பிரேமானந்தாவின் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க அரசு திட்டம்?
புதுக்கோட்டை:தமிழக அரசின் இலவச நிலத் திட்டத்தின் கீழ் செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்குச் சொந்தமான நிலத்தைப் பிரித்து, ஏழை விவசாயிகளுக்குக் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
செக்ஸ் சாமியார் பிரேமானந்தா கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் சிக்கி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடலூர் மத்திய சிறையில் அவர் அடைபட்டுள்ளார்.
அவரது சகோதரி பாலா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரைப் பார்க்க பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்ற உயர்நீதிமன்றம், 6 நாள் பரோல் கொடுத்தது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்தார் பிரேமானந்தா. அவருக்கு ஆசிரம ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் வரவேற்பு அளித்தனர்.
அவர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆசிரமத்தில் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி நில சீர்திருத்தத் துறை உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு இந்த சோதனையில் ஈடுபட்டது.
இந்த சோதனை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் பிரேமானந்தா ஆசிரத்தின் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பாகத்தான் இந்த சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகளில் இன்னொரு பிரிவினர் வேறு மாதிரியான தகவலைத் தெரிவித்தனர்.
அதாவது தமிழக அரசின் இலவச நிலத் திட்டத்திற்காக பிரேமானந்தாவின் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாம்.
பிரேமானந்தாவின் ஆசிரமம் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதேபோல விராலிமலை-திண்டுக்கல் சாலையில் 100 ஏக்கர் நிலம் பிரேமானந்தா ஆசிரமத்திற்குச் சொந்தமாக உள்ளது.
விராலிமலை ஆசிரமத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள 20 ஏக்கர் நிலத்தை பிரித்து ஏழை விவசாயிளுக்கு கொடுக்கப் போகிறார்கள்.
அதேபோல திண்டுக்கல் சாலை நிலத்தையும் கையகப்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதாம். அதற்காகத்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது என்றனர்.