திருப்பதி ஆலய சொத்துக்களை கைப்பற்ற திட்டம்: சங்கராச்சாரியார் மீது ஜீயர்கள் புகார்
சென்னை:
திருப்பதி கோவில் சொத்துக்களைக் கைப்பற்ற காஞ்சி சங்கராச்சாரியார் மறைமுகமாக முயற்சி செய்து வருவதாக திருமலை ஜீயர்கள் புகார் கூறியுள்ளனர்.
சைவ மடமான காஞ்சி மடத்தின் தலைவரான சங்கராச்சாரியார், வைணவ திருத்தலங்களின் அதிகாரத்தில் தலையிட்டு வருவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
திருப்பதி கோவில் வழிபாட்டு முறைகள் பற்றி காஞ்சி சங்கராச்சாரியர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் தமிழகத்தின் முக்கிய வைணவ மடாதிபதிகளான ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவரத எத்திராஜ ஜீயர் சுவாமிகள், காஞ்சி அழகிய மணவாள ஜீயர் சுவாமிகள், நாங்குநேரி வானமா மலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மேலக்கோட்டையது கிரி எத்திராஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள் ஆகியோர் இன்று நிருபர்களைச் சந்தித்தனர்.
நிருபர்களுக்குப் பேட்டியளித்த நாங்குநேரி வானமா மலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவரத எத்திராஜ ஜீயர் சுவாமிகள், மேலக்கோட்டையது கிரி எத்திராஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், காஞ்சி அழகிய மணவாள ஜீயர் சுவாமிகள் |
அவர்கள் கூறியதாவது:
திருப்பதி கோவிலில் பூஜை செய்யும் உரிமை எங்களுக்கும் கூட உண்டு என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார். திருப்பதியின் சொத்துக்களையும், நிர்வாக அதிகாரங்களையும் தன்வசம் கொண்டு வரவேண்டும் என்ற மறைமுக முயற்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் இறங்கியுள்ளார் என்பதையே அவரது பேச்சுக்கள் காட்டுகின்றன.
பொய்யை பலமுறை சத்தம்போட்டுக் கூறுவதன் மூலம் அதை உண்மையாக்கிவிட முடியும் என்று அவர் கருதுகிறார். ராமானுஜருக்கும் திருப்பதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இந்த காமகோடி அறிக்கை கண்டுபிடித்து அறிக்கை விட்டுள்ளார். அவரது இந்த அறிக்கையை வெற்று அரசியல் என்று சகித்துக் கொள்ள நேரிட்டாலும் ஒத்துக் கொண்டதாக ஆகாது.
ஆத்திரக்கார அறிவிலிகளின் கூக்குரல் போல சங்கராச்சாரியாரின் அறிக்கை அமைந்துள்ளது. வைணவ வழிபாட்டு மரபு விசிஷ்டாத்வைத கோட்பாடுகளுடன் தொடர்பு கொண்டதல்ல என்ற அவரது ஆராய்ச்சி அதைவிட வேடிக்கையானது.
ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட 4 மடங்களில் எதிலும் சோராத நவீன மடமான காஞ்சி காமகோடி மடத்தின் புதுப்பெரியவர் தனது ஆட்களைக் கொண்டு பத்திரிக்கைகளி வீண் அறிக்கைகள் விட்டு பரபரப்பு ஏற்படுத்த முயல்கிறார்.
திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் எங்களுக்கும் பூஜை செய்யும் உரிமை உண்டு என்று கூறுவதன் மூலம் திருப்பதி கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற முனையும் அவரது ராஜ தந்திரம் தெரிகிறது.
நாங்கள் அனைத்து மதக் கோட்பாடுகளையும் மதிக்கிறோம். சைவம், வைணவம் என்று பிரித்துப் பார்ப்பதும் இல்லை. ஆனால் சங்கராச்சாரியார் அந்தப் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்தகைய வேலையில் இறங்கியுள்ளார்.
சங்கராச்சாரியார் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடர்வோம் என்றனர்.
மேலும் அயோத்திப் பிரச்சனையை தீர்க்க சங்கராச்சாரியாருக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றும் வைணவ திருத்தலங்களின் ஜீயர்கள் கூறினர்.
பா.ஜ.கவிடமும் அதிமுகவிடமும் தனக்குள்ள செல்வாக்கை வைத்துக் கொண்டு பிற மடங்களை சங்கராச்சாரியார் கட்டுப்படுத்த முயல்வதாக பரவலாகவே புகார் எழுந்துள்ளது.
கோடிக்கணக்கான இந்துக்களால் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படும் எல்லா மடாதிபதிகள் தங்களுக்குள் பேதம், அரசியலுக்கு இடம் தராமல், இறை தொண்டை மட்டுமே முன்னிருத்தி மக்களை வழிப்படுத்த முன் வர வேண்டும்.