குழந்தை சாவு-வேதனையில் ஜீவஜோதி
நாகப்பட்டனம்:
சரவணபவன் ஹோட்டல் அதிபர் 'அண்ணாச்சி' ராஜகோபால் விவகாரத்தில் இருந்து ஒருவழியாய் விலகி புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்த ஜீவஜோதி பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். அவருக்குப் பிறந்த குழந்தை அகால மரணமடைந்ததால் பெரும் சோகத்திலும், வேதனையிலும் மூழ்கியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய விவகாரம் ஜீவஜோதி வழக்கு. ஜீவஜோதியின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமாரை சரவண பவன் அதிபர் ராஜகோபால் கொலை செய்து விட்டார் என்பதுதான் அந்த வழக்கு. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, ராஜகோபாலும், அவரது ஆட்களும், ஜீவஜோதியைக் கடத்த முயன்றதாக இன்னொரு வழக்கு வேதாரண்யம் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அடுத்தடுத்து வழக்குகள், விசாரணைகள் என அலைக்கழிக்கப்பட்ட ஜீவஜோதி, சென்னையை காலி செய்து விட்டு தனது சொந்த ஊரான வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு டெய்லரிங் பள்ளியைத் தொடங்கி புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். தனது முன்னாள் தோழர் தண்டபாணியையே ஊரறிய கல்யாணமும் செய்து கொண்டார்.
சமீபத்தில் ராஜகோபால் உள்ளிட்டோர் கடத்தப்பட்ட வழக்கில் ஜீவஜோதியும், அவரது தரப்பினரும் பிறழ் சாட்சியம் அளித்து பரபரப்பூட்டினார்கள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜீவஜோதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. பரணி என குழந்தைக்குப் பெயர் சூட்டினர். இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கடந்த வாரம் பரணி எதிர்பாராதவிதமாக இறந்து போய் விட்டான்.
இதை சற்றும் எதிர்பாராத ஜீவஜோதி பெரும் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் மூழ்கியுள்ளார்.
யாரும் அனுபவிக்தாத சிரமங்களை, கஷ்டங்களை நான் அனுபவித்து விட்டேன். ஏன் கடவுளுக்கு என் மீது இத்தனை கோபம். நான் என்ன பாவம் செய்தேன். பூ மாதிரி இருந்தானே என் மகன். அவன் பிறந்த அடுத்த நிமிடமே, அவனது முகத்தைப் பார்த்த மறு கணமே அனைத்துப் பாடுகளையும் மறந்து விட்டேன். இவன் மட்டும் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்று அகமகிழ்ந்து இருந்தேன். ஆனால் எல்லாம் இப்படியாகி விட்டதே என்று கதறி அழுகிறார் ஜீவஜோதி.
ஜீவஜோதியின் உறவினர் ஒருவரின் வீட்டில் துக்கம் விசாரிக்க கைக்குழந்தையுடன் ஜீவஜோதி, வேதாரண்யம் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து தஞ்சைக்குக் ெகாண்டு வந்து மருத்துவம் பார்த்துள்ளனர். வீட்டுக்குத் திரும்பிய சில நிமிடங்களில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மறுபடியும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையின் நிலை மோசமாகியுள்ளது. மூச்சுத்திணறல் அதிகமாகி, சில நிமிடங்களிலேயே குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
வேதனையையெல்லாம் தீர்ப்பது போல வந்த தனது குழந்தை இறந்ததை இன்னும் ஜீவஜோதியால் ஜீரணிக்கவே முடியவில்லை. தொடர்ந்து அழுதபடியும், குழந்ைதயின் நினைவாக கதறியபடியும் உள்ளார்.












Click it and Unblock the Notifications