ஐஸ்லாந்தில் தரையிறங்கும் "தஞ்சாவூர்" !
ஜெனீவா:
ஐஸ்லாந்து நாட்டில் தரையிறங்கும் முதல் இந்திய விமானம் என்ற பெருமையை, தஞ்சாவூர் என பெயரிடப்பட்ட, குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ விமானம் பெற்றுள்ளது.
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஐஸ்லாந்து செல்லவுள்ளார். இந்தப்பயணத்தின்போது புதிய வரலாறு ஒன்றும் படைக்கப்படவுள்ளது.
இதுவரை இந்திய விமானம் எதுவும் ஐஸ்லாந்துக்கு சென்றதில்லை. தஞ்சாவூர் தான் முதல் விமானமாக ஐஸ்லாந்தில்தரையிறங்கவுள்ளது. அதேபோல, இந்த விமானத்தை செலுத்தும் விமானியான கேப்டன் தீபக் ஆனந்த், ஐஸ்லாந்துக்கு இந்தியவிமானத்தை செலுத்திய முதல் விமானி என்ற பெயரையும் பெறுகிறார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற பெருமையைப் பெற்ற தஞ்சாவூரின் நினைவாக குடியரசுத் தலைவரின் விமானத்திற்குதஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. தஞ்சாவூரின் பெருமை இனி ஐஸ்லாந்திலும் பேசப்படும்.
இது மட்டுமல்லாது, ஐஸ்லாந்துக்கு செல்லும் உயர் மட்ட அளவிலான முதல் இந்திய குழு என்ற பெருமையும், அப்துல் கலாமுடன்செல்லும் இந்தியக் குழுவுக்குக் கிடைத்துள்ளது.
கலாமின் ஐஸ்லாந்து பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையே விமான சர்வீஸ்களை இயக்குவது தொடர்பான ஒப்பந்தம்கையெழுத்திடப்படவுள்ளது. தஞ்சாவூர் விமான கேப்டன் தீபக் ஆனந்த், குடியரசுத் தலைவரின் முந்தைய வெளிநாட்டுப்பயணத்தின்போதும் விமானியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவின் போயிங் 707 ரக விமானங்களுக்கு மலைகளின் பெயர்களும், போயிங் 747-200 ரக விமானங்களுக்கு இந்தியமன்னர்களின் பெயர்களும், ஏர்பஸ் 310 ரக விமானங்களுக்கு நதிகளின் பெயர்களும், போயிங் 747-400 ரக விமானங்களுக்குசுற்றுலா தலங்களின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. அந்த வரிசையில், குடியரசுத் தலைவரின் சிறப்பு விமானத்திற்கு தஞ்சாவூர்என்று பெயரிடப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் செல்லும் விமானம் தரையிறங்கப் போகும் விமான நிலையமான கெப்லவிக் விமான நிலையம், ஐஸ்லாந்துதலைநகர் ரெய்ஜாக் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை அமெரிக்கராணுவத்தினர் அமைத்தனர், கடந்த 1943ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இரண்டாவது உலகப் போரின்போது அமெரிக்க மற்றும் நேச நாட்டு விமானப் படை விமானங்கள் இந்த விமான நிலையத்தைப்பயன்படுத்திக் கொண்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவுக்கும், ஐஸ்லாந்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி,இந்த விமான நிலையத்தை ராணுவ பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும்ஐஸ்லாந்தின் பாதுகாப்பு மற்றும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பை கருதி இன்றும் கூட அமெரிக்க ராணுவம் இந்த விமானநிலையத்தை, தனது ராணுவ உபயோகத்திற்குப் பயன்படுத்தி வருகிறது.