கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கருணாநிதி முக்கிய ஆலோசனை
சென்னை:
மாறனின் மறைவைத் தொடர்ந்து திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்களின் குழு தலைவராக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுவரை திமுக எம்.பிக்கள் குழு தலைவராக இதுவரை முரசொலி மாறன் இருந்து வந்தார். அவர் மரணமடைந்து விட்டதால் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது, நாடாளுமன்றத்தில் திமுகவின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்க எம்.பிக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.
காலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் பாலு தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவை எம்.பிக்களின் துணைத் தலைவராக செ.குப்புசாமி, தலைமைக் கொறடாவாக பழனிமாணிக்கம், துணைக் கொறடாவாக ஆதிசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலங்களவை தலைவராக விடுதலை விரும்பி, துணை தலைவராக காதர், கொறடாவாக சிவசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இரு அவைகளின் பொருளாளராக அக்கினிராஜு தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக எம்.பிக்கள் குழுக் கூட்டுத் தலைவராக செ.குப்புசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது.
ஆனால், முரசொலி மாறனின் குடும்பத்தினர் மற்றும் அன்பழகன் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற கருணாநிதியின் வலது கரமான மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவே தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபாவில் தற்போது திமுவுக்கு 11 உறுப்பினர்களும் ராஜ்யசபாவில் 7 பேரும் உள்ளனர்.
கூட்டணி குறித்து ஆலோசனை:
இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சித் தலைவர் கருணாநிதி இன்று ஆலோசனை நிடத்தினர். அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து பூர்வாங்கமாக பேசப்பட்டது. இருப்பினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதற்கான நேரம் தற்போது வரவில்லை. நேரம் வரும்போது இறுதி முடிவை எடுப்போம்.
திமுகவையும், அதிமுகவையும் சம தூரத்தில் வைத்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறியிருப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவர்களது கூற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
மாறன் மறைவையடுத்து அவருக்குப் பதிலாக இன்னொரு அமைச்சர் பதவியை திமுகவுக்கு கோர மாட்டோம். இன்னும் ஒரு ஆண்டில் தேர்தல் வரவுள்ளதால் இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை.
டிசம்பர் 15ம் தேதி பொடாவுக்கு எதிரான போராட்டம் வெற்றிகரமாகவும், அமைதியாகவும் நடைபெறும் என்றார் கருணாநிதி.
இன்று மாறன் நினைவஞ்சலி கூட்டம்
முரசொலி மாறனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மாறனின் படத்தை கருணாநிதி திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர் அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.
இதில், இல.கணேசன், ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், நல்லகண்ணு, வரதராஜன், ப.சிதம்பரம், எஸ்.கண்ணப்பன், ஆர்.எம்.வீரப்பன், திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் சேதுராமன், அப்துல் காதர், அமானுல்லா கான், செல்லமுத்து, இந்து ஆசிரியர் ராம், பத்திரிக்கையாளர் பொன்.தனசேகரன் ஆகியோர் பேசுகிறார்கள்.