கட்டாயப்படுத்திய கலெக்டர்; கால் முறிந்த மீனவர்கள்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் கட்டாயத்தால் மீன் பிடிக்கச் சென்ற பழவேற்காட்டைச் சேர்ந்த 2 மீனவர்கள் கடல் அலையில்சிக்கி கால் முறிவு ஏற்பட்டு கரை திரும்பினர்.
சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவருகின்றனர். பல பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவும் தொடங்கி விட்டனர்.
ஆனால் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்னும் மீன் பிடி தொழிலில் இறங்காமல் உள்ளனர். கடல் மற்றும் ஏரியை கொண்டஇந்த பகுதியில் 12 பேர் சுனாமிக்குப் பலியானார்கள். சுனாமியால் பாதிக்ப்பட்ட பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தஏராளமான மீனவர்களுக்கு இன்னும் முறையான நிவாரண உதவிகளை அரசு வழங்கவில்லை என்று தெரிகிறது.
கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் 910 பேருக்கு மட்டும் தலா ரூ 10,000 வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை.சேதமடைந்த கட்டு மரங்களைப் புதுப்பிக்கவும் அரசுத் தரப்பிலிருது நிவாரணம் எதுவும் தரப்படவில்லை. இதேபோல விசைப்படகுகளுக்கும் உரிய நிவாரணம் தரப்படவில்லை.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் சுமார் 4,000 பேர் மீன் பிடிக்கப் போகாமல் உள்ளனர். இந் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமார்ஜெயந்த் பழவேற்காடு வந்து மீனவர்களை மீன் பிடிக்கச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினார்.
ஆட்சித் தலைவரின் கட்டாயத்தால் 20 மீனவர்கள் மட்டும் கட்டு மரத்தில் சென்று மீன் பிடிக்க முடிவு செய்தனர். பூஜைகள் செய்து வணங்கிவிட்டு அவர்கள் கடலுக்குள் சென்றனர். ஆனால் பாதி தூரம் போனபோதே, பெரிய அலை ஒன்று தாக்கியதில் பாலசுப்ரமணியம், சரண்ராஜ்ஆகிய இரு மீனவர்களுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை வந்து பார்த்த ஆட்சித்தலைவர் இருவரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தார். இருவரும் தற்போது ஸ்டான்லிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சும்மா கிடந்த எங்களை மீன் பிடிக்கச் சொல்லி அனுப்பி கட்டாயப்படுத்திய கலெக்டரின் செயலால் 2 பேரின் கால் முறிந்ததுதான் மிச்சம் எனபழவேற்காடு மீனவர்கள் கடுப்படைந்துள்ளனர்.