தாய்மை எனும் காதல்!
தாய்மையைப் போன்ற ஒரு அருமையான காதல் உலகில் எங்குமே காண முடியாது.. தட்ட வேண்டிய நேரத்தில் தட்டியும், தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்தும், தழுவ வேண்டிய நேரத்தில் தழுவுவதும் தாய்மைக்கு மட்டுமே உரிய அம்சங்களாகும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்வைப் பூர்த்தியடையச் செய்வது தாய்மை தான். பிள்ளை உண்டான நாள் முதல் அதன் வளர்ச்சியை அணு அணுவாக அனுபவித்து பிள்ளை பெறும் வலியைக் கூட பொருட்படுத்தாது குழந்தை பத்திரமாக வெளியே வந்தால் போதும் என்று நினைப்பாள். பத்து குழந்தை இருந்தாலும் தாயின் அன்பில் வேறுபாடு கிடையாது. குழந்தையை உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்வாள்.
நாம் தோல்வி அடையும் போது நமக்கு தன்னம்பிக்கை கொடுத்து பிள்ளைக்காகப் பார்த்து பார்த்து சமைத்து அவன் எத்தனை மணிக்கு வந்தாலும் அவனுக்கு உணவளித்த பின்னர் தான் தாய் உணவு அருந்துவாள். பிள்ளைக்கு ஒரு கஷ்டம் என்றால் துடிதுடித்துப் போய் விடுவாள். எப்போதும் பிள்ளைகளுக்குப் பக்கபலமாக நிற்பாள்.
தன் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து அகமகிழ்ந்து விடுவாள் தாய். தன் பிள்ளையின் முகம் பார்த்தே அவன் மனநிலையைத் தெரிந்து கொள்வாள். அம்மாவின் சேலைக்குள் மறைந்து கொள்ளாத பிள்ளைகளே கிடையாது. தாயின் அரவணைப்பில் தன்னிலை மறப்போம். தான் கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை சிரமப்படக் கூடாது என்று நினைக்கும் தாயுள்ளம்.
தாயிற் சிறந்த கோவில் இல்லை என்பார்கள். ஒரு பெண் தன் கணவன் மீது வைத்திருக்கும் அன்பை விட தன் பிள்ளைகள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பாள். குழந்தைகள் தான் அவள் உலகம் வாழ்க்கை எல்லாமே. பிள்ளைகளின் வெற்றியைக் கொண்டாடுவாள். நம் வளர்ச்சிக்கு வித்திடுபவளும் தாய்.
தாய்மை என்பது வரம் என்று சும்மாவா சொன்னார்கள். ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடையும் போது ஏற்படும் சந்தோசத்திற்கு ஈடு இணையே கிடையாது. தாய்மை அழகானது. அன்பு அரவணைப்பு அக்கறை மிகுந்தது. தாய்மையைப் போற்றுவோம்.