கார்த்திக்கும் அரசியலில் தொபக்கடீர்?
மதுரை:
அரசியலில் தொபக்கடீர் என்று குதிப்பது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அறிவிக்கப் போவதாக நடிகர் கார்த்திக்கூறியுள்ளார்.
நடிகர்கள் அரசியலில் குதிக்கும் காலம் இது. தமிழகத்தில் நடிகர்கள், அரசியலில் குதிப்பதும், அவர்களில் சிலர் வாழ்வதுதம்,சிலர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மீண்டு கரை சேருவதும் தொன்று தொட்டே நடந்து வருகிறது என்றாலும் சமீப காலமாகஅரசியல் ஆர்வம் கொண்டு அலையும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொஞ்ச காலத்திற்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக பரபரப்பு எழுந்தது. ஆனால் பாபா அடங்கிப் போய் விட்டார்.அவர் அரசியலுக்கு வருவாரா, இல்லையா என்ற குழப்பத்திலேயே அவரது ரசிகர்கள் இன்னும் அவரை நம்பியுள்ளனர்.
அடுத்ததாக தற்போது விஜயகாந்த் கிளம்பியுள்ளார். ஆனால் ரஜினியைப் போல ஓவராக குழப்பாமல் நான் வருகிறேன் என்றுஉறுதியாக கூறி விட்டார் விஜயகாந்த். அரசியல் பிரசவத்திற்கு நாள் கூட குறித்து விட்டார் அவர். இதோ, செப்டம்பர் 24ம் தேதிஅவரது அரசியல் குழந்தை பிறக்கப் போகிறது.
இதேபோல, சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இன்னொரு நடிகர் கார்த்திக். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல காலம்விளங்கிய கார்த்திக் சமீப காலமாக தனது குழப்பமான மன நிலையால், பட வாய்ப்புகளை இழந்தார்.
சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது ஆதரவு கிடைக்கும் என்று நம்பி அதிமுகவில் சேரும் முடிவுக்கு வந்தார்,ஜெயலலிதாவையும் போய் பார்த்தார். ஆனால் அம்மாவிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்.
இந் நிலையில் திடீரென ஒரு நாள் புத்துணர்ச்சி பெற்று, சரணாலயம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். தான் சார்ந்ததேவர் இன மக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து சரணாலயம் அமைப்பை கார்த்திக் தொடங்கியதாகக் கூறப்பட்டது.
இதை கார்த்திக் மறுக்கவும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் கார்த்திக்கின் ஆதரவை விஜயகாந்த் கேட்டதாக செய்திகள் வந்தன.
இந் நிலையில் கார்த்திக் மதுரை வந்துள்ளார். அங்கு அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது சரணாலயம் அமைப்பின்செயல்பாடுகள் குறித்துப் பேசினார். பின்னர் பேச்சு அரசியல் பக்கமாக திரும்பியது.
அரசியல் குறித்த கேள்விகளுக்கு கார்த்திக் பதிலளிக்கையில், சரணாலயம் இப்போது சமூக நல அமைப்பாக மட்டுமேசெயல்பட்டு வருகிறது. எனது ரசிகர் மன்றங்கள் அனைத்துமே சரணாலயம் மன்றங்களாக மாற்றப்பட்டு விட்டது.
இதை அரசியல் அமைப்பாக மாற்ற வேண்டும் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக விவாதித்து இறுதிமுடிவு எடுக்கவுள்ளோம். விஜயகாந்த் எனது நண்பர். அவரது புதிய கட்சிக்கு ஆதரவு தருமாறு என்னிடம் அவர் கேட்கவில்லை,நானும் அவரிடம் இதுதொடர்பாக பேசவில்லை.
எனவே அவரது கட்சிக்கு நான் ஆதரவு தருகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. என் மகனுக்கு சின்ன வயதுதான். எனவேசினிமாவில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. சில ஆண்டுகள் போகட்டுமே, முதலில் படிப்பை முடிக்கட்டும்.அப்புறம் பார்க்கலாம். காதல் கதை ஒன்றை படமாக்கும் எண்ணம் உள்ளது. இது உண்மையான காதல் கதை.
இதை நாவல் வடிவில் தற்போது எழுதி வருகிறேன். நவம்பர் மாதம் இதை படமாக்குவேன். இதில் நடிப்போர் குறித்துசஸ்பென்ஸாக வைத்துள்ளேன். தமிழக மக்களை இந்தப் படம் பெரிதும் கவரும் என்றார் கார்த்திக்.