இந்தோனேஷியாவில் பூகம்பம்: தமிழகத்தில் சுனாமி எச்சரிக்கை-குமரி படகு சர்வீஸ் ரத்து!
ஜகார்தா:
இந்தோனேஷியாவை இன்று மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் மாபெரும்கடல் அலைகள் தோன்றின.
அந் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவுகளின் அருகே கடலுக்கடியில் இந்த பூகம்பம், இன்று காலை 8.04க்கு(இந்திய நேரப்படி அதிகாலை 5.34) தாக்கியது. ரிக்டர் ஸ்கேலில் 6.9 என்ற அளவுக்குப் பூகம்பம் பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் 37 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து கடலில் மிக பயங்கரமான அலைகள் தோன்றின. 4மீட்டர் வரை உயரமான அலைகள் கரைகளைத் தாக்கியதால் அப் பகுதியில் மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக பெரும் அச்சம்பரவியது.
இதனால் பெளபெள உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த சுலவேசி தீவுவாசிகள் கடலோரப் பகுதிகளை விட்டு ஓடினர். ஆனால்,இந்த அலைகளால் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழகத்தில் எச்சரிக்கை:
இந்தோனேஷிய கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்ட தகவல் கிடைத்தவுடன் கடலோர மாவட்டங்கள் முழுவதும்எச்சரிக்கையாக இருக்குமாறு மாவ்டட நிர்வாகங்களை அரசு அறிவுறுத்தியது.
மேலும் போலீசாரும் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சுனாமி போன்ற அலைத் தாக்குதல் ஏற்பட்டால்சமாளிக்க அவசர கால நடவடிக்கைகளை முடுக்கி விட தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
குமரியில் படகு சர்வீஸ் ரத்து:
பெரிய அலைகள் உருவாகலாம் என்ற அச்சம் நிலவியதால், முன்னெச்சரிக்கையாக கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்குபடகு சர்வீஸ் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பூம்புகார் போக்குவரத்து நிறுவனம் நடத்தும் இந்த படகு சர்வீஸ் காலை 10.15 மணியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல் படை உஷார்:
இதே போல கடலோரக் காவல் படையும் உஷார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.
ஆனால், அஞ்சியது போல அலைத் தாக்குதல்கள் ஏதும் ஏற்படவில்லை.
அஞ்சத் தேவையில்லை:
இதற்கிடையே இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் குறித்து அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சித்துறை கூறுகையில்,
கடந்த டிசம்பரில் சுமத்ராவில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்துக்கும் இன்றைய பூகம்பத்துக்கும் தொடர்பில்லை. இரண்டும் சுமார்2,900 கி.மீ. தூர வித்தியாசத்தில் ஏற்பட்டுள்ளன. மேலும் டிசம்பர் பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 8.9 முதல் 9.0 வரை பதிவானது.இதனால் மிகப் பெரிய அலைகள் தோன்றின.
ஆனால், இன்றைய பூகம்பம் 6.5 என்ற அளவுக்கே ஏற்பட்டுள்ளது. முந்தைய பூகம்பத்தைவிட இது 5,500 மடங்கு குறைவானசக்தியையே வெளிப்படுத்தியுள்ளது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து தொடர் நடுக்கங்கள் ஏற்படலாம், சுனாமி அலைகள்ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலடியில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் தான்(ரிக்டர் ஸ்கேலில் 9) தமிழகம், இலங்கை உள்ளிட்ட தெற்காசியா முழுவதும் சுனாமி பேரலைத் பேரழிவு ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே நியூசிலாந்து, இந்தோனேஷியா மற்றும் நிகோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுவருகிறது.