வீரப்பன் வதம் சரித்திர சாதனை: ஜெயலலிதா
சென்னை:
வீரப்பனையும், அவனது கும்பலையும் தமிழக அதிரடிப்படையினர் வீழ்த்தியுள்ள செயல், சரித்திரத்தில் நீண்டகாலம் இடம் பெறப் போகும் சாதனை செயல் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வீரப்பனை வீழ்த்திய அதிரடிப்படையினருக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டுபதக்கங்கள் வழங்கி ஜெயலலிதா பேசியதாவது:
20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் 20 நிமிடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இது சாதாரணவெற்றியா? அதை நிகழ்த்திய நீங்கள் சாதாரணமானவர்களா? சாதாரண முறையில் அதை பாராட்ட முடியுமா?அதற்காகத்தான் இந்த மகத்தான விழாவுக்கு ஏற்பாடு செய்தேன்.
சாதாரண வீரர்களாக காட்டுக்குள் சென்ற நீங்கள் இப்போது சாதனை மனிதர்களாக வெளியே வந்துள்ளீர்கள்.இதை உங்களது குடும்பத்தினர் முன்பு பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழாவில் உங்களதுகுடும்பத்தினரையும் கலந்து கொள்ள கூறினேன்.
பொறுப்புள்ள எந்த அரசாலும் வீரப்பனின் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது. இதன் காரணமாகத்தான்1993ம் ஆண்டு வால்டேர் தேவாரத்தைத் தலைவராகக் கொண்டு சிறப்பு அதிரடிப்படையை முதலில்உருவாக்கினேன். 96ம் ஆண்டு வரை, அதாவது எனது ஆட்சி நடந்த வரை அதிரடிப்படை தொய்வில்லாமல்செயல்பட்டது.
எனக்குப் பிறகு வந்த ஆட்சியில் அதிரடிப்படை முடக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டது. அதிரடிப்படை என்ற ஒன்றுஇருந்ததே தவிர அது செயல்படவில்லை.
மீண்டும் 2001ல் நான் ஆட்சிக்கு வந்த பிறகு அதிரடிப்படைக்கு புத்துயிர் ஊட்டினேன். வீரத்திலும், திறமையிலும்சிறந்த தமிழக அதிரடிப்படை வீரர்களாகிய நீங்கள் பசி, தாகம், குடும்பத்தை மறந்து கடமையே கண்ணாகஇருந்தீர்கள்.
அப்படியிருந்தும் உங்களை பாராட்டினார்களா? ஏளனமே செய்தார்கள். எனக்கு முன்பாக ஐந்தாண்டு காலம்ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள், காட்டுக்குள் இருந்த வீரப்பனோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தார்கள்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத அவர்கள், காட்டுக்குள் இருந்த திருட்டுக் கோழியிடம், கோழியே கோழியே நீமுட்டை கொடுத்தால் போதும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள், திரைமறைவு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார்கள்.
தூதர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் துணையோடு பேரம் பேசினார்கள். கடத்தப்பட்டவர்களை மீட்கும்நாடகத்துக்கு கதை, வசனம் எழுதினார்கள், அதில் காசு பார்த்தார்கள். இவர்கள் எல்லாம் யார் என்பதை நீங்கள்நன்கு அறிவீர்கள், நாட்டு மக்களும் மிக நன்றாக அறிவார்கள்.
வீரப்பனையும், அவனது கும்பலையும் நீங்கள் நிச்சயம் பிடிப்பீர்கள் அல்லது முடிப்பீர்கள் என்று எனக்கு நிச்சயம்தெரியும். இந்த நாட்டிலேயே உங்கள் மீது சற்றும் குறையாத நம்பிக்கை வைத்திருந்த ஒரே நபர் யார் என்றால்,முதலமைச்சராகிய நான் மட்டும்தான்.
வால்டேர் தேவாரத்தை தலைவராகக் கொண்ட முதலாவது அதிரடிப்படை வீரப்பனின் கும்பலின் எண்ணிக்கையைக்குறைத்து அவனது கூட்டத்தை சிறு குழுவாக மாற்றியது. அதன் பின்னர் நடராஜ் தலைமையிலான அதிரடிப்படை,மலை வாழ் மக்களிடம் அதிரடிப்படை குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தி, வீரப்பனுக்கு அஞ்ச வேண்டாம் என்றுதைரியத்தைக் கொடுத்தது.
இவர்கள் போட்டுக் கொடுத்த அடித்தளத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, மிகவும் மதி நுட்பத்துடன்செயல்பட்டு வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்தி உலகப் புகழ் பெற்றுள்ளார் விஜயக்குமார்.
அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் முதல் கடைசிக் காவலர், சமையல்காரர் வரை அனைவருக்கும் பரிசுகள்,பதக்கங்களை வழங்கியுள்ளேன். அது மட்டுமல்லாது, அதிரடிப்படையினருக்கு இணையாக தீரச் செயல்களில்ஈடுபட்ட வனத்துறையினருக்கும் பதவி உயர்வு, பரிசுகளை வழங்கியுள்ளேன்.
இதைத் தவிர இந்த தீரச் செயலை எதிர்கால சந்ததியினரும் நினைவில் கொள்ளும் வகையில், நினைவுச் சின்னம்அமைக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த வெற்றியை நாடு பாராட்டுகிறது, உலகமே போற்றுகிறது. ஆனால்இங்குள்ள உள்ளூர் மனிதர்கள் தான் பாராட்ட மனம் வராமல் இருக்கிறார்கள்.
இந்த சாதனை சரித்திரத்தில் இடம் பெறப் போகும் சாதனை என்று பேசினார் ஜெயலலிதா.