பத்திரிகைகள் மீது நடவடிக்கை இல்லை-ஸ்டாலின்
சென்னை:
சட்டசபையில் ஜெயலலிதா மீது தான் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது பேட்டியை வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.
இது குறித்து சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் ஸ்டாலின் ஒரு அறிக்கையை வாசித்தார். அதன் விவரம்:
எதிர்க் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா என்னைப் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த சில கருத்துக்களுக்காக நேற்று சட்டசபையில் விதி 219, 220 ஆகியவற்றின் கீழ் ஓர் உரிமைப் பிரச்சனையை எழுப்பினேன். இப்போது அந்தப் பிரச்சனை உரிமைக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.
உரிமைப் பிரச்சினை குறித்து நான் பேசுகையில், ஜெயலலிதாவின் பேட்டியினை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும், ஒளிபரப்பிய ஜெயா தொலைக்காட்சி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வாய்மொழியாக கேட்டுக் கொண்டேன்.
பத்திரிகைகள் மீதும், தொலைக் காட்சிகள் மீதும் உரிமைப் பிரச்சினை கொண்டுவருவது என்பது அதிமுக ஆட்சியில் நடை பெற்றுள்ளது என்ற போதிலும், அது திமுகழகத்தின் கொள்கைக்கு விரோதமானது என்று கழகத் தலைமை அறிவுறுத்தியதின் பேரில், நான் நேற்றைய தினம் அவையில் வாய்மொழியாக அந்தப் பத்திரிகைகள் மீது உரிமை மீறல் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை வலியுறுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நேற்று நான் எழுதிக் கொடுத்த உரிமைப் பிரச்சினைக்கான கடிதத்தில் கூட, இந்தப் பத்திரிகைகள் மீது உரிமை மீறல் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளவில்லை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உரிமைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியின் சார்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, அவைக்கு வெளியிலே பேசியதற்கு அவையிலே உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்படுவது சரியல்ல என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் அவையிலே உறுப்பினராகவே இல்லாத முரசொலி செல்வம் ஏட்டிலே எழுதியதற்காகவே அவர் மீது உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்பட்டு, உரிமைக் குழுவிலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்த அவை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தண்டிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அது மாத்திரமல்ல, கடந்த ஆட்சியில் முதலமைச்சர் கருணாநிதி மீது முரசொலியிலே எழுதியதற்காகவும், பேசியதற்காகவும் பல உரிமைப் பிரச்சினைகள் அவர் மீது கொண்டு வரப்பட்டுள்ளன.
அப்போதெல்லாம் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக உறுப்பினர்கள் அது குறித்து கருத்துக்களைக் கூறவே அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் நேற்றைய தினம் இங்கே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.
2005ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி மீது ஒரு உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்பட்டபோது, அன்றைய முதல்வர், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா என்ன கூறினார் தெரியுமா
'இந்த அவையின் உறுப்பினராக இருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏதாவது கருத்து தெரிவிப்பதாக இருந்தால், இந்த அவைக்கு வந்து தெரிவிக்க வேண்டுமே தவிர, அவைக்கு வெளியே தெரிவிப்பது, அவதூறாக கருத்து தெரிவிப்பது உரிமை மீறல் என்ற பிரச்சினையைத் தான் இங்கே கொண்டு வருகிறார்கள்' என்றார்.
ஜெயலலிதாவின் அந்தக் கருத்து ஏற்கப்பட்டு, உரிமைப் பிரச்சினைகள் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது போலவே, இப்போதும் நான் அளித்துள்ள உரிமைப் பிரச்சினையும் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு விடையாக அளித்திட விரும்புகிறேன் என்றார் ஸ்டாலின்.