"பயாஸ்கோப்" காட்டும் மதுரை தி.மு.க.
மதுரை:
மதுரை மக்களுக்கு கலர கலராய் கதை சொல்லிக் கொண்டிருக்கிறது மதுரை தி.மு.க. ஸ்டாலினுக்கு தலைவலி கொடுத்ததால் திடீரென அழகிரியைகட்சியை விட்டு தூக்கினார் முதல்வர் கருணாநிதி. பின்னர் தேர்தலை காரணம் காட்டி மீண்டும் அழகிரியை கட்சிக்குள் சேர்த்து கொள்ள உள்ளது தி.மு.க.தலைமை.
மதுரையில் இருந்து கொண்டு தி.மு.க.வின் தென் தமிழகத் தலைவர் போன்று செயல்பட்டுவந்தவர் மு.க.அழகிரி. அவருடைய பிறந்த நாளன்று மாவட்டகலெக்டர்கள் அவரது இல்லம் சென்று வாழ்த்து தெரிவிக்கும் அளவிற்கு பவர்புல் அரசியல்வாதியாக இருந்தார். இருக்கிறார். தி.மு.க. ஆட்சியில்உள்ளவரை பவர் புல்லாகவே இருப்பார்.
இவர் சொல்லும் நபர்களுக்கு தி.மு.க. தலைமை தேர்தல் சீட்கள் வழங்கி வந்தது. மதுரை மாநகராட்சியில் உள்ள மேயர் உள்ளிட்ட பல தி.மு.க.கவுன்சிலர்கள் அழகிரியின் ஆதரவில் சீட் பெற்றவர்கள். ஆட்டோ வாங்க லோன் கூட தளபதி சொன்னால் தான் கிடைக்கும்.
மதுரை அரசியலில் இவருக்கு போட்டி தமிழக சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன். பழுத்த ஜென்டில் மேன் அரசியல்வாதி. கச்சடா அரசியல், ரெளடிஅரசியலை வெறுப்பவர். எல்லோராலும் மதிக்கப்படும் பெரியவர். கருணாநிதி-ஸ்டாலினின் அன்புக்கும் பாத்திரமானவர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அழகிரியின் ஆதரவாளரான தி.மு.க.வின் மதுரை மாவட்ட செயலாளர் காவேரிமணியத்திற்கு எம்.பி.சீட் தராததால்கட்சியிலிருந்து பலர் ராஜினாமா செய்தனர்.
பின்னர் ஏற்பட்ட அரசியல் சமரசத்தில் பதவி விலகியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு கட்சியில் மீண்டும் சேர்ந்தனர்.
தம்பி ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுவதாகக் கூறி அவரை எதிர்க்க ஆரம்பித்தார் அழகிரி. இது கருணாநிதி-அழகிரி சண்டையாகஉருமாறியது. அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மதுரையில் பல இடங்களில் அவரின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்தனர். பஸ்களை எரித்தனர்.
அவரது ஆதரவாளர்கள் பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு அவர்கள் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டி உயிர்கொடுத்தனர்.
கடந்த மாதம் தனது பிறந்த நாள் விழா ஒன்றில் பேசிய அழகிரி, தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு சபாநாயகர்தான் காரணம் என பொதுமேடையில் அறிவித்ததன் மூலம் அவர்களிடையேயான பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில், அழகிரி எழுச்சிப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியதோடு, தனது ஆதரவாளர்களுடன் 60 இடங்களில் தனித்து போட்டியிட போவதாகஅறிவித்தார் அழகிரி.
ஏற்கனவே, பா.ம.க., த.மா.கா., கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பது தி.மு.க.வை பலவீனப்படுத்தியுள்ளது.
அழகிரி வேறு தனி இயக்கம் ஆரம்பித்தால் தென் மாவட்டங்களில் தி.மு.க.வின் வெற்றி கேள்விக்குறியாகி விடும் என எண்ணிய தி.மு.க. தலைமை,அழகிரியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.
தலைமையின் சார்பில், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் அழகிரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தையின் முடிவில், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அழகிரியின் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் ஆதரவாளர்களை விடுவிப்பதோடு அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். இந்த மாதம் 11ம்தேதிமதுரை வரும் கருணாநிதியும், அழகிரியும் இணைந்து, மேலமாசிவீதி பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர்.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போல் மதுரை அரசியலில் தனது அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார் முதல்வரின் மதுரை மைந்தன் மு.க.அழகிரி.
அழகிரியின் இந்த வெற்றியையடுத்து மதுரை அரசியலில் சபாநாயகர் கோஷ்டியின் நிலை கவலைக்கு உரியதாக உள்ளது.
இந்தக் குடும்பச் சண்டையில் முன்னாள் பாண்டியன் போக்குவரததுக் கழகம் (இன்னாள் மதுரை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்) இழந்தபஸ்களுக்கு யார் பொறுப்பு??