வைகோவின் தனிப்பாதை
லட்சியத்தில் உறுதி, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை இதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) தாரக மந்திரம்.
இந்தத் தேர்தலில் பாஜக போட்டியிடும் 21 தொகுதிகளைத் தவிர 213 தொகுதிகளில் போட்டியிடுகிறது மதிமுக.
திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக இருந்தது மதிமுக. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தொகுதிப்பங்கீட்டில் திமுக தலைமைக்கும், வைகோவுக்கும்இடையே ஆரம்பித்த பிரச்சனையால் கருணாநிதிக்கும், வைகோவுக்கும் மனதளவில் சிறிய இடைவெளி ஏற்பட்டது.
பின்னர் அதுவே நாளாக, நாளாக விஸ்வரூபமானது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இல்லாத வேண்டாத தொகுதிகள் என்றுமதிமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சாலை மறியல், போராட்டம் நடத்தினர்.
கொஞ்சம், கொஞ்சமாக இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த பூசல் வளர ஆரம்பித்தது. ஏற்கனவே ஸ்டாலினுக்கும், வைகோவுக்கும் பனிப்போர்இருந்து வந்தது.
இந்த நிலையில் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி அவரை முதல்வராக்கும் முயற்சியில் கருணாநிதி ஈடுபடுகிறார் என்ற ஆதங்கம் வைகோ மட்டுமின்றி பலகூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் இருந்தது.
திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அனைத்தும் வேண்டாத தொகுதிகள் என்று மதிமுகவினர் அதிருப்தியில் இருந்தனர்.
அதே நேரம் வைகோவைக் கண்டாலே ஆகாத ஸ்டாலின் கொடுத்த ப்ரஷராலும் கூட்டி, கழித்துப் பார்த்த திமுக தலைவர் கருணாநிதி வைகோ கூட்டணியைவிட்டு வெளியேறினால் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று ஸ்டேட்மென்ட் விடுத்தார்.
கிடுகிடுத்துப் போனார் வைகோ. எதற்கு இந்த திடீர் முடிவு என்று ஒரு பக்கம் தீவிரமாக ஆலோசித்தாலும், மனதைத் தளரவிடவில்லை.
மாநிலத்தில் நாங்கள் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டாலும், மத்தியில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்ந்து இருப்போம் என்றார்.
மதிமுகவுக்கு இளைஞர்களின் ஓட்டுக்கள் கணிசமாகக் கிடைக்கும் என்று கணக்குப் போட்ட வைகோ, பாஜக போட்டியிடும் 21 தொகுதிகளைத் தவிரபிற 213 தொகுதிகளிலும் மதிமுக தனித்து தேர்தலைச் சந்திக்கும் என்று அதிரடியாக அறிவித்தார்.
பிற கட்சிகள் யாருக்கு எந்தத் தொகுதிகளைக் கொடுப்பது? தாங்கள் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது என்று தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்213 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாக தைரியமாக அறிவித்து விட்டார் அவர்.
இதுதான் மதிமுக 213 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதற்கான பின்னணி.
அதிருப்தி அடைந்த ராதாகிருஷ்ணன்..
திமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியதால் மிகவும் அதிருப்தியடைந்தார் மதிமுக செய்தித்தொடர்பாளர் ராதாகிருஷ்ணன். மதிமுக விலகியதைகடுமையாக ஆட்சேபித்தார். யாரும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத காரணத்தால் மதிமுக கட்சி அலுவலகத்துக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தார்.
பின்னர் மதிமுகவிலிருந்து விலகுவதாக தடாலடியாக அறிவித்து விட்டு மதிமுகவிலிருந்து விலகியே விட்டார். மதிமுகவிலிருந்து விலகிய கையோடு திமுகவில்இணைந்தார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய கருணாநிதி கூறுகையில், தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் உண்டு. 3 வதாக உள்ள மதிமுகவாக்குகளைப் பிரிப்பதற்காக வந்துள்ள கட்சி என்றார்.
கண்ணுக்கு கண்.. பல்லுக்குப் பல்..
வைகோவும் விடவில்லை. கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல் என்பது போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
திமுக விற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது. திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் சாதிவாரியாக திமுகதினகரன் நாளிதழில் பட்டியலிட்டுள்ளது. இது முதல்வரின் உத்தரவின் பேரில் தான் வெளியிடப்பட்டுள்ளது.
திமுகவிற்காக உயிரைக் கொடுத்து பாடுபட்ட மூத்த தலைவர்களுக்கு இன்று சாதிப் பெயர் கொடுத்து இப்பட்டியல் வெளியிடப்படுள்ளது. பெயர் சொல்லிக்கூட அழைக்காமல் நாங்கள் மரியாதையாக பேராசிரியர் என அழைக்கப்பட்ட அன்பழகன் இப்போது முதலியார் முத்திரை குத்தப்பட்டு விட்டார்.கோ.சி. மணி முக்குலத்தோர் ஆனார். ஆற்காடு வீரசாமி நாயுடுவானார்.
பரிதி இளம் வழுதி தாழ்த்தப்பட்டோர் ஆக்கப்பட்டார். இதற்கு மன்னிப்பே கிடையாது. திமுகவில் தவறுக்கு மேல் தவறு நடக்கிறது. அண்ணா, பெரியார்கொள்கைளை திமுக குழி தோண்டி புதைத்து விட்டது.
சாதிக் கட்சிகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் கிடையாது என கூறியிருந்தோம். ஆனால் யாரையும் கேட்காமல் சாதிக் கட்சிகளைச்சேர்த்ததோடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே துரோகம் செய்து விட்டது திமுக எனக் குற்றம் சாட்டினார்.