுமையாகவும் கையாளப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் சுதந்திரமாக விசாரிக்கப்பட்டு, இந்த கொடூரமான குற்றத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
7.தேர்தல் மறுசீரமைப்பு
இலங்கைத் தீவில் ஜனநாயக நடைமுறையில் உள்ள பல கட்சி முறைமையின் கீழ் பரந்து வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் எவராயிருப்பினும் அவர்களுக்கு இன ரீதியான அரசியல் தேசிய இனங்களுக்குரிய போதிய பிரதிநிதித்துவத்தை பெறக்கூடியதாக அவர்களுடைய அரசியல் கட்சிகளுக்கும், நலன் நாடும் குழுக்களுக்கும் பாராளுமன்றைத்திலும், மாகாண சபைகளிலும் கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டும்.
8.ஒரே நாடு ஒரே சட்டம்
மத்திய அரசாங்கத்தைத் தவிர்ந்த வேறெந்தவொரு சட்டவாக்க அமைப்பும் நாட்டில் இருப்பதைத் தடுப்பது அல்லது ஒழிப்பதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை தடுக்கும் நோக்கில் ஒரே நாடு ஒரே சட்டம் எண்ற விடயத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களும் முஸ்லீம்களும் தமது பாரம் பரிய சட்டங்களைக் கடைப்பிடிப்பதை இது தடுக்கும். அத்துடன் அவர்களது கலாசாரத்தையும், பரம்பரியத்தையும் பாதுகாப்பதைத் தடுக்கும். இவ்வாறான ஆணைக்குழு இல்லாதொழிக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்தினால், தேசிய இனங்களின் தனித்துவ அடையாளங்களும், உரிமைகளும்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு 7 ஈழத் தமிழ் தலைவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.