வீரப்பன் வேட்டை: மத்திய, தமிழக, கர்நாடக அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வரும் பிப்ரவரி 11ம்தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய, தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வீரப்பனை விரைவில் பிடிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி டெல்லிஉயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த தனஞ்செயன் செளகான்என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில்,
கொலை, கடத்தல் உள்ளிட்ட 119 வழக்குகளில் சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடப்பட்டு வருகிறான். அவனைப் பிடிக்க வேண்டிய கர்நாடக அரசு நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக அவனுக்கு ரூ.20 கோடிகொடுத்ததாக அம்மாநில முன்னாள் டி.ஜி.பி. தினகர் தன்னுடைய புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமாரை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதால் தான் தற்போது கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைவீரப்பன் கடத்திக் கொன்று விட்டதாகவும் தெரிகிறது.
இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களைத் தண்டிக்க வேண்டும். இதுதொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
மக்களின் உயிரைக் காப்பதில் அரசு எந்திரங்கள் தோல்வியடைந்து விட்டன. தமிழக, கர்நாடகஅதிரடிப்படையினரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுக்குள் தேடிக் கொண்டிருக்கிறார்களே தவிர,வீரப்பனை இன்னும் பிடிக்கவில்லை.
எனவே வீரப்பனை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று தனஞ்செயன் அம்மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய, தமிழக மற்றும் கர்நாடகஅரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப கடந்த மாதம் உத்தரவிட்டது.
மேலும் தினகர் உள்ளிட்ட இரு மாநிலங்களைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைவரும் ஜனவரி 6ம் தேதிக்குள் (இன்று) பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. நீதிபதி தல்வீர் பண்டாரி, நீதிபதி எஸ்.கே.அகர்வால் ஆகியேர் அடங்கிய டெல்லி உயர் நீதிமன்ற பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
அப்போது, தங்கள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய,தமிழக மற்றும் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரினர்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும்,இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிப்ரவரி 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இவை தொடர்பான விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது. குறிப்பாக, வீரப்பனைப் பிடிக்கும் விஷயத்தில் தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துகர்நாடக அரசு தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
வீரப்பனைப் பிடிப்பதற்கான புதிய வியூகங்கள் வகுப்பது குறித்து கடந்த வாரம்தான் டெல்லியில் உள்துறைஅமைச்சகத்தில் தமிழக, கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் கேட்கும் உதவிகள் அனைத்தும் தரப்படும் என்று அப்போது மத்திய அரசுஉறுதி அளித்துள்ளது. வீரப்பனைப் பிடிக்கும் பணியில் அதிரடிப்படையினருக்கு நன்கு பயிற்சி பெற்ற கறுப்புப்பூனைப் படை கமாண்டோக்கள் உதவுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
-->