வேலை: 3,000 இளைஞர்களிடம் ரூ.4 கோடி மோசடி
மதுரை:
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 கோடி வரை மோசடி செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையை தலைமை இடமாகக் கொண்டு அசோசியேட்ஸ் புராஜக்ட்ஸ் அண்டு கன்சல்டன்சி என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது.இங்கு படித்த இளைஞர்களுக்கு வி.சி.டி., டி.வி.டி. மற்றும் ஜெனரேட்டர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.
பயிற்சியில் சேருவதற்கு ரூ.15,000 டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் தலா ரூ.3,000 ஊக்க தொகைவழங்கப்படும் என்றும், பயிற்சி முடிந்த பிறகு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைவாங்கி தரப்படும்என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இந் நிறுவனத்தின் கிளைகள் மதுரை, சென்னை, திருச்சி, நாமக்கல், ராசிபுரம், சேலம். விருதுநகர், ஈரோடு, கரூர், ஆண்டிப்பட்டி,தேனி, தஞ்சாவூர், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் இந் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கு பயிற்சியில் சேர்ந்து 2மாதங்கள் முடிந்த பின்னரும் ஊக்க தொகையோ, வேலை வாய்ப்பிற்கான ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மதுரை செல்லூர் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனுகொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரம், ஊழியர் அன்னமராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கோவையில் அலுவலகத்தை நடத்தி வந்த போலீஸ் உதவி கமிஷனர் துரையின் மகன் சேதுராமலிங்க மணிகண்டன், ஊழியர்கள்செல்வகுமார், புருஷோத்தமன், ஜெயப்பிரகாஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் மதுரை மற்றும் கோவை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் சுமார் ரூ. 4 கோடிஅளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் சென்னையைச் சேர்ந்த ராஜா, சபீதா, கரூரைச் சேர்ந்த அழகுவேல்ராஜா, நாமக்கல்லைச் சேர்ந்த சித்தேஸ்வரன், திருச்சியைச்சேர்ந்த பிரான்சிஸ், வினோத் குமார், ராசிபுரம் வெள்ளியங்கிரி, மதுரை விஜயசெந்தில் மற்றும் ஜெயபால், பழனிக்குமார், மதுரைஅலுவலகத்தில் பணிபுரிந்த ஜெயலலிதா, ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரி உள்பட 16 பேர் தலைமறைவாகி விட்டார்கள்.
அவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் மதுரை, கோவை, திருச்சி அலுவலகங்கள்பூட்டப்பட்டன. மதுரை அலுவலகத்தில் இருந்த 150 டி.வி.டி. பிளேயர்கள், 10 கம்ப்யூட்டர்கள், 2 டி.வி.க்கள் உட்பட ரூ.20 லட்சம்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.18 லட்சம் வங்கிக் கணக்கும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராசிபுரத்தில் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருட்களைசூறையாடினார்கள்.












Click it and Unblock the Notifications