லண்டனில் தொடர் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி, 800 பேர் காயம்
லண்டன்:
லண்டனில் நேற்று அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 50 பேர் பலியானார்கள். 800படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் லண்டன் நகரமே ஸ்தம்பித்து விட்டது.
ஜி 8 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா அதிபர் புஷ், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முக்கியதலைவர்கள் ஸ்காட்லாந்து வந்துள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்புக்கு அல்கொய்தா இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
லண்டனில், நேற்று காலை 8.50 மணியளவில் (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) அல்ட்கேட் கிழக்கு மற்றும் லிவர்பூல்ஸ்டிரீட் பாதாள ரயில் நிலையங்களுக்கு இடையே முதல் குண்டு வெடித்தது.
தொடர்ந்து, கிங்ஸ் கிராஸ் மற்றும் ரஸ்ஸல் சதுக்கம் ரயில் நிலையங்கள் இடையிலும், எட்ஜ்வார் ரோடு ரயில் நிலையத்திலும்வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின.
இதனால் பாதாள ரயில் பாதை நெட்வொர்க் முழுவதும் பாதிக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் உடனடியாகஅந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். ரயில் நிலையங்களில் புகை மண்டலம் ஏற்பட்டது. உடனடியாக ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
முகம் முழுக்க கரி ஒட்டிய நிலையிலும் ரத்தம் சிந்தும் நிலையிலும் மக்கள் பலர் அங்கும் இங்கும் ஓடினர். லண்டனில்வேலைக்குச் செல்லும் சமயத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால், நெரிசலான நேரத்தில் மக்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்தத் தகவல் மற்ற ரயில் நிலையங்களுக்கும் பறந்தது. அங்கெல்லாம் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.முன்னெச்சரிக்கையாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
ரயில் நிலையங்கள் செல்லும் வழிகள் அனைத்தும் "சீல் வைக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் இருந்து வெளியேறும்பகுதிகளில் போலீசார் குவிந்தனர். ஆம்புலன்ஸ் வேன்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள்விரைந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த பீதியில் இருந்து மக்கள் சகஜ நிலைக்குத் திரும்புவதற்குள், மத்திய லண்டன், டவிஸ்டாக் சதுக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்த இரண்டு அடுக்கு பஸ்ஸில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
ஊஸ்டன் பகுதியில் இருந்து ரஸ்ஸல் சதுக்கத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது குண்டுவெடிப்பு பயங்கரம் நடந்தது.குண்டு வெடித்ததில், இரண்டு அடுக்கு பஸ், வானத்தில் பறந்ததாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.
லண்டன் போக்குவரத்துக்கு உயிர்மூச்சாக இருப்பதே பாதாள ரயில் தான். குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, ரயில்போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டதால் லண்டன் நகரமே ஸ்தம்பித்துவிட்டது.
அத்துடன் மொபைல் போன் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்பதே நீண்ட நேரம் தெரியவில்லை.நண்பர்கள், உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
அல்கொய்தா பொறுப்பேற்பு:
அடுத்தடுத்து நடந்து இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஐரோப்பாவில் அல் கொய்தாவின் ரகசியதீவிரவாத அமைப்பு என்ற பெயரில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒன்று தனது வெப்சைட்டில்,குண்டுவெடிப்புக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஈராக், ஆப்கனில் போர் தொடுத்த போது பிரிட்டன் ஆதரவு தந்ததற்கு பழி வாங்கவே குண்டுவெடிப்பு சம்பவம்அரங்கேற்றப்பட்டது என்று அந்த வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மன்மோகன் சிங் கண்டனம்:
லண்டன் குண்டுவெடிப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள அவர் இது குறித்து கூறுகையில், இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. தீவிரவாத செயல்களை உலக நாடுகள் இணைந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இரு தினங்களுக்கு முன்பு தான் இந்தியாவும் இது போன்ற தீவிரவாதிகளின் தாக்குதலை சந்தித்தது என்றார்.
லண்டன் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.