சென்னை பல்கலை. பெயர் மாற்றப்பட மாட்டாது!
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் பெயர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி என்றே தொடர்ந்து இருக்கும் என சட்டசபையில் கல்வித்துறை அமைச்சர்சி.வி.சண்முகம் தெரிவித்தார். இதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தனர்.
தமிழக சட்டசபை நேற்று கூடியது. முன்னாள் சபாநாயகர் முனு ஆதி, முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துநேற்றைய முதல் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று 2வது நாள் கூட்டம் தொடங்கியது.சபை கூடியதும், சென்னை பல்கலைக்கழகத்தின் பெயரை தொடர்ந்து மெட்ராஸ் யுனிவர்சிட்டி என்று நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவைகல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.அந்த மசோதாவில், கடந்த 1923ம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.1996ல் மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டுவந்தது, சென்னை பல்கலைக்கழகமாக மாற்றி அழைக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், பல்வேறு நடைமுறைக் காரணங்களுக்காக மெட்ராஸ் என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரிபல்கலைக்கழக ஆட்சிக் குழு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
எனவே அதைப் பரிசீலனை செய்து மெட்ராஸ் என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வகை செய்து சட்ட மசோதாவை தாக்கல்செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகஎதிர்ப்பு தெரிவித்தன.
திமுக உறுப்பினர் துரைமுருகன் கூறுகையில், சென்னை என்ற பெயரிலேயே மெட்ராஸ் பல்கலைக்கழகம் இயங்க வேண்டும். பம்பாய்மும்பை என்று மாறியுள்ளது, கல்கத்தாவும், கொல்கத்தாவாக மாறியுள்ளது. எனவே மெட்ராஸ் பல்கலைக்கழகமும் சென்னை என்றபெயரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றார். தமிழ்ப் பெயரை மாற்ற முயல்வதுதான் உங்களது ஆட்சியின் தமிழ் உணர்வா என்றார்.
அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, சன் டிவி என்ற பெயர் தமிழா என்பதை உறுப்பினர் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ் உணர்வுபற்றிப் பேசுபவர்களுக்கு சன் டிவியின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை என்றார்.
அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மதராஸ் என்பது ஆங்கிலப் பெயரே அல்ல. தமிழ்ப் பெயர்தான் அது. எனவே இதை எதிர்ப்பதில்எந்த அர்த்தமும் இல்லை. சென்னை நகரம் முன்பு மதராஸ் குப்பம் என்றுதான் அழைக்கப்பட்டது. மீனவர் குப்பத்தின் தலைவரான மத்ரேசன்என்பவரின் பெயரை வைத்துத்தான் மதராஸ் என்ற பெயர் உருவாக்கப்பட்டது. அவரிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனியார் நிலத்தைவாங்கி உருவாக்கிய நகரம்தான் மதராஸ் என்று அழைக்கப்படும் தற்போதைய சென்னை நகரம் என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்றை திரித்துச் சொல்கிறார் அமைச்சர் என்று அவர்கள்கோஷமிட்டனர். கிழக்கிந்திய கம்பெனியார் சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து நிலத்தை வாங்கித்தான் சென்னை நகரைஉருவாக்கினார்கள். சென்னப்ப நாயக்கருக்கு நன்றி கூறும் விதமாகத்தான் அவரது பெயரில் ஒரு பகுதியை எடுத்து சென்னை என்று பெயர்சூட்டினார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ஒரு மீனவரின் பெயரால் உருவான மெட்ராஸ் என்ற பெயருக்கு ஏன் எதிர்க்கட்சிகள் இப்படிஎதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? மீனவரின் பெயர் சூட்டப்பட்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லையா என்று கேட்டார்.
இவ்வாறு விவாதம் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இறுதியில் திமுக, பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உறுப்பினர்கள் அரசின் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.