உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பரவலாக வெற்றி
சென்னை:
தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வன்முறைச் சம்பவங்களுடன் நடந்துமுடிந்த சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் 627 ஊராட்சி காலியிடங்களுக்கு 19ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் சென்னை மாநகராட்சியின் 2வார்டுகளுக்கு நடந்த வாக்குப் பதிவின் போது பெரும் வன்றை மூண்டது.
தேர்தல் நடந்த ஊராட்சிகளில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. சென்னை மாநகராட்சி வார்டு எண்கள் 110 மற்றும் 131ஆகியவற்றில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன.
நீதிமன்றத்தில் இத் தேர்தலை எதிர்த்து வழக்கு விசாரணையில் இருந்ததால் ஓட்டு எண்ணும் பணி மெதுவாக தொடங்கியது.
இருப்பினும், வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று தெரியவந்ததும் பிற்பகலில் ஓட்டு எண்ணும்பணி வேகப்படுத்தப்பட்டது.
அதிமுக வெற்றி:
110வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகில் வண்ணன் வெற்றி பெற்றார். அவருக்கு கிடைத்த ஓட்டுக்கள் 4396.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் 2209 ஓட்டுக்கள் பெற்றார். சுயேச்சைகள் 34 பேருக்கும்மொத்தமாக 359 ஓட்டுக்கள் கிடைத்தன. 276 ஓட்டுக்கள் செல்லாதவை ஆகும்.
131வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் 17,656 ஓட்டுக்கள் பெற்றுவெற்றி பெற்றார். திமுக சார்பில்போட்டியிட்ட ராமமூர்த்திக்கு 7503 ஓட்டுக்கள் கிடைத்தன. 14 சுயேச்சைகளுக்கு மொத்தமாக 828 ஓட்டுக்கள் கிடைத்தன,செல்லாத ஓட்டுக்களின் எண்ணிக்கை 1597 ஆகும்.
தேர்தலை புறக்கணித்ததால், ஓட்டு எண்ணும் இடத்திற்கு திமுகவினர் யாரும் வரவில்லை. இந்த வெற்றியின் மூலம், சென்னைமாநகராட்சியில் அதிமுகவின் பலம் 77லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது.
மேலூர் நகராட்சித் தலைவர் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட சாகுல் அமீது வெற்றிபெற்றார். திருச்சி மாநகராட்சி 20வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
குறிச்சி 3வது நிலை நகராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுகவின் பிரபாகரன் வெற்றி பெற்றார்.
நகராட்சிகளில் காலியாக இருந்த 19 உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் 9 வார்டுகளில் (விருத்தாச்சலம், ஈரோடு, குளச்சல்,பெரியகுளம், சிவகாசி, சங்கரன்கோவில், திருமங்கலம், குடியாத்தம்) அதிமுகவும், 7 இடங்களில் (நாமக்கல், திருச்செங்கோடு,கம்பம், அரக்கோணம், பரமக்குடி, சிவகாசி, விருதுநகர்) திமுகவும் வெற்றி பெற்றன.
3 சுயேச்சைகளும் நகராட்சி உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றனர். 4 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு நடந்த தேர்தலில்அதிமுகவே வெற்றி பெற்றது.
பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 24 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 13 இடங்களிலும், திமுக 7லிலும், பாமக 2இடங்களிலும், மதிமுக, சுயேச்சைகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
இந்தத் தேர்தலில் 385 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 32 இடங்களில் யாரும் வேட்பு மனு தாக்கல்செய்யாததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
சர்ச்சைக்குரிய பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 2 பேரில் விடுதலைச் சிறுத்தைகள்சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் நரசிங்கம் இறந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
நாட்டாமங்கலத்தில் யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மற்றொரு தலித் பஞ்சாயத்தான கீரிப்பட்டியில் ஊர் மக்கள்சார்பில் நிறுத்தப்பட்ட அழகுமலை என்பவர் ஜெயித்துள்ளார். இருப்பினும் பதவியேற்ற பிறகு அவர் தனது பதவியை ராஜினாமாசெய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.