பிளஸ் டூ: "பெயில்"ஆனவர்களுக்கு ஜூன் 24ல் தேர்வு
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 24ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர்ஜெகன்னாதன் கூறினார்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 24ம்தேதி முதல் தொடங்குகிறது.
ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி முதல்வழங்கப்படும்.
31ம் தேதி விண்ணப்பங்களைக் கொடுக்க கடைசி நாளாகும். பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்கள், சம்பந்தப்பட்டபள்ளிகளிலேயே விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் கொடுக்க வேண்டும் என்று ஜெகன்னாதன் கூறியுள்ளார்.
சந்தோஷத்தை மறைத்த சோகம்:
சாலை விபத்தில் பலியான பிளஸ் டூ மாணவர் ஆதித்யா, 1,200க்கு 1,159 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளியில் படித்து வந்த ஆதித்யா. சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்.சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த சாலை விபத்தில் ஆதித்யா பலியானார்.
பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேறிய ஆதித்யாவின் புகைப்படம் பள்ளி நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டு ஆசிரியர்களும்,மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, பரமக்குடியைச் சேர்ந்த மாணவன் சையத் ஜமீன் பாரூக் என்ற மாணவனின் குடும்பம் சாதனையைக் கொண்டாடமுடியாமல் சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
பரமக்குடி ஏ.வி. மேல் நிலைப்பள்ளியில் படித்து பாரூக், சமீபத்தில் நடந்த நுழைவுத் தேர்வில் 95.5 சதவீத மதிப்பெண்கள்பெற்றிருந்தார். நுழைவுத் தேர்வில் பெற்ற சாதனை மதிப்பெண்களுடன், சந்தோஷமாக பைக்கில் வீடு திரும்பியபோது விபத்தில்சிக்கி பரிதாபமாக இறந்தார் பாரூக்.
பிளஸ் டூ தேர்வில் பாரூக் 1147 மதிப்பெண்கள் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதல் மாணவராக தேறியுள்ளார்.
பார்வை தடை இல்லை:
கண் பார்வையற்ற சென்னை மாணவன் இந்திய இசைப் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
சிவகாசியைச் சொந்த ஊராகக் கொண்டவர் அரவிந்த். சென்னை அடையாறு தூய லூயிஸ் காது கேளாதோர் மற்றும்பார்வையற்றோர் பள்ளியில் பிளஸ் டூ படித்தார்.
இரண்டு கண்களும் தெரியாத அரவிந்த், இந்திய இசைப் பாடப் பிவில் 200க்கு 196 மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்துள்ளார். மாநிலத்திலேயே முதல் இடத்திலும் வந்துள்ளார்.
ஆங்கில இலக்கியம் படித்து ஆங்கில பேராசிரியராக ஆசையாம் அரவிந்துக்கு. அவரது கனவு நிறைவேற வாழ்த்துவோம்.