நாளை நமதே, இந்த நாடும் நமதே! .. ஜெயலலிதா
சென்னை:
அ.தி.மு.க. ஆரம்பித்து 28 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. 29- வது ஆண்டில் அ.தி.மு.கழகம் அடியெடுத்து வைக்கின்ற நிலையில் தொண்டர்களுக்கு மடல்எழுதியிருக்கிறார் அ.தி.மு.கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அ.தி.மு.க.வின் 28வது ஆண்டு விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் வருமாறு:
இந்த இருபத்தெட்டாண்டுக் காலத்தில் இயக்கம் அடைந்த வெற்றிகளும் செய்த சாதனைகளும் நம்மை பெருமையு ம், பூரிப்பும் கொள்ள வைக்கின்றன.அதே நேரத்தில் இயக்கம் சந்தித்த சோதனைகளும் இன்னல்களும் நம் இதயங்களில் மறக்க முடியாத வடுக்களாக மாறியுள்ளன.
தன் குடும்பம் தொடர்ந்து ஆள வேண்டுமானால். நான் வாழக்கூடாது என்பது தானே கருணாநிதியின் நயவஞ்சகம்? நான் தேர்தலில் நிற்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற சதி இன்று நேற்று முளைத்ததல்ல, கழகத்தை அழிக்க கருணாநிதி போட்ட நீண்ட நெடுங்காலத் திட்டம் அது.
இன்றைக்கு சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றுரைக்கும் கருணாநிதி என்றாவது அவர் மீதான வழக்குகளை நீதி மன்றங்களில் எதிர் கொண்டதுஉண்டா? சர்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் போடப்பட்ட ஊழல் வழக்குகள் ஆகட்டும், சி.பி.ஐ வழக்காகட்டும், சிவசுப்பிரமணியம் கமிஷன்ஆகட்டும் - கருணாநிதி தைரியமாகச் சந்தித்ததுண்டா?
இன்றைக்கு தனி நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் சட்டம் தன் கடமையைச் நசெய்யும் என்று கூறிய கருணாநிதி இதே வழக்கில் உயர் நீதிமன்றம் என்னைவிடுவித்த பொழுது உயர் நீதிமன்ற நீதிபதியை தரக்குறைவாக விமர்சித்து, தனது கட்சிக்காரர்களை விட்டு சுவரோட்டி அடித்து சென்னை மாநகரம்முழுவதும் ஒட்டியதாகப் பரவலாகப்பேசப்பட்டதே!
நான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கருணாநிதி உச்ச நீதிமன்றத்திற்கு ஓட வில்லையா? மேல் முறையீடு செய்யவில்லையா? இன்று அதே மேல்முறையீட்டு உரிமை எனக்கில்லையா?
பேய் அரசாண்டால் பிணந் தின்னும் சாத்திரங்கள் என்பார்களே அது போல மத்தியிலும், மாநிலத்திலும் எனக்கெதிராக ஆட்சி நடந்தாலும் நீதிமன்றத்தின்மூலம் எனது நேர்மையை நிரூபிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஆங்கில பழமொழி கூறுவது போல, இறுதியில் சிரிப்பவர்களே வெற்றியாளர்கள் என்ற பொன்மொழி, புகழ் மொழியாகும் காலம் வரத்தான்போகிறது.
தனி நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கழகத்தில் குழப்பம் வரும் என்று எண்ணியவர்கள் இருண்டு போகும் வகையில், இயக்கம் கட்டுக் கோப்பு மிக்கராணுவமாக இன்னும் அதிக எழுச்சியோடு நிமிர்ந்து நிற்பதை நானும் பார்க்கிறேன். நாடும் பார்க்கிறது.
முன்பை விட கழகம் கூடுதலான வேகம் பெற்றிருக்கும் நிலையில், 29-ம் ஆண்டில் இயக்கம் அடியெடுத்து வைக்கும் அற்புதத் திருநாள் மலர்கிறது.ஒவ்வொரு முறையும் நெருக்கடி ஏற்படுகின்ற பொழுது நெஞ்சுறுதியோடு எனக்குத் துணை நிற்கும் லட்சோப லட்சம் கழக உடன் பிறப்புக்களைப்பெற்றது எனது பாக்கியமாகும்.
மக்கள் மன்றத்தின் மூலம் வெல்ல திராணியற்ற கருணாநிதி என்னை வீழ்த்த வழக்கு மன்றங்களிடம் சரணாகதி அடைந்து நிற்பதற்கு பொது மக்களிடம்பெரும் எதிர்ப்பு அலையை இன்று உருவாக்கியிருக்கிறது.
வழக்கு மன்றத்தில் நியாயத்தை உறுதியாக நிலைநாட்டி, ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான மக்கள் மன்றத்தின் பெரும் நம்பிக்கையைப் பெற்று,2001-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் அமைக்க இந்நன்னாளில் அனைவரும் சபதம் ஏற்போம்.
நமக்கு ஒளி மயமான எதிர்காலம் காத்திருப்பது உண்மை. எத்தனை கருணாநிதிகள் முயன்றாலும் நாளைய வெற்றியை நம்மிட மிருந்து பறித்து விடமுடியாது.
நாளை நமதே! இந்த நாடும் நமதே! என்ற நம்பிக்கையோடு மக்களின் ஆதரவையும் அன்பையும் பெறும் வகையில் தொடர்ந்து தொய்வின்றி பொதுப்பணிஆற்றுவோம்! உள்ளப்பூர்வமாக மக்களுக்குத் தொண்டு புரிவோம் என்று அ.தி.மு.கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு மடல்எழுதியுள்ளார்.