என்னை ஒழிக்க கருணாநிதி முயற்சி: திருமாவளவன் கடும் புகார்
சென்னை:
அரசியல் களத்திலிருந்து என்னையும், விடுதலைச் சிறுத்தைகளையும் ஒழிக்க கருணாநிதி நினைக்கிறார் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
கருணநிதி தூண்டி விட்டுத் தான் இளங்கோவன் அவ்வாறு பேசியதாக திருமாவளவன் பரபரப்புப் புகாரைத் தெரிவித்துள்ளார்.இதை கருணாநிதி மறுத்துள்ளார். மேலும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை பிளக்கும் ஜெயலலிதாவின் முயற்சிகளுக்குதிருமாவளவன் துணை போவதாக அவர் கூறியுள்ளார்.
கருணாநிதியின் இந்தப் புகாரை கடுமையாக மறுத்துள்ளார் திருமாவளவன். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை உடைக்கும் முயற்சிகளுக்கு நான் துணை நிற்பதாக கருணாநிதி கூறியுள்ளதில்துளியளவும் உண்மை இல்லை. உண்மை நிலையை திசை திருப்பி அவதூறு பரப்பும் முயற்சியாகும் இது.
பிரச்சினைகளை திசை திருப்புவது கருணாநிதிக்கே உரிய கலையாகும். யாருடைய தூண்டுதலுக்கும் இலக்காகும் அளவுக்குவிடுதலைச் சிறுத்தைகள் தமது வீரியத்தை இழந்து விடவில்லை.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மருத்துவர் தமிழ்க் குடிதாங்கியை (டாக்டர் ராமதாஸ்) குறி வைத்தும்,தமிழ் பாதுகாப்பு இயக்கத்தையும் அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் இளங்கோவன் மிகக் கடுமையாக கண்டித்தும்,கொச்சைப்படுத்தியும்சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழில் பெயர் வை, திரைப்படங்களின் பெயர்களை மாற்று, ஆங்கிலத்தில் பேசாதே என்று கூறுவது காட்டுமிராண்டித்தனம் என்றுகூறியிருக்கிறார் இளங்கோவன்.
அந்த நேரத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவரான கருணாநிதி வாய் திறக்காமல் அமைதி காத்தது ஏன் என்றுபுரியவில்லை. தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை கொச்சைப்படுத்தி பேசியது குறித்து கருணாநிதி கவலைப்படவில்லை என்றாலும்கூட,
தமது கூட்டணியில் உள்ள ஒரு தலைவரைக் குறி வைத்து அதே கூட்டணியில் உள்ள இன்னொரு தலைவர் கண்டித்துப் பேசியதைகூட்டணியின் தலைவர் என்ற முறையில், கருணாநிதி கண்டித்திருக்க வேண்டாமா? அவர் அமைதி காத்ததற்கு என்ன பொருள்?
எதிரியாக நினைக்கிறார்:
இளங்கோவன் அப்படிப் பேசியபோது கருணாநிதி வேடிக்கை பார்த்ததனால் தான் அவர் இளங்கோவனை தூண்டியிருக்கவாய்ப்பு இருக்கிறது என்று யாம் ஐயப்படுகிறோம்.
அத்துடன், தமிழ் உணர்வாளர்களின் வாக்கு வங்கி மருத்துவர் தமிழ்க்குடிதாங்கியின் பக்கம் சாய்ந்து விடும் என்றும் தமிழுக்கும்,தமிழ் இனத்திற்கும் எதிரானவர் கலைஞர் என்றும் ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணலில் எங்கேயும் நான்குறிப்பிடவில்லை.
அதேசமயம், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் போராட்டங்கள் வணிகர்களுக்கு எதிராகவும், திரையுலகத்தினருக்குஎதிராகவும் திரும்பி விட்டால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கான வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று கருணாநிதிகருதுகிறார் என்று தான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கருணாநிதி ஏனோ அவற்றை திசை திருப்புகிறார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டிய கருணாநிதி, அவ்வியக்கம் நடத்தியஊர்திப் பயணத்தின் தொடக்க விழாவில் மூன்றாவது மொழிப் போர் என்பதை கிண்டலடித்துப் பேசியது வேதனைக்குரியது.
தந்தைக்குரிய இடத்திலிருந்து எம்மைத் தட்டிக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால், அரசியல் களத்திலிருந்து எம்மை தட்டிக்கழிப்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார் என்பது அவருடைய விடைகளிலிருந்து வெளிப்படுகிறது.
அவருடைய அறிக்கையில் எனது பெயரைக் கூட அவரால் குறிப்பிட இயலவில்லை என்பதைக் காணுகிறபோது அவருடையஉணர்வுகளை எம்மால் உணர முடிகிறது. எளியவனாகிய என்னை ஒரு எதிரியாகவே கருணாநிதி கருதுகிறாரா என்றுதெரியவில்லை.
ஒடுக்கப்பட்ட சேரி வாழ் மக்களையும், பிற உழைக்கும் மக்களையும், விடுதலைச் சிறுத்தைகளையும் ஏவல் செய்யும்எடுபிடிகளாகவோ, வெறும் வாக்கு வங்கியாகவோ கருதாமல், அரசியல் சக்தியாக மதித்து அங்கீகரிக்கும் கூட்டணி எதுவோஅக்கூட்டணியில் இடம் பெறுவது என்பது தான் விடுதலைச் சிறுத்தைகளின் உறுதியான தேர்தல் நிலைப்பாடாகும்.
இந் நிலையில் யாருடைய தூண்டுதலுக்கும் எப்போதும் யாம் ஆளாக மாட்டோம் என்பதை கருணாநிதிக்கும், நாட்டு மக்களுக்கும்இதன் மூலம் உணர்த்துவதைக் கடமையாக கருதுகிறோம் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.