முசுமுசுக்கை இலை.. நுரையீரலின் பாதுகாவலன்..ஒரேயொரு கைப்பிடி மொசுமொசுக்கை இலையில் ஒளிந்துள்ள அற்புதம்
சென்னை: முக்கோண வடிவ இலைகளுடன், சிவப்பு நிற பழங்களை கொண்ட முசுமுசுக்கை கீரை, சித்த மருத்துவத்தில் தனிமுக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இந்த இலைகள் சொரசொர தன்மையுடன் இருக்கும்.. தடவும்போது, "முசுமுசு"வென்ற உணர்வை தந்தால் "முசுமுசு" என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். மொசுமொசக்கை, மாமூலி, ஆயிலேயம் என்றும் இதற்கு வேறு பெயர்கள் உண்டு..

பாதுகாவலன்: முசுமுசுக்கை என்றாலே மூக்குக்கு முசுமுசுக்கை என்பார்கள்.. காரணம், கப நோய்களை கபளீகரம் செய்யக்கூடிய சக்தி வாய்ந்த மூலிகை இந்த முசுமுசுக்கைதான்.. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், 'நுரையீரலின் பாதுகாவலன்' என்றே சொல்லலாம்.
முசுமுசுக்கை கீரையில் ஆரோக்கியம் தரக்கூடிய ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன.. இதன் இலையில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்திருக்கிறது.
சளிக்கு நிவாரணம்: அடிக்கடி சளி பிடிக்கும் போது அவை நுரையீரல் வரை சென்று அங்கு சேர்ந்துவிடும்.. இதனால், நுரையீரலில் தொற்று ஏற்படும்.. இந்த தொற்றையும், படிந்துள்ள சளிப்படலத்தையும் மொத்தமாக வெளியே தள்ளும் வேலையைதான் முசுமுசுக்கை கீரை செய்கிறது.. மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அத்துடன், சளி, கோழை, தும்மல், குறட்டை உட்பட சுவாசம் சம்பந்தப்பட்ட அதாவது நுரையீரலுடன் தொடர்புடைய அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வாக உதவுகிறது.
தலைமுடிக்கு மிகவும் நல்லது இந்த கீரை.. இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடிகொட்டுவது கட்டுப்படும்.. நன்றாக வளரவும் செய்யும்.. அத்துடன் முசுமுசுக்கையானது இளநரையை கட்டுபடுத்தும்.. உடல் சூட்டை தணித்து, கண் எரிச்சலையும் போக்கும்...
நுரையீரல்: காச நோய் உள்ளவர்கள் அடிக்கடி உணவில் இந்த கீரையை சேர்த்து கொள்ளலாம்.. பசியை அதிகரிக்க செய்யக்கூடியது... ஆஸ்துமா நோயின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், இந்த கீரையை உணவில் சேர்த்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.. முழுமையாகவும் குணமடையவும் வாய்ப்புண்டு என்கிறார்கள். சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள் நோய் தீவிரமாகாமல் தடுக்க உதவுகிறது.
உடலில் ரத்தத்தை சுத்தம் செய்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் முசுமுசுக்கையை எடுத்து கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும். முசுமுசுக்கை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து நெய்யில் வதக்கி, சுடுசோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் மெல்ல மெல்ல குறையும் என்கிறார்கள்.
துவையல்: முசுமுசுக்கை கீரையின் இலை மற்றும் வேர் மருத்துவ குணம் கொண்டவை. இந்த கீரையை பலர் துவையல் அரைத்து சாப்பிடுவார்கள்.. இதை துவையலாக்கி சூடாக சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் கலந்து சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால் மூக்கிலிருந்து வடியும் நீர் குறையும்.

சிலர் அரிசியோடு இதன் இலைகளையும் சேர்த்து மாவாக அரைத்து, அடை போல சுட்டு சாப்பிடுவார்கள். முசுமுசுக்கையை காரக் குழம்பு போல வைத்து, சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.. இதனால் மூக்கில் ஒழுகும் நீர், தும்மல் யாவும் பறந்துவிடும்.
தோசை: இந்த முசுமுசுக்கையுடன் மிளகு, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து சட்னி அரைத்தும் பயன்படுத்துவார்கள்.. இதனால் ஜீரணி சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். முசுமுசுக்கை இலையை அரைத்து, தோசை மாவிலும் கலந்து தோசை போல வார்த்து சாப்பிடலாம்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முசுமுசுக்கை பொடியை வாங்கி வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.. வள்ளலார் சிறப்பாக விளக்கியுள்ள 4 மூலிகைகளுள் இந்த முமுசுக்கையும் ஒன்றாகும் என்பதை நாம் எப்போதுமே மறந்துவிடக்கூடாது..!!












Click it and Unblock the Notifications